Monday, November 09, 2015

'கலாசுரபி' யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர்

'கலாசுரபி'
யாழ்ப்பாண தேசிய  கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர் 
ஆய்வுரை  21-08-2008

குறித்த ஒரு நோக்கத்தை அல்லது பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பே நிறுவனம் எனப்படுகின்றது. நிறுவனங்களிடமிருந்து பின்வரும் வழிமுறைகளினடிப்படையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.. நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், நிறுவனத்திற்குள்ளே இயங்கும் நூலகங்கள் போன்ற சேவை அமைப்புகள் மற்றும் உள்ளக அறிக்கைகள், நிறுவனத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகள். வேண்டுகோளின் அடிப்படையில் நிறுவனத்தினால் வழங்கப்படும் வசதிகள் (எ-டு. உபகரணங்களை வாடகைக்கு விடுதல்)

பாடசாலைகள், கல்லூரிகள், தொழினுட்பக் கல்லூரிகள், பல்தொழினுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்வியியில் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் போன்றவை இதற்குள் உள்ளடங்கும். தொழில் நுணுக்கங்கள், உபகரணப் பாவனை தொடர்பான நிபணத்துவ ஆலோசனையை பெறுதல், மிகவும் முன்னேற்றகரமான, ஆழமான பொருட்துறைகள் தொடர்பான தகவலை வழங்குதல்., குறிப்பிட்ட துறை சார்ந்த மிக அண்மைக் கால கல்விசார் ஆய்வுகளின் விபரங்களை வழங்குதல்., ஒப்பந்தப் பணிகள் அல்லது கிடைக்கக்கூடிய வசதிகள் மூலம் தகவலை வழங்குதல், நூலக சேவைகளை வழங்குதல் இவற்றின் பயன்பாடாகும்.

நிறுவன வெளியீடுகள் பொதுவில் முழுக்க முழுக்க ஆழமான பொருட்துறை சார்ந்த ஆய்வுகளின் விபரங்களை அல்லது புலமைத்துவ தகவல்களை வழங்குகின்ற துழரசயெட என ஆங்கிலததில் குறிப்படப்படும் பொருளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுப் பருவ இதழாகவோ அல்லது நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பருவரீதியாக அதாவது மாத ரீதியாகவோ அல்லது காலாண்டு ரீதியாகவோ தாங்கிவரும் செய்திக் கடிதங்களாகவோ அதுவுமன்றி இது நூல் வடிவிலோ அல்லது பருவ இதழ் ஒன்றில் கட்டுரை வடிவிலோ அதுவுமன்றி கையெழுத்துப் பிரதி வடிவிலோ இருக்கக்கூடிய நிறுவனத்தின்  சந்திப்புகள் அல்லது கூட்டங்களின் அறிக்கையாகவோ அல்லது சுருக்கமாகவோ வழங்கப்படுகின்ற அல்லது படிக்கப்படுகின்ற கட்டுரைகளின் வெளியிடப்பட்ட பதிவேடு எனச் சொல்லப்படும் மாநாட்டுக் குறிப்பேடாகவோ அதுவுமன்றி  நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம்.

வெளி உடல், உள்ளுறுப்புகள், ஆத்மா என மனிதனது உடலமைப்பை வகைப்படுத்துவது போன்று  உருவம், உள்ளடக்கம், உட்பொருள்; என்ற மூன்று கூறுகளும் இணைந்ததே சிந்தனைப் பதிவேடு  என்ற கோட்பாட்டுக்கு அமைய இப் பதிவேடுகளை அவற்றின் உருவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தேவை, தகவல் வெளிப்படுத்தப்படும் விதம், தகவல் பெறும் முறை, ஒழுங்கமைப்பு ஆகிய பின்வரும் ஒன்பது அம்சங்களின் அடிப்படையில்  வகைப்படுத்துவது பொருத்தமானது.

உருவமைப்பின் அடிப்படையில் இவை உபகரணத் தேவையற்ற ஒரு ஊடகம் என்ற பார்க்கப்படுகின்றது. கைத்தொழிலை பிரதான தொழிலாகவும் இயந்திரத்தை பிரதான மூலவளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகத்தின் பிரதான பதிவுகளாக நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்கள் போன்ற அச்சுப் பதிவுகள் கருதப்படுகின்றன. தாள்களின் கண்டுபிடிப்பும் தொழினுட்ப வளர்ச்சியும் இணைந்து மிகப் பெருந்தொகையான நூல்கள் பருவஇதழ்களை  உற்பத்தி செய்யும் சமூகமாக கைத்தொழில் சமூகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்துறைத் தகவல்களும் சுரக்கும்  என்ற பொருளைத் தருகின்ற பெயர் கொண்ட வெளியீடு, கலாசுரபி என்ற இந்த வெளியீடு ஒரு கல்விசார் நிறுவனத்தின் ஆண்டு மலர் என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்ற ஒரு தொடர் வெளியீடு. ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக, பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் தொடர் வெளியீடுகள் எனப்படும். செய்தித்தாள்கள், பருவஇதழ்கள், வருடாந்த வெளியீடுகள், தொடர் நூல்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள், நிறுவன வெளியீடுகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

 '20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும் 
என்ற லிக்லைடர் என்ற அறிஞரின் கூற்றும்,

அன்றும் இருந்தேன்,  இன்றும் இருக்கின்றேன், என்றுமிருப்பேன் எங்குமிருப்பேன் கந்தலுமாவேன் கனகமும் கொள்வேன் வந்தனை செய்வார் வசமாய் விடு வேன் 
என்ற தில்லைநாயகம் அவர்களின் கூற்றும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லாத நூலுருச் சாதனமான இது உள்ளது..

கல்லில் தொடங்கி காலப் போக்கில் களிமண் கட்டியில் கருத்துக்கள் ஈந்தேன்
பப்பிரசுத் தாளில் பன்னாள் வாழ்ந்தேன்,
தோலாம் தாளிலும் துவண்டு இருந்தேன்
மெழுகாம் ஏட்டிலும் மெதுவாய்த் தவழ்ந்தேன்
ஓலையை மட்டும் விட்டேனா நான்?
எல்லாம் படிக்க எழிலார் தாளிலும் உருவம் கொண்டேன்
அறிவியலோட்ட அணைப்புச் சிறப்பால் மைக்ரோ உருவிலும் மறைந்து நிற்கின்றேன். என்னும் வே. தில்லைநாயகம்,

கருத்தினில் பிறந்து மக்கள் காதினில் தவழ்ந்து தாளிக்
குருத்தினில் வளர்ந்து தோலில் குன்றினில் துள்ளியோடி
அருங்கலை அள்ளி அள்ளி அளிக்கின்ற வள்ளலாகி
விருந்தூட்டுகின்றாய் இன்று வெள்ளைத்தாள் கோட்டைக்குள்ளே என்று எழிலோவியத்தில் தீட்டும் வாணிதாசன்

உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்த மலரானது முதல்நிலைத் தகவல் வளமாக அல்லது அடிப்படைத் தகவல் வளமாகக் கருதப்படத்தக்கது. உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் எனப்படுகிறது. மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ் வளங்கள் புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல், ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல், புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் என்ற வடிவில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல்நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது.

முதல்நிலைத் தகவல் வளங்களில் முதல்நிலையில் வைத்து எண்ணப்படுவது பருவ இதழ்கள். நூல் உருவாக்க முயற்சிக்கு காலம் அதிகம் தேவைப்படும் என்பதனால் ஆய்வு முயற்சிகள் தொடர் வெளியீடுகளைக் களமாகக் கொண்டு அவ்வப்பபோது வெளிவருவதற்கு ஏதுவாக பருவ இதழ்களின் வெளியீடு அமைகின்றது.

ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது தொடர் வெளியீடுகளில் பருவ இதழ்களே  வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் உள்ளுர் சார்ந்த முக்கிய வளமாக இயங்குகின்றன. பருவ இதழ்களை வார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் என  கால அடிப்படையில் வகைப்படுத்தின் இது ஒரு ஆண்டிதழ். பொதுவாக ஏனைய நிறுவனங்களைவிட கல்வி சார்ந்த நிறுவனங்களே ஆண்டிதழ் உற்பத்தியில் அதிகம் ஈடுபடுகின்றன. கலாசுரபியின் முதலாவது இதழ் தேசிய கல்வியியில் கல்லூரியின் முதலாவது ஆண்டு நிறைவை யொட்டி வெளியிடப்பட்ட மலராகத் தோற்றம் பெற்று பின்னர் நிறுவனத்தின் ஆண்டு வெளியீடாக மாறியதா அல்லது ஒவ்வொரு வருடமும் ஆண்டு நினைவுப் பூர்த்திக்காக வெளியிடப்படும் ஒன்றாக உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.
ஆண்டு மலர்கள்  தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களது கட்டுரைகளையும் உள்ளடக்கி யிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருத்தல், தனது ஆய்வு முயற்சி ஒன்று அந்த ஆய்வுத்துறை சார்ந்த பருவ இதழ்களில் வெளியிடப்பட்டால் தான் அதற்கு மதிப்பு உண்டு என்ற கருத்துநிலை கட்டுரையாசிரியருக்கு இல்லாதிருத்தல், தத்தமது துறைசார்ந்த செயற்பாடுகளைப் பட்டியற் படுத்துவதிலும் பார்க்க சமூகத்தின் மதிப்பு மிக்க அறிஞர்களின் ஆக்கங்கள் தமது சிறப்பு மலரில் வருவது தான் தமக்குச் சிறப்பு என்ற கருத்துநிலையில் சிறப்பு மலர்களின் வெளியீட்டாளர் விடாப்பிடியாக இருத்தல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமான அளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய சிறப்புமலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவற்றைத் துறை சார்ந்தவை என ஒதுக்கிவிடுவது பயன்பாட்டு நோக்கில் பாதகமானது. எடுத்துக்காட்டாக பாடசாலை ஒன்றின் சிறப்புமலர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல்  செயற்பாடுகளைத் தான் பேசும் என்று அதனை ஒதுக்கிவிடமுடியாது. அதில் பட்டப்பின்படிப்புக்கு உதவக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளே அதிகம் காணப்படும்.  எனவே இவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வளமாக நூலகத்துறையால் இனங்காணப்பட்டிருக்கின்றன.

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்போர்க்கின்மை, நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருளை முறையும் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை, சிறந்த பொருளுடைத்தாதல், விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல் என நூல் அழகுகள் பத்து' என கூறுகின்றது எமது பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம். (தொல்காப்பியம் பொருள் 665)

நூல் குற்றங்கள்: கூறியது கூறல், மாறுபட்டுக் கூறல், குறைபடக் கூறல், மிகைப்படக் கூறல், பொருளில்லாமல் கூறல், மயங்கக் கூறல், இனிமையில்லாதன கூறல், இழி சொற்களால் புனைந்து கூறல், ஆதாரமின்றி தானே ஒரு பொருளைப் படைத்துக் கூறல், எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல் பொருள் (663)

அடிப்படையில் ஒரு தகவல் வளமானது வாசகனுக்கு ஒட்டு மொத்தமாக எதைச் சொல்ல விழைகின்றது என்பதன் அடிப்படையில் இவற்றைப் புத்துயிர் தருபவை தகவலைத் தருபவை உயிர்ப்பூட்டுபவை என மூவகைப்படுத்தலாம். அந்த வகையில் கலாசுரபி என்ற இந்த மலர் தகவலைத் தரும் நூல் வகைக்குள் உள்ளடங்குகின்றது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் வளங்கள் எனப்படும். குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் சார்ந்த தகவல் வளங்கள்;, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்கள் , ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படைத் தகவல் வளங்கள், தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணைத் தகவல் வளங்கள் இவ்வகைக்குள் அடங்கும்

கல்வி என்பது கற்றல் கற்பித்தல் பற்றிய தெளிவான இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளச்க்கவோ வழங்கவோ முடியாது. பாடசாலைகளில் அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறை கல்வி எனப்படுகின்றது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. (ழுஒகழசன னiஉவழையெசல) கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றொம்..  இதிலிருந்து தெரியவருவது அறிவு என்பது முடிவுப் பொருள் கல்வி  என்பது முதற் பொருள்.
மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது. இந்த வகையில் மாணவர்களைவ வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்காகப் பண்படுத்தும் பெரும் பணியை ஏற்றிருக்கும் இந்தக் கல்லூரியின் ஒரு வெளியீடு உயிர்ப்பு உள்ளதாக மாறவேண்டும் அதற்குஉழைப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும்.


No comments: