Monday, November 09, 2015

நூலகர் நூலகர் என்கின்றீர் நுவலும் நூலகர் யாரையா ?

நூலகர் நூலகர் என்கின்றீர் 
நுவலும் நூலகர் யாரையா ?


இந்திய நூலகவியல் அறிஞர் திரு.வே. தில்லநாயகம் அவர்களின் மேற் சொல்லப்பட்ட கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கக் கூடிய ஒருவரை அறிவாலயம் சிறப்பு மலரை அலங்கரிப்பதற்குத் தேட மனது தீர்மானித்து,  தேடிப் பலனேதுமற்றுக், களைத்து,  வெறுமையில் முடிவுறத் தயாரானபோது மனதில் ஏற்பட்ட திடீர் ஒளிக்கீற்றில் வியாபித்து நின்றவர்  திரு.ஆ. சபாரத்தினம் அவர்கள். ஆசிரியத் தொழிலில் நெடுங்காலம் நிலைத்திருந்து ஓய்வு பெற்ற இவருக்கும் நூலகத் தொழிலுக்கும் என்ன தொடர்பு?

15 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் நூலகத் தொழிலுக்குள் நான் நுழைந்த காலத்தில் நூல் அடுக்குகளினூடே குடுகுடுவென ஓடித் திரியும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். நூலகத்தின் உண்மையான வாசகர் யார், இடையிடையே எட்டிப் பார்க்கும் வாசகர் யார் என்ற தேடலில் முனைப்புற்றிருந்த அந்தக் காலத்தில் நுலகத்தில் என் கண்ணில் அடிக்கடி பட்ட ஓரிருவரில்; திரு.ஆ. சபாரத்தினம் ஒருவர்.  இவர் தொடர்பான வெறும் அவதானிப்புத் தேடலாக முனைப்புப் பெற்றதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே காண்பவர் அனைவரிடமும்  இவரைப் பற்றிய தகவலைத் தேடுவதில் கவனம் சென்றது. அதிருஷ்டவசமாக எனக்குக் கீழ் சிறிது காலம் பயிலுனராகப் பணிபுரிந்த அவரது பேர்த்தி முறையானவரின்; உதவியுடன் நான் பெற்றுக் கொண்டவை இவை.

'நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைவ ஆசாரமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். அரிவரி வாத்தியாராக ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கி 33 வருடங்கள் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றாசிரியராகத் தொடர்ந்திருந்து அதிபராக உயர்ந்து ஓய்வு பெற்றவர்;. வரலாறு, சமயம் போன்ற துறைகளில் புத்தகம் எழுதுபவர். தான் வாசித்து மற்றவர்களுக்கும் கொடுப்பது மட்டுமன்றி மற்றவர்கள் கேட்கும் புத்தகங்கள் எங்கிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் பண்பு கொண்டவர். சிறு பிள்ளை என்றாலும் கூட மதித்து, அந்தஸ்து பேதமின்றி அனைவருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர். புத்தகங்களுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டவார். புத்தகம் இன்றிச் சபாரத்தினம் இல்லை.'

உண்மை தான்! எமது சமூகத்தில் நூலகம் பற்றியும் நூலகத்தின் உண்மையான வாசகர் பற்றியும் பேச விழையும் எவரும்:
'எந்த நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்;; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் புலமையுடையவர்; லத்தீன் மொழியில் ஓரளவு பரீச்சயம் உடையவர்; சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்து கலை, இலக்கியம் வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற  துறைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்; காந்தியச் சிந்தனைகளிலும் அகிம்சையிலும் நம்பிக்கையுடையவர்; சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டுபவர்;; தீண்டாமையைச் சிறு வயதிலிருந்தே எதிர்த்தது மட்டுமன்றிச் சாதி பேதம் இன்றி எல்லா மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்து இலவசக் கல்வி வழங்கியவர்'

என்றெல்லாம் போற்றப்படும் இவரை மறந்து விட்டுப் பேசமுடியாது. இத்தகைய பெருமைகளைச் சுமந்து கொண்டும் 'தலைப்பாரமின்றித';; திரியும் வல்லமை பெற்ற இந்த அறிஞர் 76 அகவையைக் கடந்த பின்னரும் எறும்பு போல் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தும், நடந்தும், படுத்தும், என்றும் புத்தகமும் கையுமாக நம்மிடையே  உலா வருபவர்;.

இவரை நூலகத்தின் ஒழுங்கான  வாசகராக மட்டும் பார்த்த மனம் சற்று முன்னேறி எழுதுவதற்காக வாசிப்பவரா? வாசிப்பதால் எழுதுகின்றாரா? என்ற  ஆய்வுக்கு இட்டுச்  சென்றமைக்கு இன்னொரு காரணம் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவருடன் இவரை எந்நேரமும் காணக்கூடியதாக இருந்தமையே.  இவர் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று அறியும் ஆவலில் அச்சு வடித் தகவலை நோக்கி தேடல் மீண்டும் தொடர்ந்தது.

'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன்;,  நுண்மாண் நுழைபுலமுடையோன்; வையத்துள்; வாழ்வாங்கு வாழ்வோன், நடமாடும் பல்கலைக்கழகம் என்றெல்லாம் கூறக்கூடிய ஒருவர் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவர் கரம்பனூர் திரு ஆ. சபாரத்தினம் அவர்களே. இவர் மேடையில் ஏறிப்  பிரசங்கம் செய்வதில்லை. ஆனால் வாழ்ந்து காட்டுவதன் மூலமே சமுதாயத்தைத் திருத்தலாம்  என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் போன்றவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருக்க முடியும்'

என்கின்றார் இவரின் மாணவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான திரு காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

'சிறு வயதில் இவர் சிறந்ததோர் பேச்சாளர்,  பேச்சால் அனைவரையும் கவர்ந்து  தனக்கென ஒரு தனித்துவமான கூட்டத்தை வைத்திருந்தார். எந்நேரமும் புத்தகமும் கையுமாகக் காணப்படும் இவர் சிறந்ததொரு நாடக அறிஞராகவும் அறியப்படுகின்றார்'

என்கிறார்  இவரின் நண்பரும் இலக்கிய வட்டத் தலைவருமான த. பரமானந்தம் அவர்கள்.

'இனிமையானவர், அமைதியான சுபாவமுடையவர், மரபு இலக்கியத்தில் மட்டுமன்றி நவீன இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்றவர், மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் இவருக்கு நன்றாகவே உண்டு என்பதை மல்லிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் நிருபிக்கின்றன'

என்கிறார் இவருக்குக் 'காவல் நகரோன்'; எனப் புனை பெயரிட்ட  இன்னொரு நடமாடும் நூலகமான திரு ஏ.ஜே. கனகரட்னா அவர்கள்.

'1958ம் ஆண்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் இலங்கை வரலாறு, உலக வரலாறு, வரலாற்றில் இலக்கியம் சமயம், அரசியல், அறிவியல் எனப் பல விடயங்களைக் கற்பித்தவர் இவர். இவரின் மூலமாகத்தான் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், அரவிந்தர், தாகூர் போன்று மேலும் பலரை அறிந்து கொண்டேன். நூலகத்தில் புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இவரே'

என்கின்றார் இவரது இன்னோர் மாணவரும் நவீன சிந்தைகளைக் கொண்டவர் என அறியப்படுபவருமான  திரு ஜீவகாருண்யம்.

';என் இனிய நண்பரான ஆசிரியரும் நூலகருமான திரு சபாரட்னம் அவர்களுக்கு அந்த மறக்க முடியாத சில அனுபவங்களுக்காக  நன்றி செலுத்த விரும்புகின்றேன். மிகக் கடினமான சூழலில் கூட எனக்கு உதவ அவர் பின் நின்றதில்லை. போர்க் காலச் சூழல் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தும் ஒரு துவிச் சக்கர வண்டியில் நாம் இருவரும் அனைத்தையும் சாதித்தோம். எம்மைச் சுற்றி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கும்போது  அவர் மிர்சியா இலியாட்சின் ஆக்கம் தொடர்பாக தனது மதிப்பீட்டை வழங்கிக் கொண்டிருந்தார்.  எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த உதாரணத்தின் முலம் சைவத்தின் மிகச் சிறந்த அம்சங்களை எனக்கு உணர்த்தினார். அவற்றை அவர் தமது நீண்ட வாழ்க்கையினூடாக தம் உள்ளத்தில் ஒன்றிணைத்திருக்கின்றார்'

2002ல் உப்சாலாவில் வெளிவந்த 'குடியேற்ற காலத்துக்கு முற்பட்ட தமிழகத்திலும் ஈழத்திலும் பௌத்தம்'. என்ற நூலின் முகவுரையில் மேற் கண்டவாறு குறிப்பிடுகின்றார் உப்சாலாப் பல்கலைக் கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள்.

'அவர் ஒரு குடத்திலிட்ட விளக்கு, சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு ஊரறியாப் பேரறிஞர். தமது ஆத்ம திருப்திக்காகக் கற்று இலைமறை காயாக வாழும் ஒரு சில அறிஞர்களுள் சபாரத்தினமும் ஒருவர்'

என்கிறார் யாழ் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரான  திரு சுசீந்திரராசா அவர்கள்.

அறிஞர் என்பதை அப்பட்டமாகக் காட்டிய ஊடகங்கள் அறிஞரானதற்கான அடித்தளத்தை மட்டும் காட்டாமல் விட்டது ஏன் என்று மனதிற்குள் எழுந்த  வினா  இவரிடம் நேரடியாகவே அணுகும் தூண்டலை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில்


 'சிறு வயதிலிருந்து எனக்கு இருந்த வாசிப்புப் பழக்கமே என்னை மற்றவர்கள் அறியும் நிலைக்கு உயர்த்தியது. வெறும் கல்வித் தகைமை மட்டும் இருந்திருந்தால் நானும் ஆசிரியத் தொழிலுடன் என்னை மட்டுப்படுத்திக் கொண்டு சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பேன். வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடைத்த அரிய சொத்து என்றே எண்ணுகின்றேன்'.

வாசிப்புப் பழக்கத்துக்கு முதல் அடியிட்டவர் எனது தாய் தான். தன் பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்ட வேண்டும் என்ற அறிவியல் நோக்கில் அவர் எதையும் செய்யவில்லை. அவர் தன்னையறியாமலேயே செய்த மகத்தான பணி கதை சொல்லுதல். நாள்தோறும் கதை சொல்லும் அந்தப் பழக்கமே எனது வாசிப்புக்கு அடிகோலியது என்றே நான் நினைக்கின்றேன்.

கிராமத்தில் நான்காம் வகுப்புப் படிக்கும் போதே தட்டுத் தடங்கலின்றி விரைந்து வாசிப்பதைப் பார்த்த ஆசிரியர் வித்துவான். இ. பொன்னையா அவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுடைய 'பாண்டவர் லீலை' என்ற பாடநூலை என்னைக் கொண்டு வாசித்துக் காட்டுவார். அப்போதிருந்தே பொழுது போகாத நேரங்களில் வீட்டிலிருந்து இலங்கை நாவல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதுப்புது வெளியீடுகளான சுத்தானந்த பாரதியின் யோகசித்தி, திருமந்திர விளக்கம் போன்றவற்றை அவர் படிக்கும் போது நான் பின்புறமாக நின்று எட்டி எட்டிப் பார்ப்பேன். படிக்க விருப்பமா என்று கேட்பார். ஆம் என்று தலையாட்டுவேன். ஓரிரவு மட்டும் தான் தருவேன் என்பார். 300 பக்கம் என்றாலும் குப்பி விளக்கில் இரவிரவாகப் படித்து முடித்துவிட்டுக் கொடுத்து விடுவேன்.  ஆறாம் வகுப்பில் கணித பாட ஆசிரியர,; சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த இளிச்ச வாயன், ஏழை படும்பாடு போன்ற பிரெஞ்சு நாவல்களைத் தந்தார். வாசிக்கும் பழக்கம் கூடியது. ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பின்னர் கல்கி, கலைமகள் போன்றவற்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1944ல் நான் புனித அந்தோனியார் கல்லூரியில் 8ஆம் வகுப்புப் படித்த காலத்தில்  ஆங்கில இலக்கியம் படிப்பித்த ஆசிரியரான வி.அரசன் 'வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்கும், பேச்சு ஆயத்த நிலையில் வைத்திருக்கும், எழுத்து சரியாக நுட்பமாகச் சிந்திக்க வைக்கும்'என்ற பிரான்ஸிஸ் பேகனின் வாசகத்தைக் கத்திக் கத்திச் செவிகளில் திணித்துவிட்டார். பெரும்பாலும் எமது முதல் பாடவேளை ஒழுக்க அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பாடவேளையில் பெரிய பெரிய தொகுதிகளாக உள்ள சிறுவர் கலைக்களஞ்சியம், புக் ஒவ் நொலேட்ஜ் போன்றவற்றில் ஒவ்வொரு தொகுதியாகக் கொண்டு வந்து ஒரு பாட வேளைக்கு ஒரு விடயம் என்ற அடிப்படையில் எமக்கு ஒவ்வொன்றாக வாசித்து விளக்குவார். எத்தனை வேலைகளுக்கிடையிலும் படுக்கப் போகுமுன்னர் பத்து நிமிடமாவது ஒரு புத்தகம் வாசித்துவிட்டுப் படுக்க வேண்டும் என்பார்.

என்னுடன் படித்த நண்பர் திரு.இ.கிருஷ்ணபிள்ளை அவர்கள்  நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும், உண்டும், என்றும் புத்தகங்களுக்கிடையில் இருக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்துவார். இச் சூழலால் வாசிக்கும் பழக்கம் மேலும் கூடியது. ஒருவரிடம் நூல் இருந்தால் 5 மைல் தூரம் நடந்து போய் என்றாலும் இரவல் வாங்கிப் படிக்கும் அளவுக்குப் புத்தகத்தில் ஒரு வேட்கை உருவாகியது.

1947இல் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 20 கண்ணாடி அலுமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானம் கணிதம் போன்றவற்றைக் கண்ணாடிக்குள் பார்த்தும் பிறவற்றை கையிலெடுத்துப் பொருளடக்கத்தைப் பரிச்சயம் செய்தும் கொள்வேன். நான் படிக்காத பாடமானாலும் அவற்றில்; என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்குக் காட்டிக் கொடுக்குமளவிற்கு நினைவு கூர்மையாக இருந்தது.


 'தற்போதைய யாழ். மாநகரசபைப் பொது நூலகம் 1951ஆம் ஆண்டு முற்றவெளி நகர மண்டபத்துக்குக் கிழக்கே வாடி வீட்டுக்குத் தெற்கிலுள்ள கட்டடத்தின் மேல் மாடியில்  இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே அங்கத்தவராகச் சேர்ந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை இந்த நூலகத்தில் அங்கத்தவராக இருக்கின்றேன். 1960-64 இலண்டன் பேராதனைப் பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்குப் படிக்க இது உதவியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி போன்றோருக்குத் தேவையான கிடைத்தற்கரிய நூல்கள் கூட இங்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். ஐசக் தம்பையா, கு. வன்னியசிங்கம் போன்றோரின் நூற்றொகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1965இல் சரித்திர நூல்கள் எழுதும் போது சிறிதும் அனுபவமில்லாத எனக்கு இங்குள்ள நூல்களே கை கொடுத்துதவின. நூலகம் எரிந்தபோது வேறு எவரையும் விட அதிகம் கவலைப்பட்டவன் நான் தான்';. என்று இன்றும் அதே கவலையுணர்வுடன் கடந்த காலத்தை நினைவு கூருகின்றார் இவ்வறிஞர்.


தனது பழைய மதிப்பைக் கணிசமாக இழந்து விட்டபோதும் கணினி போன்ற நவீன துறை சார்ந்த புதிய நூல்கள் மட்டுமன்றி சிறந்த கலை நூல்களையும் கொண்டிருக்கின்றது யாழ்.மாநகரசபைப் பொது நூலகம். வரலாற்றுத்துறை சார்ந்த முக்கிய புத்தகங்களை கொண்டிருக்கின்றது யாழ். பல்கலைக்கழக நூலகம். என தனது கருத்தைக்; கூறுகின்றார்


வாசிப்புப் பழக்கம் ஒன்றில் வீட்டிலிருந்து அல்லது படிப்பிக்கும் ஆசிரியரிடமிருந்து தான் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும். நடைமுறையில் வாசிப்புப் பழக்கத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமலேயே தனது படிப்பை முடித்துவிட்டு பெற்றோராகவோ அல்லது ஆசிரியராகவோ மாறும் பண்பு இச் சமூகத்தில் இருக்கும் வரை இந்த பலவீனம் தொடர்ந்து நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.

இருபதாவது வயதிலேயே தன்னுடன் கூடப் படித்தவர்களால் ஏழசயஉழைரள சநயனநச எனப் புகழப்படுமளவிற்குத் தீவிர வாசிப்புக்காரராக இருக்கும் இவர் வாசகர் மட்டுமல்லர். இவரது நடவடிக்கைகளை மிகக் கூர்ந்து அவதானிக்கும் எவரும் மற்ற எல்லாத் தொழில்களையும் விட நூலகத் தொழில் இவருக்கு மிகப் பொருத்தமானது என்று அறுதியிட்டுக் கூறுமளவிற்கு நூலகரால் கூடச் செய்ய முடியாத எத்தனையோ உதவிகளை இவரிடமிருந்து பெற்ற பெரியவர்கள் மிக அதிகம். தனக்குத் தேவைப்படும் நூல்களை விடப் பிறருக்குத் தேவைப்படும் நூல்களைத் தேடி அலையும் பண்பு தான் இவரிடம் அதிகம். 74 அகவையைத் தாண்டிய பின்னரும் கூட எறும்பு போன்று மிகவும் சுறுசுறுப்பாக நூலக இறாக்கைகளுக்குள் நூல் தேடித் திரியும் இவரைப் பார்த்தால் புரியும்இ இவர் தேடும் நூல்களில் பெரும்பாலானவை இவருக்கு வேண்டிய எவரினதோ அறிவுத் தேடலுக்கு உதவப்போகின்றன என்று. சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் சார்க் அவர்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான நூல்களை எங்கிருந்தாலும் தேடி எடுத்து உதவுவதில் முன்னிற்பவர் இவர் என்பது இன்று நாம் நேரே கண்டுணரும் ஒன்று. நல்லதோர் வாசிப்புப் பழக்கமே நல்லதொரு நூலகராகவும் இயங்கும் ஆற்றலைக் கொடுத்திருக்கின்றது.

உங்களின் இறுதி இலட்சியம் எது வென வினவியபோது பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற 700 பக்க நூலுக்கு குறிப்பு விளக்கம் எழுதி அதை வெளியிடுவதே தனது பெருவிருப்பம் என்கின்றார்.

நூலகத் துறை சார்ந்த இவரது பங்கு அளப்பரியது. மாணவப் பருவத்திலேயே நாரந்தனை இளைஞர் சங்கத்தை அமைத்து 23 சஞ்சிகைகளை இந்தியாவிலிருந்து தருவித்து வாசிகசாலை ஒன்றைப் பத்து ஆண்டுகள் வரை நடத்தியவர். கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையங்கள் போன்றவற்றுக்கு கணிசமான பங்களிப்பு வழங்கியவர்.

யாழ்ப்பாணப் பொதுநூலகராக இருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதனிடமும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூலகராக இருந்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக இருந்த திரு.ஆர். தம்பையாவிடமும் நூலகவிஞ்ஞானம் படித்திருக்கிறார்;. அக்காலத்தில் பரீட்சைக்கு  தோற்றிய 17 பேரில் தாம் மட்டுமே சித்தியடைந்ததாகக் கூறுகிறார். கீழைத்தேச நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். இரங்கநாதன் யாழ். பொது நூலகத்தின் வடிவமைப்புத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் பொருட்டு இங்கு வந்திருந்தபோது அவரை  நேரில் சந்தித்து உரையாடி தான் பிறந்த மண்ணுக்கே அழைத்துச் சென்று அங்கு  அனைவருக்கும் ஒரு விரிவுரையையும் ஒழுங்குபடுத்தி மூன்று மணி நேரம் அவருடன் கழித்ததையும் அவரின் அறிவை நினைத்துத் தான் பிரமித்ததையும் பெருமையுடன் நினைவு கூறுகின்றார்.

சுவீடன் உப்சாலாப் பல்கலைக்கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறையில் மூன்று மாதம் தங்கியிருந்து பேராசிரியரின் தொகுப்புக்களைச் சுவீடன் முறையிலான நூலக விஞ்ஞான முறையிலான பகுப்பாக்க முறையில் ஒழுங்குபடுத்தியவர். நூலகத் துறை சார்ந்து இவர் ஆற்றிய மாபெரும் பணியாக நாம் கருதக் கூடியது யாழ்ப்பாணத்தில் வெளி வந்த சமயம் சம்பந்தமான நூல்கள், கட்டுரைகள் போன்றவை தொடர்பாக இவர் தொகுத்த 150க்கும் மேற்பட்ட ஆக்கங்களுக்கான குறிப்புதவு நூல் விபரப் பட்டியலாகும். 1986ல் இவரால் தொடங்கப்பட்ட இப் பணியானது தற்போது தான் அச்சுருப் பெறுவதற்கான ஆயத்த நிலையில் இருக்கின்றது. இதைத் தொகுப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், யாழ். பல்கலைக் கழக நூலகம் மட்டுமன்றி தனிப்பட்டவர்களது வீட்டில் வைத்துப் பேணப்படும் நூல்களும் பயன்படுத்தப்பட்டாக இவர் சொல்கின்றார்.

நடமாடும் இந்த நூலகம் ஒரு நூலகத்தையே நிர்வகிக்கும்; வாய்ப்பு இல்லாது போனது இந்தச் சமூகத்தின் இழப்பு என்பது நிதர்சனமான உண்மை.

No comments: