Saturday, August 13, 2011

சிலைகளும் சிற்பிகளும்





'உலா'

அம்மாவின் மடியில் தலையும் சீமெந்து நிலத்தில் உடலுமாக கால்மேல் கால் போட்டுக் கொண்டு பெரிய மனிசத்தனத்துடன் புத்தகம் படிப்பதில் தான் அந்த 6 வயதுப் பாலகனுக்கு எத்தனை விருப்பம். முறுக்;கு மீசையும் முரட்டுத் தோற்றமுமாய், நெருங்கவே அச்சமூட்டும் மாமன் திடீரென அவனைப் பார்த்து 'நாளைக்கு மாரியம்மன் கோவில் தேருக்கு போவமா? எனக் கேட்ட போது அவனுக்கு ஏற்படும் அதிர்ச்சி, ஆச்சரியம், பின் குதூகலம்.....

தேருக்குப் போகும் தனது குதூகலத்;தை தனக்கு தெரிந்தவர் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் மாமாவின் மகன் ஸ்ரீக்கு கூற அவன் நம்பாத போது மனஞ் சோர்ந்து-----
காதும் கண்ணும் மங்கிப் போன பெத்தாச்சிக்கு புரிய வைக்க முயன்று ஏற்பட்ட தோல்வியில் மனம் அலுத்து-------
ரதி அக்காவிடம் சொல்லி அவளின் முத்தத்தையும், 5 ரூபா காசையும் பெற்ற போது குதூகலித்து--------
யோகு அன்ரியிடம் சொல்லப் போய் அவளும் மாமாவும் பட்டப்பகலில் கட்டிலில் கிடந்த அலங்கோலத்தைப் பார்த்து மனம் வெறுத்து------
இறுதியில் தயா மச்சாளுக்குச் சொல்லி மூவரும் இருந்து அடுத்த நாள் உடுத்தப் போகும் உடை பற்றி அலசி, உண்டியல் காசை மாறி மாறி எண்ணிப் பார்த்து கோவிலில் பார்க்கப் போவதையும் வாங்கப் போவதையும் அட்டவணைப்படு;த்தி---

அந்த ஒரு பொழுதுக்குள் அந்தக் குழந்தை மனசுக்குள் தான் எத்தனை ஆசைகள், ஏக்கங்கள், கனவுகள், உணர்வு மாற்றங்கள்... நெஞ்சம் நிறைந்த கனவுகளுடன் சாமி உலா பார்க்கக் கிளம்பிய அந்தப் பிஞ்சுகளின்
றோட்டுப் புதினங்களை அறியும் ஆவல்---
தீர்த்தக் கேணியில் கால் நனைக்கும் ஆசை----
தேரை சுற்றிப் பார்க்கவும் தேரின் அழகைப் பக்கத்தில் நெருங்கி நின்று பார்க்கவுமான உந்துதல்------
கோபுர வாசலின் படியைத் தொட்டு, கண்ணில் ஒற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த்துச் சிரித்து, செல்லக் கதை பேசி, சந்தோசமாக உள்ளே போகும் கனவு------
அனைத்துமே மாமனின் ஒர் அதட்டலில், கனல் தெறிக்கும் பார்வையில் முரட்டுத்தனமாக, அநியாயமாகச் சிதைக்கப்பட்ட போது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் கருக்கொள்ளும் வெறுப்பு, வன்மம், ஏக்கம்---- பெரியவனாக வந்து இவரை இந்த மாமாவை நெஞ்சிலை ஏறியிருந்து கழுத்தை நெரித்து மூச்சுத் திணற----
கனவுகள் நொருங்கிய போது குரூரமாகக் காயப்பட்ட அந்த மனத்தின் உள்ளே கொப்பளித்த உணர்ச்சிப் பிழம்புகள் தனக்கென ஒரு வடிகாலைத் தேடவே செய்தன. உடனுக்குடன் உணர்வுகளை அடக்கிவைத்து சமயம் பார்த்து பழிதீர்க்க நினைக்குமாயின் அது குழந்தையல்லவே –

வாகனங்களுடன் வாகனமாக தம்மை இருத்திவிட்ட மாமனை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற வன்மம்,  வாகன சாலையில் இருந்த யோகு அன்ரியை நினைப்பூட்டிக் கொண்டிருந்த 'காராம் பசு' வின் மீது 'ஒண்டுக்கு' இருக்க வைக்கிறது.
மாமா வாங்கிக் கொடுத்த கடலைப் பொட்டலத்தை அவர் காணாத சமயம் தூர வீசி எறியச் செய்கிறது.
மாமனை நிமிர்ந்து நின்று விறைப்புடன் அம்மனை, கொடிமரத்தை, அபிஷேகத்தைப் பார்க்க வேணும் என்று அசட்டுத் துணிச்சலுடன் கேட்கவைத்து குட்டு வாங்கச் செய்கிறது.
தன்னைப் புறக்கணித்து தனது மகனை மட்டும் தோளில் தூக்கி சாமி காட்டிய போது இந்த வன்மம் கோபம் எல்லாம் வடிந்து மனம் ஒடுங்கி வெம்பி,  வீதி உலா, பச்சை சாத்தல், வசந்த மண்டப அபிஷேகம் பார்க்கும் கனவுகளும், ஒட்டுப்பொட்டு, அம்மம்மாக் குழல், சூப்புத்தடி வாங்கும் கனவுகளும் பொய்த்துப் போக ஆற்றாமையுடன் அடுத்த முறை அம்மாவுடன்  தான் வரவேணும்' என்று நினைத்துக் கொண்டு திரும்பச் செய்கிறது.

குழந்தை மனத்தின் மென்மையான உணர்வுகளை, அவற்றின் ஏற்ற இறக்கங்களை வெளிக்கொணரும் உத்வேகத்துடன் அவர்களின் அகஉலகிற்குள் பிரவேசித்து வெற்றிகரமாக 'உலா' வந்த திரு க. சட்டநாதன் 'கனக்க' எழுதாமல் கனதியாக எழுதி ஈழத்துக் கதை இலக்கிய உலகிற்கு உரமூட்டியவர்.


ஈழநாடு  1998

உங்கள் விடுதலை -----


உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு தான் விரும்பியதை அடைதல். இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து கள்ளர், பொய்யர், வஞ்சகர் போன்ற பலதரப்பட்ட மனித வர்க்கங்களைக் கடந்து நேரிய வழியில் நீதி, அன்பு, ஓழுக்கம் என்பவற்றைப் பின்பற்றி தனது இலக்கை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை திறமை நிதானம் என்ற மூன்று பண்புகளுமே. இந்தப் பண்புகளைப் பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அழகு அல்ல-- ஆளுமை என்ற அம்சமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால் உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் ---------

நிமிர்ந்த நடை, நேரிய பார்வை, அமைதியும் எளிமையும் இயைந்த தோற்றம், ஆழமான பேச்சு இவையே ஆளுமையின் வெளிப்பாடுகள். எமது தோற்றத்தினால், எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் எம்மைச் சூழ இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல்-- இது தான் மனித ஆளுமை. ஆறடி உயரத்திலும் துவண்டு, கூனிக் குழைந்து நடப்பதை விட ஐந்தடி உயரத்திலும் கம்பீரமாக நிற்க முனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றதாக இருப்பினும் தமது அறிவுபூர்வமான பேச்சால் அடுத்தவர் கவனத்தை தம்மீது திருப்ப முனைவது ஆளுமை. காலால் நிலத்தில் கோலம் வரைந்து கொண்டு அல்லது கண்கறை அங்குமிங்கும் அலைய விட்டுக் கொண்டு  எதிரிலிருப்பவரிடம்; கதை கேட்பது அல்லது கதை சொல்வது ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக்கிவிடுகின்றது. அழகுக்கும் ஆளுமைக்குமிடையிலான பேதத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது உங்கள் விடுதலைக்கான அடித்தளம் இடப்படுகின்றது. -------

பெண் என்பவள் போகத்துக்குரியவள் என்ற அசைக்க முடியாத கருத்துநிலை பள்ளிப் பக்கமே எட்டிப்பார்க்காத பாமரப் பெண்ணைவிட பட்டப்படிப்பை முடித்துப் பதவியிலிருக்கும் பெண்ணிடம் அதிகம் என்பது கசப்பான உண்மை. அறிவுக் கண் திறந்து அறிவுப் பாதையில் நடைபயிலத் தொடங்குபவள் கூட அழகுக் கவசங்களைக் கைவிட விரும்புவதில்லை. மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு அடிமையாகும் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு மட்டுமே அழகும் அலங்காரமும் ஆக்கிரமிக்க முடியும்.  அழகுப் பதுமைகளாக மட்டுமே இதுவரை உங்களைப் பார்த்துப் பழகிய கண்களை உங்கள் ஆளுமையால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்ற யதார்த்தம் எப்போது உங்களுக்கு உறைக்கின்றதோ அங்குதான் உங்கள் முன்னேற்றத்திற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பெறுகின்றன.

அறிவுக் கண்களால் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். ஒப்பீட்டளவில் நீங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும் இடமும் இதுவாகவே இருக்கின்றது. நாளைய சமூகத்தை வடிவமைக்கப்போகும் சிற்பிகளைத் தயார்படுத்தும் உன்னத இடம் வகுப்பறை. அறிவுக் கவசமிட்டு, ஆளுமையின் மூலம் கவர்ந்திழுத்து, தோற்றம், ஒழுக்கம், உயரிய செயற்பாடுகள் மூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களிடம் பதிய வைக்கும் உன்னதமான இடம். தனது குருவிடம் பக்தியும் மரியாதையும் கொள்வதற்கு தடையாக இருப்பவை கண்ணைப் பறிக்கும் ஆடையும், கழுத்து நிறைந்த ஆபரணங்களும் அமைதியைப் பறிக்கும் கொலுசுச் சத்தமுமே. வெள்ளைச் சீருடை, சீரான தலையலங்காரம், ஆபரணத் தடை என்று பிஞ்சு மனங்களில் புறத்தூய்மையை சட்டம் போட்டு ஏற்படுத்தும் நல்ல பண்பை வகுத்திருக்கும் நீங்களே உங்கள் கோலங்களால் அவர்களின் அகத்தை அழுக்காக்குகின்றீர்கள் என்ற யதார்த்தத்தை உணருங்காலம் எப்போது வருகின்றதோ அங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கற்களை நீங்களே எழுப்புகின்றீர்கள்.

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டுப் பரிணமிக்க வேண்டிய இடம் நிர்வாகப் பதவிகள். கம்பீரம் பொருந்திய காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடு பிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில், பெரிய நிறுவனத்தையே கட்டியிழுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. அழகு விம்பம் ஒன்று தனக்குச் சமமான வகையில் அல்லது தன்னைவிடவும் சிறந்த வகையில் கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச் சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு உங்கள் அகப் புறத் தோற்றங்கள் மாறவேண்டும். நகப்பூச்சின் தரம், ஆபரணங்களின் கன பரிமாணம், வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையம் என்பவற்றை ஆராயும் இடமாக வன்றி ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெறும் விருப்பம் உங்களிடம் எப்போது தலைதூக்குகின்றதோ அப்போது உங்கள் விடுதலை உங்கள் கண்ணெதிரில்.-----

புதிய உயிரொன்றின் உருவாக்கத்துக்கு வேண்டிய இரு அடிப்படை மூலப் பொருட்களும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தைச் சமைக்கும் மேலதிகப் பொறுப்பு கருப்பைக்கு மட்டுமே உரியது. கருவைச் சுமந்த இரண்டாவது மாதத்திலிருந்தே தாயின் உணர்வுகள் கருவைப் பாதிக்கின்றன என அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையானால் ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் கருவியே தான்  என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் உற்பத்திச் சக்தியே தான் என்ற கருத்துநிலைக்கு ணெ; மாறுதல் வேண்டும். நீங்களே விரும்பி ஆணுடன் இணைந்து குழந்தையும் பெற்றுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்ற முறைப்பாட்டுடன் அடுத்தவர் முன்னே போய் நிற்காது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்கத்  தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை எப்போது உருவாக்கிக் கொள்ளுகின்றீர்களோ அன்றே உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில்-----

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும் என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும் முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். 'உயிரைக் காக்கும்! உயிரினைச் சேர்த்திடும்! உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்! உயிரிலும் இந்தப் பெண்மை இனிது! எனவே பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் மாறவேண்டும் உங்கள் மனம் மாறவேண்டும். மனமாற்றம் மானுட விடுதலையை வென்றெடுக்கும் என்பது உண்மையானால்

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
08-03-2006

தமிழ்ச் சமூகத்தின் -------


தமிழ்ச் சமூகத்தின் இன்றைய கல்விநிலையும்  
பாடசாலை நூலகங்களின் வகிபாகமும்


[இன்றைய தகவல் யுகத்துடன் யுகத்துடன் இசைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடு சார்ந்து கொள்கை ரீதியாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் அது தனக்குரிய இலக்கை இதுவரை எய்தவில்லை என்றே கல்வியியலாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது என்பதற்கமையவும் எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையிலும்  கற்றல் கற்பித்தல் செயற்பாடு சார்ந்து பாடசாலை நூலகங்களின் வகிபாகம் தொடர்பாக கருத்தியல் ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமை கல்வி தனக்குரிய இலக்கை எய்தாமைக்குகுரிய காரணங்களில ஒன்று என்பதை வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது].


கல்வி
கல்வி -- சமூகரீதியில் நோக்கின் மனிதனை மனிதனாக வாழ வைப்பது. மனிதப்பண்புகளையும் மனித நேயத்தையும் உருவாக்குவது. பொருளாதார ரீதியில் நோக்கின் பயன் தரக்கூடியதும்  இலாபம் தரக்கூடியதுமான தனிநபர்-சமூக முதலீடு. சமூகத்தின் பொருளாதார வினைதிறனை அதிகரிக்கும் ஒரு காரணி. தேசங்களின் அபிவிருத்தி, கொள்கை, திட்டமிடல் ஆகியவற்றில் முதலிடம் பெறுவது. அரசியல் ரீதியில் நோக்கின் சர்வதேச வல்லரசுப் போட்டியில் முதலிடம் பெறுவது. தேசங்களின் பலத்தை அளவிட உதவிடும் கருவி. தலைமை தாங்குவதற்கு மட்டுமன்றி மனிதன் மாளாது வாழ்வதற்கும் அவசியமானது. கலாசார ரீதியில் நோக்கின் எண்ணங்களைப் பண்படுத்துவது. வாழ்நிலையைப் பண்படுத்துவது. 

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள்  கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார்  'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு' என்னும் திருககுறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே.

'கல்வியினாலே பெருந்தொகையான மக்கள் வாசிக்கக் கூடியவர்களாக விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர்' என்கிறார் ஜி.எம்.றெவெலியன். 'நான் உயிர் வாழ்வதற்காகக் கற்க மாட்டேன். ஆனால் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்புகிறேன்' என்கிறார் பிரான்சிஸ் பேக்கன். 'மக்களுடைய சிந்தனையில், மனப்பாங்கில், செயலில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மாற்றங்களை விளைவிக்கின்ற. செயற்பாடே கல்வி என விளம்புகிறார் நம்முடன் வாழும் சிற்பி அவர்கள்.


கல்வியின் நோக்கங்கள் 
கல்வியின் நோக்கங்களை குறுங்காலப் பயன்கள், நீண்டகாலப் பயன்கள், உடனடிப்பயன்கள் என மூவகைப்படுத்துகிறார் இந்திய கல்வியியல் சிந்தனையாளரில் ஒருவரான எஸ் சந்தானம் அவர்கள். ஓவ்வொரு மாணவனும் அன்றாடம் கற்கும் பாடங்களின் முடிவில் அவனிடம் எதிர்பார்க்கப்படுபவை உடனடிப்பயன்கள் எனவும், குறிப்பட்ட பாடம் ஒன்றை மாணவன் கற்பதனூடாக ஏற்படும் பயன்கள் குறுங்காலப் பயன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. குறுங்காலப் பயன்களே கல்வியின் குறிக்கோள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும்போது நீண்டகாலப் போக்கில் ஏற்படுபவை நீண்டகாலப் பயன்கள் எனப்படுகின்றன. இந்தப் பயன்கள் கல்வியின் நோக்கங்கள் எனப்படுகின்றன. இலங்கையில் கல்விக் கொள்கை காலத்துக்குக் காலம் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதுடன் 1943ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை காலத்துக்குக் காலம் ஒழுக்க நோக்கம், அறிவு நோக்கம், தொழில் நோக்கம், சமூக நோக்கம் ஓய்வு நோக்கம், இசைந்த வளர்ச்சி நோக்கம் என  புதிய புதிய நோக்கங்களை உள்ளடக்கியிருப்பதை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரவின் தலைமையில் 1943ல் உருவாக்கப்பட்ட விசேட கல்வி ஆணைக்குழுவினரின்  விதப்புரை ஜஅமர்வு அறிக்கை ஓஓஐஏ-1943ஸஇ 1972-76 காலப்பகுதியை உள்ளடக்கிய ஐந்தாண்டுத் திட்டம், 1979இன் கல்வி மீளாய்வுக்குழு அறிக்கை, 1981இன் கல்வி வெள்ளை அறிக்கை 1989இல் முன்மொழியப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை போன்றவற்றிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும். 
இதுவரை பின்பற்றப்பட்ட குறிக்கோள் மையக் கலைத்திட்டத்திலிருந்து மாறாக 2007ம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கலைத்திட்டம் முற்றுமுழுதாக அறிவு, மனப்பாங்குகள், திறன்கள் என்பவற்றை உள்ளடக்கிய தேர்ச்சி மையக் கல்வியாக அமையப்பெறவுள்ளது. ஜநவாஸ்தீன் 2006ஸ

கல்வி மட்டங்களும் நூலகப்பயன்பாடும்.

முன்பள்ளிக்கல்வி
மனிதவளர்ச்சிக் கட்டங்களின் அடிப்படையில் நோக்கின் குழந்தையிடம் நற்பழக்கங்களை உருவாக்கி உடல் உள வளர்ச்சிக்கு உதவுதல், எதிர்காலக் கல்விக்கும் பயனுள்ள வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துதல் போன்றன கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னம்பிக்கை, சமுதாய வாழ்வில் தனது பங்கையும்; உரிமைகளையும் உணர்தல், அழகுணர்ச்சி, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் என்பவற்றைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்', 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' போன்ற முதுமொழிகள் நமக்கு உணர்த்தி நிற்பதும் இதைத்தான். உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல், உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும்.
முன்பள்ளிப்பருவ கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது. (சந்திரசேகரம் 2006). முழுக்க முழுக்கப் பெற்றோரிலும் முன்பள்ளி ஆசிரியரிலும் தங்கியிருக்கும் இப்பருவத்தினரின் வளர்ச்சிக்காக வாசிக்கும்  நிர்ப்பந்தம் இவர்களுக்குண்டு.

ஆரம்பக் கல்வி

மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. எதிர்கால சமூகத்தைத் தாங்கக்கூடிய தூண்களாக வளர்த்தெடுக்கப்படவேண்டிய பருவமாக இதைக் கொள்ளலாம்.
ஷகுழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லைஷ எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று ஜசந்தானம் 1987ஸ, 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்ற  வாசகத்தின்  உண்மையை, பயனைச் சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம் என உறுதியாக நம்பி ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின் கூற்று ஜ அமனஸ்வீலி 1987 ஸ என்பன ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது. 

இடைநிலைக் கல்வி
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20மூ மாவது தொழிற்கல்விக் வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும. மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம்  போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தல் வேண்டும்.
17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும்  உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்ககமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80மூ தொழிற்கல்விக்கு முகட்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் முழுக்க முழுக்க தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது. 

உயர்கல்வி
பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறை வல்லுனர்களை உருவாக்குவதுமாகும். 

கல்வியின் முதன்மை இலக்கு
கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையும் மனித நேயமுமிக்க மனிதனை உருவாக்குதல் ஆகும். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. 'எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்' என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது.[படிப்பு 1994] 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது.


கல்வியின் இன்றைய நிலை
துரதிருஷ்டவசமாக இன்றைய கல்விமுறையில் மனிதநேயமிக்க மனிதனை உருவாக்கும் கல்வியின் பிரதான நோக்கம் பின்தள்ளப்பட்டு தொழில் நோக்கம் முனைப்புப்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு வாய்ப்பற்றவர்களைத் தொழிற்கல்விக்கு வழிப்படுத்தும் முக்கிய நோக்கமான தொழில் நோக்கம் என்ற கருத்துநிலை கூட தரமிறக்கப்பட்டு அந்தஸ்து மிக்க தொழில் நோக்கிப் பெற்றோர் பிள்ளைகளை வலிந்து திசைதிருப்பும் ஒன்றாக மாறியிருக்கிறது. அதுமட்டுமன்றி மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் தளமாக இன்றைய கல்விமுறை  அமைகின்றது. பாடசாலைகளைத் தர அடிப்படையில் வகைப்படுத்தியிருப்பது இத்தகைய போட்டி மனப்பான்மைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கின்றது. அறிவை வளர்க்க அறிமுகப்படுத்தப்படும் எந்தச் செயற்பாடும் வசதியுள்ளோரை மேலும் வளர்க்கவே உதவுகின்றன. போட்டிப்பரீட்சைகள் கூட வளமிக்க மனிதர்களை மேலும் வளப்படுத்தும் ஒன்றாகவே நடைமுறையில் உள்ளது.  1943இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையின் மையப் பொருளாக நற்பிரசைகளை உருவாக்குதல் என்பது அமைந்திருந்தபோது இத்தகைய போட்டி மனப்பான்மைகள் உருவாக்கம் பெறவில்லை.  பிள்ளைகளைத் தொழிலுக்கு ஆயத்தப்படுத்தல் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்ட 1981இன் கல்வி வெள்ளை அறிக்கையுடன் தொழில் நோக்கம் முற்றுமுழுதாக கல்வி முறையில் முனைப்புப் பெறத் தொடங்கிவிட்டது. 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையானது பரீட்சைகளை மையப்படுத்திய பாடத்திட்டத்தினை மாற்றி மனிதருக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளுடன் சமூகத்துடன் இசைந்து வாழ்வதற்கான வழிப்படுத்தல்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தமுறையானது கற்றல் கற்பித்தல் செயற்பாடு பாடத்திட்டத்துக்கும் அப்பால் புதிய தேடல் நோக்கி ஆசிரியரையும் மாணவரையும் நிர்ப்பந்திக்கிறது.

கல்விமுறை எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய தகவல் யுகத்தை துணிவுடன் எதிர்கொள்வதற்கு, இந்த யுகத்துடன் இசைந்து வாழ்வதற்கு பாடத்திட்டத்தை அறிப்படையாகக் கொண்ட கல்வி மட்டும் போதுமானதல்ல.. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.

பாடசாலை நூலகங்கள்
பாடசாலைகள்.... மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனம். மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது. நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையில் பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கல்விசார் நிறுவனமும் சிறப்புடன் இயங்குவதற்கும் மாணவர்களின் கல்வி கலாச்சார ஆர்வங்களை ஊக்குவிப்பதற்கும் பாடசாலை நூலகம் முக்கிய கருவியாக இருப்பதனால் ஒவ்வொரு முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலைப் பாடசாலைகளுக்கும் பாடசாலை நூலகம் இருத்தல் மிக அவசியமானது. பாடல்கள், கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதியதோர் அணுகுமுறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5நு-மாதிரியானது (5நு- ஆழனநட) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முழுமைப்படுத்துவதற்கான காரணி என்ற வகையில் பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்துகின்றது. 

தொழிற்பாடுகள்
பலதரப்பட்ட பொருட்துறைகளிலும் உள்ள சிறந்த தகவல் வளங்களின் சேகரிப்பைக் கொண்டிருப்பதனூடாக கற்பித்தலுக்கு உதவுதல்
அறிவை விருத்தி செய்வதற்கான வாசிப்புப் பழக்கத்தை ஒவ்வொரு மாணவரிடமும் ஏற்படுத்துதல்
உசாத்துணை சாதனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதனூடாக மாணவர்களின் ஆளுமையை வளர்க்கக்கூடிய வகையிலும் தம்மில் தாமே மதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் உதவுதல்
மாணவரால் விரும்பப்படுகின்ற அல்லது அவர்களால் தேடப்படுகின்ற அனைத்துவகை அறிவுக்குமான அணுகுகையை வழங்குதல்
அனைத்து வகை தகவல் அமைப்புகள் தொடர்பான அறிவை அவர்களிடம் வளர்த்து அத்தகைய தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தும் ஆர்வத்தை ஏற்படுத்துவதனூடாக பாடசாலையை விட்டு நீங்கிய பின்னரும் தமக்கெனச் சொந்தமான சிறு நூலகம் ஒன்றை கட்டியெழுப்பும் உணர்வைத் தூண்டுதல்  

மேற்கூறிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு பாடசாலை நூலகம் ஒன்று மாணவர், கற்போர் கற்பிப்போரின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான சிறந்த தகவல் வளத்தொகுதி, தகவல் வளங்களில் மிகுந்த ஈடுபாடும், அதனைச் சரியான வகையில் முகாமை செய்யக்கூடிய தகுதியும், மாணவரின் ஆர்வங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் மிக்க நூலகர், மாணவர்களை மேலதிக தேடல் நோக்கி வழிப்படுத்தும் ஆசிரியர்; ஆகிய மூன்று அம்சங்களை உள்ளடக்கியிருத்தல் அவசியமானது. 

தகவல் வளத் தொகுதி
பாடசாலை நூலகத்தின் தகவல் வள அபிவிருத்தியில்  பின்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.                         
மாணவர்களின் திறமை, வயது என்பவற்றி;ற்கேற்ப அந்தந்தத் தரத்திற்குரிய தகவல் சாதனங்கள்;
மாணவர்களுக்;குப் பயனளிக்கக் கூடிய கவிதைகள், கட்டுரைகள்,  பெரியோரது வாழ்க்கை வரலாற்று நூல்கள், பயணக் கதைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றுடன் விளையாட்டு, படம் வரைதல், இயந்திரத் தொழினுட்பம் முதலிய பொழுது போக்கு நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட நூல்கள் 
தகவல் சாதனத் தெரிவிற்குரிய கருவிநூல்கள், புதிதாக வெளிவருகின்ற நூல்கள்
பாடவிதானத்துடன் தொடர்புடைய நூல்கள்  அவற்றிற்குச் சமமான வகையில் புவியியல், வரலாறு, அரசியல் போன்ற பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள.;
பொருட்;;;;;;;;துறை தொடர்பான அடிப்படைக் கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், புவியியற் படங்கள், கைநூல்கள் போன்ற மாணவர்களது பொது அறிவு வளர்ச்சிக்கு உதவும் நூல்கள்.
நூலுருவற்ற சாதனங்களான ஒளிப்படங்கள், கட்புல செவிப்புல சாதனங்கள் போன்றவை.

பாடசாலை நூலகமொன்றின் தகவல் வளங்கள் பின்வரும் நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றது. 
அச்சு வடிவ நூல்கள் - நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், சிறுநூல்கள் என்பன.
வரைபியல் வளங்கள் - சுவரொட்டிகள், படங்கள், தேசப்படங்கள், பூகோளம், மாரி உருவமைப்புகள் போன்றவை.
செவிப்புல கட்புல வளங்கள் - கேட்பொலிப் பதிவுகள், வீடியோப் பதிவுகள், நுண்வடிவங்கள், படங்கள், படத்துணுக்குகள் போன்றவை
இலத்திரனியல் வளங்கள் - கணனிக் கணிமங்கள், பல்லூடகங்கள், இறுவட்டுகள், இணையத்துக்கான அணுகுகை போன்றவை.

ஆசிரியர் - நூலகர் -  ஆசிரிய நூலகர்
ஆசிரியர்:  என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர் என்கிறார் புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. சூழ்ந்த பார்வை என்பது- நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கியது. முறை சார்ந்த கல்வியை வழங்குதல் ஆசிரியரின் பணியாக இருக்கும். 21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்'  என யுனெஸ்கோ கூறுகின்றது. ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் என்பது புலமைப் பரிசில் பரீட்சையிலிருந்து தொடங்கி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடிகட்டி தெரிந்தெடுக்கப்படும் மாணவர்களை கல்வியிலும்  அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்யும் அளவுகோல் அல்ல. சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை  கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.

நூலகர்: பொருத்தமான நூலை அதற்குப் பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுபவர்.  சுய சார்புக் கல்விக்கான அடித்தளம் இடுபவராக நூலகரின் பணி அமைகிறது. நன்கு படித்தவர்களையே அசர வைக்கும் எத்தனையோ நூல்களின் ஒளிவு மறைவுத் தன்மையை வாசகர் இனங்காண உதவி செய்யும் பாரிய பணி நூலகரையே சார்ந்தது. அத்துடன் குறிப்பிட்ட நூலை எங்கே எப்படி எடுப்பது என்பதை வழிகாட்டுவதும் நூலகரே. பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம், வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உழைப்பு  ஆகிய சப்த ஒழுக்க தீபங்களுக்குமுரியவராக நூலகர் கருதப்படுகின்றார். சமூக அறிவியல், தகவல் வளங்களின் தெரிவு, தகவல் தொழினுட்பம், தொடர்பாடல், உளவியல், அச்சிடுதல் தொழினுட்பம், பகுப்பாக்கம், பட்டியலாக்கம், ஆவணவாக்கம், முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நூலகருக்கு தேர்ச்சி முக்கியம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரிய நூலகர்: ஆசிரிய நூலகர் என்பவர் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் தகுதியும், நூலகவியலில் தகுதியும் கொண்டவர். கல்வித்துறையிலும், தகவல் நிர்வாகத்துறையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவைப் பெற்று, சிறந்த கல்விமானாகவும் தகவல் நிர்வாகியாகவும் செயற்படுபவர். பாடத்திட்டத்தை வடிவமைத்தல், ஆதாரப்படுத்தல், அமுலாக்குதல் போன்றவற்றில்; செயல்திறன் மிக்க பங்காற்றுபவர். பாடத்திட்டம் பற்றிய அறிவு, கற்பித்தல், கற்றல் நடை தந்திரோபாயங்கள் என்பவற்றை வளங்கள் பற்றிய அறிவு, தகவல் பெற்றுக்கொள்ளும் முறைகள் ஆகியவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவர். வழிகாட்டுனராகத் தொழிற்படுதல், பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களுடன் இணைந்து செயற்படுதல், பல்வேறு விளம்பரத் திட்டங்கள் மூலம் பாடசாலை நூலகங்களுக்கு ஆதரவளித்தல், வரவு செலவுத் திட்டம், உதவி வழங்கும் ஊழியர் மற்றும் கற்றலுக்கான வளங்களைக் கையாளுதல், பாடசாலை நூலகங்களை விருத்தி செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபடுதல்; போன்றன கல்விச் செயற்பாட்டில் ஆசிரிய நூலகரின் பங்களிப்பாக அமைகின்றது.

ஆசிரிய நூலகரின் பொறுப்புகள்
நூலகத்தின் நாளாந்த செயற்பாடுகளை முகாமை செய்தல்
ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தையும் ஆயுட்கால வாசிப்புப் பழக்கத்தையும் கட்டியெழுப்பும் வழிவகைகளைக் கண்டறிதல்
வகுப்பாசிரயருடன் இணைந்து நூலக தகவல் திறன்களை பாடத்திட்ட நடவடிக்கைகளுடன் ஒன்றிணைக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய நூலக செயற்திட்டங்களை விருத்தி செய்தல்
தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆசிரியர்களுடன் இணைந்தோ கற்பிப்பதன் மூலம் தகவல் திறன்களை பாட உள்ளடக்கத்துடன் ஒன்றிணைப்பதற்கு உதவுதல்
தொடர்ச்சியான கணிப்பீடுகள் மூலம் தகவல் திறன்களைக் கற்றலை மதிப்பீடு செய்தல்
ஏனையோருடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யவும்; எதிர்கால தொழில்களில் அவர்களுக்கு உதவக் கூடிய திறன்கள், மனப்பாங்குகள், நடத்தைகளை கற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குதல்
தகவல் வளங்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு ஏனைய தகவல் அமைப்புகளின் அலுவலர்களுடன் இணைந்து வேலை செய்தல்

2006ம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயத்தால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபம் ஒன்றின்படி ஆசிரிய நூலகரின் கடமைப்பட்டியல் பின்வருமாறு அமைகின்றது.
பாடசாலை நூலகக் குழுவின் ஒத்துழைப்புடன் பாடசாலை நூலகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான செயற்பாடகளை திட்டமிடுதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், கணிப்பிடுதல், மதிப்பிடுதல்
மாணவரின் வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்துவதற்குப் பொருத்தமான செயற்பாடுகளையும் திட்டங்களையும் அடையாளங் காணலும் அவற்றைச் செயற்படுத்தலும் மதிப்பிடலும்
மாணவரின் தகவலியல் திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளையும் திட்டங்களையும் அடையாளங் காணலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்.
பாடசாலை மாணர் நூலகத்தைப் பயனபடுத்துதல் பற்றிய ஆண்டு மதிப்பீட்டைக் கைக்கொள்ளுதல், கண்டறியப்பட்டவற்றை காட்சிப்படுத்துதல், பின்னூட்டம் செய்தல்.

புது யுகத்தின் நூலகர்கள் நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும், மரியாதை காட்டி அவர்க்கிருக்கை தந்தும் ,ஆசித்த நூல் தந்தும் , புதிய நூல்கள் அழைத்திருந்தால் அவை உரைத்தும், நாளும் நூலை நேசித்து வருவோரகள்; பெருகும் வண்ணம் , நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும் மாசற்ற தொண்டிழைப்பீர் ; சமுதாயச் சீர் மறுமலர்ச்சி கண்டதென்று
முழக்கஞ் செய்வீர்'  என்று  நூலகரின் பணி எதுவாக இருக்கவேண்டும் என புரட்சிக் கவி பாரதிதாசன் 60களிலேயே கூறியிருக்கும் போதும் இன்றுவரை பெரும்பாலான நூலகர்கள் தமது பணியை தொழில் என நினைக்கின்றனரேயன்றி சமுதாய மறுமலர்ச்சிக்கான தமது சேவையென்று உணரவில்லை என்றே கூறவேண்டும்.

ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் என்பது புலமைப் பரிசில் பரீட்சையிலிருந்து தொடங்கி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடிகட்டி தெரிந்தெடுக்கப்படும் மாணவர்களை கல்வியிலும்  அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்யும் அளவுகோல் அல்ல. சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை  கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.

எத்தனிப்பில் வெற்றி காணும் போது, ஒன்றைச் சாதித்து விட்ட உண்ர்வு ஏற்படும் போது, ஒன்றில் திருப்தி யடையும் போது தலையில் தாங்கிய சுமை தணிவடையும் போது கற்றல் செயற்பாடு நடைபெறுகின்றது. சாதனை ஒன்றைப் புரிய வேண்டும் என்ற முனைப்புணர்வு, பிரச்சனையான ஒரு அம்சம், ஆர்வத்ழைதத் தூண்டும் ஒரு கருத்து, கருத்துள்ள ஒரு செய்முறை, எதிர்பாராத கண்டுபிடிப்பனுபவம் ஆகியவற்றில் ஒன்றையோ பலதையோ எதிர்கொள்ளக்கூடிய கற்கும் சூழல் ஒன்று கற்றல் செயற்பாட்டுக்கு மிக அவசியமாகும். 



    ஏ.ஜே. நான் கண்ட முகங்கள்





    ஏ.ஜே.....

    மனக்கண்ணில் அதிகம் வருவது பெண்மையின் சாயல் அதிகம் நிரம்பிய அந்த அழகிய பெரிய விழிகள். காலை வேளைகளில் வெள்ளைவெளேரென்று இருக்கும் அந்த விழிகளை மட்டுமல்ல! மீதிநேரங்களில் செம்மை அதிகம் படர்ந்திருக்கும் அந்த விழிகளையும் அவருக்குத் தெரியாமல் தூர இருந்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று. ஆங்கிலம் என்றாலே அலறியடித்துக்கொண்டு ஓடும் மாணவப்பருவத்தில், ஆங்கிலம் கற்பிக்கும் அனைவரையும் அச்சத்தின் பாற்பட்டு அதிதூரத்தில் நின்று அதிசயிக்கும்போதுகூட, அந்தக் கூட்டத்தில் நிறத்தால், உருவத்தால், கால்களை அகலப் பரப்பி விரைந்து நடக்கும் அந்த நடையால், அவரைச்சுற்றி எப்போதும் நிற்கும் கூட்டத்தால் தனிப்படத் தெரியும் அவரை பல்கலைக்கழக விரிவுரையாளர் பொது அறைக்கு முன்பாகப் போடப்பட்டிருக்கும் கல் இருக்கையில் அமர்ந்தபடி எனது விழிகள் ஆர்வமுடன் தேடிப் பார்க்கும். இது ஆங்கில ஆசிரியனாக ஏ.ஜே என்ற மனிதனிடம் நான் கண்ட முதலாவது முகம். 


    1989இல் படிப்பறிவு மட்டும் துணையாகப் பல்கலைக்கழக நூலகத்தில் வேலை கிடைத்து நுழைந்த காலத்தில்  பல்கலைக்கழகப் பொது அறையில் அவரும் அவரைச்சுற்றி நிற்கும் கூட்டமும் பேசிக்கொள்ளும் விடயங்களை அரைகுறையாகச் செவிமடுக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நூலகத்தின் நூல் அடுக்குகளிடையே குடு குடுவென ஓடித்திரியும் ஏ.ஜேயையும் அன்றாடம் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்கும் ஒருவர் ஆங்கில நூல்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியில்  நிற்பதற்கு மாறாக நூல் அடுக்குகளின் ஒவ்வொரு பிரிவிலும் அவரைப் பார்க்கும் போது  ஆங்கில விரிவுரையாளர் என்ற அச்சத்துடன் அதிகம் வாசிப்பவர் என்ற பிரேமையும் அதிகரித்தது. தராதரப்பத்திரப் படிப்பை மட்டும் கொண்ட குடும்பச் சூழலும் படித்தவர்கள் அரிதாக உள்ள சுற்றுச்சூழலும் கொண்ட என்னுள் 'மதிப்புக்குரியவர்களுடன் சரிசமமாக நின்று உரையாடுவது அழகல்ல' எனச் சிறுவயதிலிருந்தே வேரோடிப்போயிருந்த, ஆழமான கருத்துநிலை அவரது ஆற்றலை அறிந்து கொள்வதற்கான கால இடைவெளியை நீடித்ததை மறுப்பதற்கில்லை. எனினும் ஏ.ஜே ஒரு ஆங்கில ஆசிரியன் என்ற எனது ஆரம்பத் தோற்றப்பாட்டை அடித்து மேவிக்கொண்டு உருவான வாசகன் என்ற தோற்றப்பாடுதான்  அவரைப் பற்றிய தேடலுக்கான அடித்தளமாக உருவாகியது. உலக அறிவுப் பிரபஞ்சத்தை பொருட்துறைவாரியாகப் பிரிக்க உதவும் நூலக தகவல் அறிவியல் துறையை மூன்று வருடங்கள் முயன்று கற்றதன் பயனாக ஒவ்வொரு பொருட்துறைக்குமுரிய வாசகர்களை இலகுவாக அடையாளங் காணத் தெரிந்த எனக்கு ஏ.ஜே எந்தப் பொருட்துறைக்குரிய வாசகர் என்று இனங்காணுவது ஆரம்பத்தில் குழப்பமாகவே இருந்தது.  அரசியல் துறை சார்ந்த நூல் அடுக்குகளில் அவரை அடிக்கடி பார்த்து சமூக அறிவியல் துறை சார்ந்தவர் எனப் பெரும்போக்காக முடிவெடுக்கும் மறுகணம் சினிமா பற்றிய நூல் அடுக்குகளிலிருந்து வெளிவருவார். ஏநசயஉழைரள சுநயனநச என்ற சொல்லுக்கு மிகப்பொருத்தமான மனிதன் அவர் தான்.  ஒரு வாசகனாக என்னை அதிகம் ஈர்த்த முகம் இது


    ஒருவரைப்பற்றி  அடுத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விடவும் அவர்களின் ஆக்கங்கள் மூலமாக அவர்களின் ஆற்றல்களை அறிந்து கொள்வதிலேயே அதிக நாட்டம் கொண்ட எனக்கு அவரது ஆக்கங்களை தேடிப் பிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படவில்லை. அவரது ஆக்கங்கள் அனைத்திலும் ஏனையவர்களது ஆக்கங்களிலிருந்து அவர் ரசித்துச் சுவைத்தது மட்டுமன்றி வெறுத்து ஒதுக்கியதுகளும் நிரம்பிக் கிடக்கும். 1967ம் ஆண்டு தொடக்கம்  மல்லிகையைத் தளமாகக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட திரைப்படம், மாக்சியம், இலக்கியம் போன்ற பொருட்துறைகள் சார்ந்த பல்பரிமாண எழுத்துக்கள் மட்டுமன்றி, கவிதைகள், அரசியல் உட்பட அவரது மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், பதிப்பு தொகுப்பு  வேலைகள் அனைத்தும் தீவிர வாசிப்புத்தன்மையிலிருந்து தோற்றம் பெற்ற பல்துறைப்புலமையாளன் என்ற புதிய தோற்றப்பாடென்றே கொள்ளமுடியும். பல்துறைப் புலமைமையாளர்கள் எம்மிடையே அன்றும் இன்றும் கணிசமாக இருந்தபோதிலும்கூட ஏ.ஜேயின் உருவாக்கங்கள்  தேர்ந்த சிற்பி ஒருவனின் சிந்தனையிலிருந்து இந்த சமூகத்துக்குக் கிடைத்த சிரஞ்சீவித்தனம் மிக்க ஓவியங்கள் என்பதில் அறிவுஜீவிகளிடம் எந்தவொரு கருத்துமுரண்பாடும் இருக்கமடியாது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே அவரது கணிசமான நேரங்கள் செலவிடப்பட்டமை இச்சமூகத்துக்கு அவர் விட்டுச் செல்லும் பதிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்ற நெருடலும் மனதில் எழாமல் இல்லை. இது திறனாய்வாளன் என்ற வகையில் ஏ.ஜேயிடம் நான் கண்ட அதிசயிக்கத்தக்க ஒரு முகம்.


     கற்பிப்பவர்களுடன்  தோளுக்குமேல் கைபோடும் அல்லது கால் தொட்டுக் கும்பிடும் தற்கால உறவுநிலையை அருவருத்து ஒதுக்கி, மதிப்புக்குரியவர்களைத் தூர இருந்து பிரேமிப்பதையும்; எதிர்பாராமல் எதிரில் காண நேர்ந்தால்  தலைசரித்துச் சிறுநகையொன்றால்  அவர்கள் மீதான எனது மதிப்பை வெளிப்படுத்துவதையும் எப்போதும் கடைப்பிடிக்கும் எனக்கு ஏ.ஜேயுடன் ஏற்பட்ட முதலாவது தொடர்பு மிகவும் சுவாரஸ்யமானது. 90களின் ஆரம்பத்தில் தொழில் புரியும் இடத்தில் நான் பெற்ற அறிவை அமுல்படுத்துவதற்குத் தடையாக உள்ள அகப்புறச் சூழல்கள் தொடர்பாக எனக்குள் ஏற்பட்டிருந்த விரக்திநிலையை வெளிப்படுத்துகின்ற ஒரு கடிதத்தை நூலகவியல் துறை சார்ந்து எனக்கு அறிவையும் ஆர்வத்தையும் ஊட்டிய பேராசிரியர் ஒருவருக்கு  அனுப்பும் பொருட்டு ஆங்கிலத்தில் எவரது உதவியுமின்றி நானே முயன்று வடிவமைத்துவிட்டபோதும் அது சரியாக எழுதப்பட்டுள்ளதுதானா என்று எப்படி பரிசோதிப்பது எனத் திணறிக்கொண்டிருந்தபோது என்னுடன் பணிபுரியும் சக நண்பர் சிவபாதம் 'ஏ.ஜேயிடம் ஒருதடவை கொடுத்துத் திருத்துவோம்' எனப் பரிந்துரைத்தது மட்டுமன்றி அவருடன் தொடர்பையும் ஏற்படுத்தித் தந்தார். ஆங்கிலத்தில் பேரறிஞர் எனப்படும் ஏ.ஜேயிடம் கடிதம் போகப்போகின்றது என்பது தீர்மானிக்கப்பட்டவுடன் அந்த நேரத்து முதிர்ச்சியின்மை காரணமாகவோ என்னைப் பற்றி அவர் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்ற சிந்தனையாலோ, எனது வித்துவத்தனத்தை ஒருதடவை நானே பரிசோதிப்போம் எனத் தீர்மானித்து இலகுமொழியில் எழுதப்பட்ட அந்த மூன்று பக்கக் கடிதத்தை மிக கடினமான உயர்சொல்லாட்சிகளைப் பயன்படுத்தி மீள வடிவமைத்துக்கொண்டு, அதற்காக என்னை நானே மெச்சிக்கொண்டு அவரிடம் கொண்டு போய்க் கொடுத்தாகிவிட்டது. கடிதத்தை ஒருதடவை முழுமையாகப் படித்துவிட்டு 'ம்...ம் மிக நன்றாக இருக்கின்றது' எனப் பொதுவாக அவரது பாணியில் கூறிய ஏ.ஜே மிக மென்மையாக, மனதை நோகடிக்காத வகையில் 


    'மொழி என்பது ஒரு தொடர்பு கொள் ஊடகம். எனவே தொடர்புகொள்பவருடன் அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வு கடிதத்தைப் படிப்பவருக்கு இருக்கவேண்டுமென்றால் அது மிகமிக எளிமையாக எழுதப்படவேண்டும். நீங்களும் அதை விரும்பினால் நாம் சிறு திருத்தம் செய்வோமா'

    எனக் கூறியபடி  எனது பதிலை எதிர்பாராமலேயே உயர் சொல்லாட்சிகள் அனைத்தையும் வெட்டிவிட்டு அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லாட்சிகளைப் போட்டுவிட்டு 'இப்போது மிக நன்றாக இருக்கிறது' என்றபடி திருப்பிக்கொடுத்தார். அவரது அதே எளிமையான சொல்லாட்சிகளைப் பயன்படுத்தி நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தின் நினைவு வர வெட்கம் பிடுங்கித் தின்ன எழுந்து வந்தபோதும் சரியான பாதையில் தான் நானும் செல்கின்றேன் என்ற நிறைவும் என்னுடன் கூடவே வந்தது. இந்த அறிவின் எளிமை ஏ.ஜேயின் அடுத்த முகம். 


    அடிக்கடி நூலகத்தில் உலவும் ஏ.ஜேயை ஒழுங்கான வாசகனாக மட்டும் நான் பார்க்கவில்லை. எமது நூலகத்தின் முன்னாள் நூலகர் அறையில் அவரை அடிக்கடி காணும் வாய்ப்பு அடுத்த அறையில் பணிபுரிந்த எனக்கு மிக அதிகமாகவே கிடைத்திருக்கிறது.  நூலகவியல் துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் நூல் தெரிவு என்ற அம்சத்தில், சமூக அறிவியல் துறைசார்ந்து  யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்கு ஏ.ஜே யின் பங்களிப்பு அதிகம் இருந்திருக்கிறது.  சமூக விஞ்ஞானம், மனிதப்பண்பியல் தொடர்பான நூல்களின் விமர்சனங்களை உள்ளடக்கிய சிறந்த ஒரு நூல் தேர்வுக்கருவியாக 1902ம் ஆண்டைத் தொடக்க ஆண்டாகக் கொண்டு பிரித்தானியாவிலுள்ள வுiஅநள னயடைல நெறளியிநச ஆல் வெளியிடப்படுகின்ற செய்தித்தாள் வடிவில் அமைந்த வுiஅந டுவைநசயசல ளுரிpடநஅநவெ என்ற வார இதழுக்கு எங்கள் நூலகத்தில் நிரந்தர வாசகர் இருவர் மட்டுமே. ஒன்று ஏ.ஜே மற்றது யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முன்னாள் நூலகர் திரு சி. முருகவேள் அவர்கள். யு3 அளவைவிட சற்றுப் பெரிதாக கிட்டத்தட்ட 36 பக்கங்களில் வெளிவருகின்ற இந்த இதழ் உள்ளடக்கும் பல நூல்களுக்கான விமர்சனங்கள் சிலசமயம் இரு முழுப்பக்கங்களையும் தாண்டுவதுண்டு. இந்த விமர்சன இதழிலிருந்து கணிசமான நூல்களை யாழ் பல்கலைக்கழகத்துக்கு ஏ.ஜே தெரிந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார் இலக்கியம் மட்டுமல்ல—அரசியல், வரலாறு, சமயம், கலை, பொருளியல் என்று அனைத்துப் பொருட்துறை சார்ந்தும் அவரது கரங்களால் சரி() அடையாளமிடப்பட்ட பல இதழ்கள் இன்றும் இங்கு இருக்கின்றன. அதுமட்டுமல்ல சமூக அறிவியல் துறை சார்ந்த கணிசமான நூல்கள் ஏ.ஜே என்ற ஒருவாசகனின் கைமட்டும் பட்டதொன்றாகவே இருந்திருக்கின்றன. ஏ.ஜேயைத் தவிர இதை யாருமே வாசிக்கப்போவது கிடையாது எனச் சிரித்துக் கொண்டே திரு முருகவேள் அவர்கள் கூறுவது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.  'இலங்கையிலேயே சமூக அறிவியல் துறை சார்ந்து மிகச் சிறந்த நூல்களின் தொகுதி தொடர்பாக  யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்குள்ள தனித்துவத்தை அடிக்க வேறெதனாலும் முடியாது' என இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட  பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது கூற்று உண்மையெனில் அந்தப் பெருமையில்  கணிசமானளவு பங்கு ஏ.ஜேக்கும் உண்டு. திரு முருகவேள் காலத்தில் தொடங்கிய இந்தப் பங்களிப்பு முருகவேளுக்குப் பின்னரும்  நூலக உதவியாளராகக் கடமையாற்றும் திரு. சிவபாதத்தினூடாக கணிசமானளவு தொடர்ந்திருக்கிறது. கடைந்தெடுத்த பல்வேறு துறைப்பட்ட 11 நூல்களின் தேர்ந்த திறனாய்வு நூலான 'மத்து'  உம் கூட நூலகத் துறை சார்ந்து நோக்கும் போது நூல் தெரிவுக்கான ஒரு சிறந்த மூலமே.  வெறும் வாசகனாக மட்டுமன்றி சிறந்த நூல் தேர்வாளனாகவும் இவரை ஆக்கியது எது என்ற எனது நீண்டகாலத் தேடலுக்கு விடை கிடைத்தது இவரது பதிப்புப் பணியின் பெறுபேறாக அண்மையில் உருவான றெஜி சிறிவர்த்தனாவின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் என்ற நூலில் தான். 


    'டெயிலி நியூஸ் என்ற பத்திரிகையின் வண்ணப்பக்கங்களில் வெளிவருகின்ற றெஜி சிறிவர்த்தனாவின் நூல்கள், திரைப்படங்கள், அரங்கு சம்பந்தமான  விமரிசனங்களை  1950 ம் ஆண்டு தொடக்கம், நான் ளு.ளு.ஊ படித்துக் கொண்டிருந்த காலத்தில், படித்து வந்திருக்கின்றேன்'

    என இந்நூலின் முன்னுரையில் நான் வாசித்த ஏ.ஜேயின் வரிகள் நூலை அறிதல், ஆய்வு செய்தல், அழகாக அடுத்தவர் அறியும்படி செய்தல் என்ற கலைக்கு அத்திவாரம் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரேயே அதிலும் 16 வயதுப் பள்ளிபருவத்திலேயே போடப்பட்டபடியால் தான் நல்ல நூல்களின் தெரிவுக்கு சிறிது காலமாவது யாழ். பல்கலைக்கழக நூலகம் கொடுத்து வைத்திருக்கிறது. இது நூலக அறிஞராக நான் அறிந்த ஏ.ஜேயின் அடுத்த முகம். 


    மொழிபெயர்ப்புத் துறையில் சிலகாலம் ஆழமாக ஊடுருவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தமிழ் மொழி நூல்களின் பற்றாக்குறை காரணமாக ஆங்கில நூல்களைக் கட்டியழவேண்டிய நிர்ப்பந்தமும், விரிவுரைகளுக்குக் குறிப்புகளைத் தரும் நாட்டமில்லாத ஒருசில விரிவுரையாளர்களும் இணைந்து பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே அடிநுனி தெரியாமல் இதற்குள் நுழையும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான் மட்டும் புரிந்துகொள்வதற்கான ஒன்றாக எனது மொழிபெயர்ப்பு இருந்தவரை இது தொடர்பான தேடலும் எனக்குள் கருக்கொள்ளவில்லை.  மொழிபெயர்ப்புச் சேவையானது ஆய்வு நூலகமொன்றின் முக்கிய சேவை என நூலகவியல் கல்வி போதித்த பின்னர்; நானாகவே விரும்பி இதற்குள் நுழைந்த காலத்தில் மொழிபெயர்ப்பின் பண்புகள் பற்றிய தேடலில் ஏ.ஜேயின் மொழிபெயர்ப்புகள் தட்டுப்பட்டபோதும் 'ஆங்கிலம் தெரியும் ஒருவருக்கு மொழிபெயர்ப்பதில் என்ன கஷ்டம்: வெளுத்துக் கட்டவேண்டியதுதானே' என்று அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பெரும்போக்காக விட்டிருக்கின்றேன். ஆனால் இத்துறைக்குள் மிக ஆழமாக ஊடுருவும் வாய்ப்புக் கிடைத்த ஒரு காலத்தில் எனது பணி அடுத்தவரின் பயன்பாட்டுக்குப் போகப்போகின்றது என்பது அடிமனதில் உறைத்தபோதுதான் மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் பற்றிய தேடல் எனக்குள் கருக்கொண்டது. நல்லதொரு தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆங்கில அறிவை விட தமிழ் அறிவு அதிகம் தேவை என எனது அனுபவ அறிவு இடித்துரைக்க, அதன்வழி ஏ.ஜேயின் மொழிபெயர்ப்பாக்கங்களை நோக்கி மீண்டும் படையெடுத்தபோது தான் அவரது தமிழ்ப்புலமையின் ஆற்றல் என்னைப் பார்த்து நகைத்தது. ஹென்றி கீசிங்கரின் 'டிப்புளோமசி' என்ற நூலின் சில பகுதிகளை மொழிபெயர்த்த காலத்தில் ஆசிரியரின் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அந்த எழுத்துகளுக்கும் உயர் சொல்லாட்சிகளுக்குமிடையில் சிக்குப்பட்டு நான் திணறியபோது ஏ.ஜேயின் இருமொழிப் புலமைக்கு குறிப்பாக அந்தத் தமிழ்ப்புலமைக்குப்  பலதடவைகள் மானசீகமாக வணக்கம் செலுத்தியிருக்கின்றேன். இது சிறந்த மொழிபெயர்ப்பாளராக நான் தரிசித்த ஏ.ஜேயின் இன்னொரு முகம்.. 


    'ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆய்வு தமிழில் எழுதினால் அது அலட்டல்' என்று ஆங்கிலத்தை அரைகுறையாகப் படித்தவர்களே ஆங்கிலமோகம் கொண்டு திரியும் இச்சமூகத்தில் ஆங்கிலச் சூழலில் பிறந்து அதில் வளர்ந்து அதையே பட்டப்படிப்பாகவும் தேர்ந்ததெடுத்த ஏ.ஜே  தனது மொழியைத் தலையில் வைத்தக்கொண்டு கூத்தாடினால் அது இயல்பு. மாறாக 

    ' ஆங்கிலம் உலகமொழி என்றும், அதனைக் கைவிட்டால் நமது அறிவு வளர்ச்சி தடைப்பட்டுவிடும் என்றும் தமிழ் சிங்களம் ஆகிய சுயமொழிகள் மூலம் நவீன விஞ்ஞானக் கருத்துக்களை உணர்த்தமுடியாதென்றும், ஆங்கிலத்தைப்புறக்கணித்தால் நாம் கிணற்றுத்தவளைகள் போலாகிவிடுவோம் என்றும் காரணம் காட்டும் இந்த ஆங்கில தாசர்கள் ஆர்.எவ்.ஜோன்ஸ் எழுதிய ஆங்கில மொழி வெற்றிவாகை சூடிய வரலாறு என்னும் நூலை வாசித்தார்களேயானால் நிச்சயமாக வியப்படைவதுடன் தங்கள் தவறான கருத்துக்களையும் களைந்தெறிவர்'


    என்று மேற்படி நூலின் முன்னுரையாக ஏ.ஜே தரும் அவரது சொந்தக் கருத்தானது தாய் மொழிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டப் போதுமானது. இதற்கு மகுடம் வைத்தாற்போன்று 


    'சிங்களச் சட்டத்தின் அநுகூலங்கள்-பிரதிகூங்கள் பற்றிய விசாரணை தேவையில்லை. ஆனால் அச்சட்டம் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதூரப்பெற்றவர்களுள் நானும் ஒருவன் அந்த அபிமானமே தமிழில் எழுதவேண்டும் என்ற எனது முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது'


    என மத்து என்ற நூலின் என்னுரையிலேயே தமிழ்மொழியின் மீதான பற்றை அவரே வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த தமிழ் அபிமானியாக மட்டுமன்றி தமிழ்ப்புலமையாளனாகவும் நான் தரிசித்த ஏ.ஜேயின் இன்னொரு முகம் இது.  


    அகிம்சாவாதிகள், அடிதடிக்கு ஒதுங்குபவர்கள் மட்டுமல்ல புரட்சிகரமாகச் சிந்திப்பவர்கள் அனைவருமே ஏ.ஜேயில் அதிக மதிப்பு வைத்திருக்கின்றனர். இதை நான் எனது பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே இனங்கண்டிருக்கின்றேன். பல்கலைக்கழகப் படிப்புக்கும் மேலாகச் சமூக அக்கறையுடன் ஓடித் திரியும் எனது சக தோழர்களின் உதடுகள் மிக மரியாதையுடன் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக ஏ.ஜே என்ற வார்த்தை அமைந்திருந்ததை மிக ஆச்சரியத்துடன் அவதானித்திருக்கின்றேன். பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட அனைவரும் ஏ.ஜேயிடம் செல்வதைப் பார்த்திருக்கின்றேன். அதிலும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் சிம்மசொப்பனமாகக் கருதப்படும் திரு உதயகுமார் அவர்களுக்கும் ஏ.ஜேக்குமிடையில் நீண்ட கால தொடர்பு இருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். மானுடத்தின் மேம்பாட்டில் அவருக்குள்ள அக்கறையை அவரது எழுத்துக்கள் தௌ;ளத் தெளிவாகவே வெளிக்காட்டுகின்றமையையும் உணர்ந்திருக்கின்றேன். அப்படியாயின் ஏ.ஜே ஒரு புரட்சிவாதியா? புரட்சிகரமாக இருப்பவர்களால் எவ்வாறு அமைதியாக அனைவருக்கும் நல்லவராக இருக்கமுடியும்.? சிந்தனையில் புரட்சியும் செயலில் சாத்வீகமும் எவ்வாறு சாத்தியமாகும்? இந்தக் கேள்விகள் தொடர்ந்து மனதைக் குடைந்தபோது அதுநோக்கிய எனது தேடலில் தட்டுப்பட்டது தான் ஏ.ஜேயின் சில திறனாய்வுக் கட்டுரைகள். கட்டுரையில் கணிசமாகவே புரட்சி செய்திருக்கிறார் ஏ.ஜே. இதில் முக்கியமானவை, அடுத்தவர் மனதைக் கவர்ந்தவை சரஸ்வதியில் வந்த 'மௌனி வழிபாடு', மல்லிகையில் வந்த 'எல்லாம் தெரிந்தவர்' ஆகிய இரண்டு கட்டுரைகளும். 'விமரிசனத்தில் நக்கீரர் ஏ.ஜே. 1960ம் ஆண்டளவில் திடீரென மௌனியின் பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்ற. அவரது எழுத்தில் ஒன்றைக்கூடிப் படித்தறியாத சில பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட தங்கள் .இலக்கியவரலாற்று நூல்களில் யாரோ எப்போதோ எங்கோ கூறிய வார்த்தைகளைத் தேவமொழியாகக் கொண்டு மௌனி சிறுகதையின் திருமூலர், விக்கிரகம் அது இது என்று எழுதிக்கொண்டும் தமிழ் இலக்கிய உலகில் இன்றைய முன்னணி எழுத்தாளர்களான க.நா.சு, சி.க.செல்லப்பா, தர்மு சிவராமு போன்றோர் மௌனியை தலையில் வைத்துக் கூத்தாடிக்கொண்டும் நின்றவேளையிலே மௌனியின் எமுத்தைப் பற்றி துணிவாகவும், சிந்திக்க வைக்கவும் ஏற்றதான முதல் விமரிசனக் கட்டுரையை மௌனி வழிபாடு என்ற தலைப்பில் சரஸ்வதியில் எழுதிப் பரபரப்பூட்டியவர் இந்த ஏ.ஜே' என ஏ.ஜேயின் எழுத்துலகப் புரட்சி பற்றி ஏ.ஜேயின் அட்டைப்படத்துடன் வெளிவந்த 1971ம் ஆண்டின் யூலை மாத மல்லிகை இதழில் செம்பியன் செல்வன் அவர்களின் மேற்கண்ட வரிகள் இதை மேலும் உறுதி செய்கின்றன. 


    சிந்தனையில் புரட்சியைக் கணிசமாகக் காணக்கூடியதாக இருந்த எனக்கு செயலில் புரட்சி பற்றி அதிகம் அறியமுடியவில்லை. அனைவருக்கும் நல்லவர் என்பதிலுள்ள 'அனைவருக்கும்' என்பதன் ஆழ அகலம் தெரியாமல் குழம்பி, உண்மையை நேசிக்கும் ஒருவனால் எவ்வாறு பொய்மையைக் கண்டு கொதித்தெழாமல் இருக்கமுடியும் என்றும், ஒரு மனிதன் நேர்மையாக வாழவேண்டுமெனில் நித்தமும் மனவதைப்படுதல் தவிர்க்கமுடியாததல்லவா? என்றெல்லாம் எனக்குள் ஏற்பட்ட அவஸ்தையை நீக்கியது நண்பர் சூரி அவர்கள் கொண்டு வந்து கொடுத்த 2002 'காலம்' ஏ.ஜே சிறப்பிதழில் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக இணைந்து பணியாற்றிய திரு நடேசன் அவர்களின் கட்டுரை தான். ஏ.ஜே தொடர்பாக வருகின்ற சிறியன சிந்தியாதான், நூலறி புலவன், அவிழ்ந்த அன்பினன் போன்ற சொற்களுடன் இணைந்து வருகின்ற 'உருத்திரமூர்த்தி', 'ஊழித்தீ', 'வார்த்தைகளில் இடிமுழக்கம் மின்னல்கள்' 'கர்ஜனை' போன்ற சொற்கள் அநீதியைக் கண்டு கொதித்தெழும் நேர்மையாளனது அடைமொழியாகவே எனக்குத் தெரிகின்றது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று 'கோப்பரேற்றர்' இதழின் பத்திராதிபர் குழுக்கூட்டங்களில் அதன் தலைவராக செயற்பட்ட பல்கலைக்கழக முன்னாள்  பேராசிரியர் நேசையாவுடன் தனது நேர்மையின் கோட்டிலே நின்று இவர் கர்ஜித்திருக்கிறார். இவை அறிவுபூர்வமானவையாக நிதானத்தின் வழியில் பண்பு தவறாதவையாகவே இருந்தன'.


    செயல் புரட்சியும் பார்த்தாகிவிட்டது. மனம் திருப்தியடையவில்லை. உளவியல் ரீதியில் அவரின் வெளிப்பாடு பற்றியும் அறியும் ஆவல்.   உள்ளத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி ஒளி மிகுந்த அவரது விழிகள் தான் எனினும் கூட நேரிய பாதையை என்றும் நேசிக்கும் ஏ.ஜேயிடம் குறுக்கு வழியில் செல்பவர்கள் பற்றிய பேச்சு எழும் சமயங்களிலெல்லாம்   ஏற்படும் கோப உணர்வை திடீரெனச் செம்மை அதிகம் படர்ந்ததாக மாறிவிடும் அந்த முகம் பொதுவாகக் காட்டிவிடும்.  கருத்துக்கள் பற்றி அலசும் சந்தர்ப்பங்களில் அவரிடம் எழும் ஒருவித சிரிப்பு அக்கருத்துக்கள் தொடர்பான அவரது உடன்பாடின்மையை அப்பட்டமாகக் காட்டிவிடும். அந்தச் செம்மை படர்ந்த விழிகளின் 'ஒருவித'அசைவிலிருந்தே ஒன்றைப்பற்றிய அவரது உடன்பாட்டையும் உடன்பாடின்மையையும் இனங்காணும் வல்லமை அவருடன் நெருங்கிப்பழகும் ஓரிருவருக்கு மட்டுமே உண்டு  மற்றும்படி வார்த்தைகளால் காயப்படுத்தும் அளவுக்கு ஏ.ஜே குறைகுடம் அல்ல. 60 வயதுப் பராயத்தின் நடுப்பகுதியில் இருக்கும் அறிவும், அனுபவமும், முதிர்ச்சியுமிக்க ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகள் அவரது நடுத்தர பருவத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று எனக்குள் எழுந்த வினோதமான ஆவல் 
    ' சோக முகபாவத் தோற்றம் அவருக்கு இருந்தபோதிலும் ஏ.ஜே ஹாஸ்ய உணர்வுள்ளவர். கல்விக்கழகங்களில் கால் மிதிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த ஒண்டிப் பிழைப்போர், இலக்கியப் போலிகள். பகட்டுப்போலிகள், சுயமுன்னேற்றவாதிகள், சுத்த முட்டாள்கள் அனைவருமே அவரின் நுண்ணாய்வுக்கோ நகைப்புக்கோ தப்ப முடியாது. முட்டாள்களை சந்தோசமாக அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது'


     என இவருடன் 70களில் பழகி, 20 வருடங்கள் தொடர்பற்றுப்போய், மீண்டும் 2002 பாதை திறப்புடன் தொடர்பைப் புதிப்பித்த 'ஹர்ஷா குணவர்த்தனா'வின் வரிகளில் அதிகம் தரித்து நிற்க விரும்புகின்றமையை மறுக்கமுடியாது. ஏனெனில் யாழ்ப்பாணத்தின் வைகறை மெல்லொளியில் மதுச்சாலைகள் ஊடாக இவருக்கு வழிகாட்டிச் சென்றவராக ஏ.ஜே இருக்க 'உள்ளே தள்ளினால்' உள்ளதெல்லாம் வரும் என்ற யதார்த்தத்தை உள்வாங்க விரும்பும் எவருமே இந்த வரிகளில் திரிபு இருக்கும் என தள்ளி வைக்க மாட்டார்கள். கருத்தோ செயலோ சரியற்றதை துணிவுடன் எதிர்கொள்ளும் புரட்சியாளராக நான் விரும்பிக் கஸ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்த  ஏ.ஜேயின் அடுத்த முகம் இது.


    வெளிநாட்டில் வதிகின்ற இணுவையூர் அன்பர்களின் ஆதரவில் உருவான நூலகமும் அரும்பொருளகமும் இணைந்த அறிவாலயம் என்ற அமைப்பின் திறப்புவிழா நிகழ்வை முன்னிட்டு மலர் உருவாக்கம் ஒன்றில் நான் முனைப்புடன் ஈடுபட்டிருந்த சமயத்தில் மலருக்கு கட்டுரையொன்றை ஏ.ஜேயிடம் இருந்து எடுத்துப் போட வேண்டும் என்ற எனது விருப்பை சிரமேற் கொண்டு நண்பர் சூரி அவர்கள் எடுத்த முயற்சியானது 'மெச்சத்தக்க முன்னுதாரணம்' என்ற தலைப்பில் அவரிடமிருந்து இருபக்கக் கட்டுரையாக வந்தபோது சரியான முயற்சிக்குத் தான் நானும் பாடுபடுகின்றேன் என்ற மகிழ்வையும் நிறைவையும் கொடுத்தது. 


     'அரும்பொருட் காட்சியகங்களை அமைப்பதன் மூலமாக, அடிமட்டக் குடியாட்சி போன்று, சாதாரண, பாமரமக்களின் அடிமட்ட வரலாற்றினையும் உய்த்துணரமுடியும். இதன் மூலம் வரலாறு என்றால் அரச வம்சங்களினதும், உயர் வர்க்கத்தினரினதும் வரலாறு என்னும் மாயையைக் கலைத்து, வங்காள வரலாற்று ஆசிரியர் ரணஜித்குகா போன்றோர் தொடங்கி வைத்த கீழ்மட்டங்களின் வரலாற்றாய்வுகள் என்ற மார்க்கத்தில் எம்மைச் செல்வதற்கு உந்தும். அப்பொழுது இதுகாறும் நாம் படித்த, படித்துவரும் 'வரலாறு' என்ற பாடம் அடித்துச் செல்லப்படும். இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை'.


     அவரது கட்டுரையிலிருந்து என்னை ஈர்த்த மேற்குறிப்பிட்ட வரிகள் புதிய சமூக உருவாக்கத்தை அவாவும் ஏ.ஜேயின் இன்னொரு முகம்.


    இறுதியாக, ஏ.ஜே என்ற அறிவுத் துறைமுகத்தைத் தேடிப் பல தோணிகள் வந்து இளைப்பாறிப் பலன் பெற்றுப் போனமையை அனைவரும் எற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்தத் துறைமுகத்துக்குரிய சரியான கௌரவத்தை அளிக்க ஒரு தோணியாலும் ஏன் முடியவில்லை ? கௌரவிக்க விரும்பியவர்களுக்கு அதிகாரமும் ஆற்றலுமில்லை. அதிகாரமும் ஆற்றலும் இருந்தவர்களுக்குக் கௌரவிக்கும் எண்ணம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது தனிச்சிங்களச் சட்டத்தால் தான் ஏ.ஜே என்ற தமிழ்ப்புலமையாளன் இச்சமூகத்துக்குக் கிடைத்தது போன்று இந்த அசண்டையீனத்தால் தான் முதுகு சொறிதல்களுக்கும் முகம் மழுப்பல்களுக்கும் தலைவணங்காத அறிவின் நிமிர்வை, அள்ள அள்ளக் குறையாக அறிவூற்றை, இறுதிவரை தாய்மண்ணையும் மொழியையும் நேசித்த மனிதனை, அறிவால், எளிமையால், குணத்தால், பண்பட்ட நடத்தையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய மானுடத்தை இந்த மண் இனங்காணும் வாய்ப்பும் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது என்று ஏ.ஜேயின் பாணியிலேயே இவர்களுக்கும் ஏதாவது சமர்ப்பணம் செய்துவிடலாமா?  


    கடந்த ஒக்டோபர் 18ம் திகதி புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக புவியியல் மண்டபத்தில் அவரது நினைவு அஞ்சலி நடைபெற்றது. அவரைப் பற்றி எவ்வளவோ பேசினார்கள். அவர் ஒரு சிறந்த வாசகன் என்பதால் தான் அவரைப் பற்றி இவ்வளவு கதைப்பதற்கு இருந்தது என்றோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தகாலத்திலும் சரி ஓய்வு பெற்று யாழ் மண்ணில் இறுதி வரை இருந்த காலத்திலும் சரி அவரது நேரத்தில் கணிசமானளவு யாழ் பல்கலைக்கழக நூலகத்தில்  தான் கழிந்தது என்பதோ அங்கு வெளிப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் அவரை நல்லதொரு மனிதனாகத் தரிசித்த எத்தனையோ உள்ளங்களின் நினைவுரைகளில் மனதைக் கவர்ந்தவை இவை:


    திருமதி சாந்தி விக்னராஜா: ஏ.ஜே திருமணம் செய்திருந்தால், குழந்தைகளைப் பெற்றிருந்தால் இந்த தனித்துவ ஆளுமையை பெற்றிருப்பாரோ தெரியாது. எனவே  இவ்வாறு தனித்திருந்ததுதான் ஏ.ஜே என்ற முழு மனிதனை எமக்குப் பெற்றுக் கொடுத்தது.


     திரு சோ.பத்மநாதன்: திரு ஏ.ஜே அவர்களுக்கும் அவரது பெருமதிப்பைப் பெற்ற சிங்கள அறிஞர் றெஜி சிறிவர்த்தனாவுக்கும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் தரநிலை( class ) இல்லை. எனவே அறிஞர்களாக இருக்கவேண்டுமெனில் அவர்களுக்கு class இருக்கக்கூடாது என முடிவெடுக்கலாமா?. 

    பேராசிரியர் வி.பி சிவநாதன்: 'அனைத்திலும் முழுமைத்தன்மை நிறைந்த ஒரு  மனிதனை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான உயிரணுவைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் யாருடைய உயிரணுவைச் சிபார்சு செய்யலாம் என்று என்னைக் கேட்டால் அது ஏ.ஜே மட்டும் தான் என்றே நான் கூறுவேன்.'





    Friday, August 12, 2011

    குழந்தைகள் உலகமும் ---

    குழந்தைகள் உலகமும் 
    மனித நடத்தைக் கோலங்களும்


    குழந்தைகள் உலகம் - உலகத்தின் சந்தோசங்கள் யாவும் பரிணமிக்கும் உலகம், கவலை, வெறுப்பு சந்தேகம், வஞ்சகம், சூது போன்ற மனித பலவீனங்கள் சட்டென ஆக்கிரமிக்க முடியாத உலகம். மனித மனத்தின் தேடல்களின் பிறப்பிடம் சுறுசுறுப்பு, குறும்பு, துருவி ஆராயும் ஆர்வம் என்ற தனித்துவ பண்புகளின் இருப்பிடம் சொல்லிக்கொடுத்து கற்பவற்றை விட கண்ணால் பார்த்து கற்பவைகள்தான் இவ்வுலகில் அதிகம். இங்கு ஏற்படும் மனப்பதிவுகள் கல்லில் எழுத்துப் போல் அழியாவரம் பெற்றவை. 

    குழந்தைகள் உலகம் கவலையே அறியாதது. குதூகலமும் களிப்பும் நிறைந்தது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன் என்ற வேறுபாடுகளே அதற்குத் தெரியாது. ஒற்றுமை உணர்வும் பரஸ்பர அன்பும் கொண்டது. அன்பை அளவுக்கு அதிகமாக வாரி வழங்குவது போன்றே தானும் அடுத்தவர் அன்புக்காக அளவுக்கதிகமாக ஏங்குவது.

    குழந்தைகள் உலகம் மிகவும் சின்னஞ்சிறியது. பெரியவர்களாகிய நாம் இவ்வுலகில் நுழைவது என்பது மிகவும் கடினமானதொன்று குழந்தைகளிடம் இயல்பாகவே காணப்படும் அன்பு, பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடிப்பு யதார்த்தத்தை அறியும் ஆவல் போன்ற பண்புகள் எதுவுமே சிதைக்கப்படாமல் இவ்வுலகிற்குள் நுழைவது என்பது சாத்தியமானதா? என்ற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் ஏற்படுத்திய உந்துதல் இவ்வுலகை சற்று கூர்ந்து அவதானிக்கச்செய்தபோது ஏற்படுத்திய மன அதிர்வுகள்தான் இத்தரிசனங்கள்.

    தரிசனம் 1

    'அம்மா தம்பி எனக்கு விஸ்கற் தரமாட்டானாம்' இது 8 வயது குமணனின் ஏக்கம் தொனிக்கும் குரல்.

    'அவற்றை படிப்பின்ரை வள்ளல்லை அவருக்கு விஸ்கற்'

    'தம்பி முதலாம் பிள்ளையாம் அது தான் வாங்கிக் கொடுத்தது' ' நீ முதலாம் பிள்ளையாய் வந்தால் உனக்கும் வாங்கித்தரலாம்'. இது தாய் மாதவியின் குரல்.

    பிஸ்கற் மட்டுமல்ல வீட்டில் சமையல் விருப்பமான இனிப்புப் பண்டங்கள் வெளியில் உலாத்து எல்லாமே இளையவன் ரமணன் விருப்பப்படிதான். இத்தனை செல்வாக்கும் அவனுக்கு இருக்கக் காரணம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக இருத்தல் என்ற தாயின் அபிலாசையை நிறைவேற்றியமைதான்.

    திறமைக்கு அதிக கவனம் கொடுத்த அந்தத் தாய்மை பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மட்டும் தனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்க மறந்தது ஏன்? அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்க வேண்டிய தாய்மை அந்தஸ்து எனும் போர்வைக்குள் ஏன் முடங்க வேண்டும்?.

    எனக்குத் தா என்று அழுது அடம்பிடித்து தனக்குரியதை மூத்தவன் பெற்றிருந்தால் இங்கு கலங்க வேண்டிய தேவை இல்லை. அல்லது குழந்தைமைக் குணங்களில் ஏதோ ஒன்றாவது அவனிடம் இருந்தாலும் வருந்த வேண்டியதில்லை. ஆனால் அந்த முகம் என்ன சொல்கிறது?.

    ஆழமான அமைதியும் ஏக்கமும் விரவிக் கிடக்கும் அந்தத் தளிர் அப்படி ஒன்றும் மொக்கன் இல்லை. வகுப்பில் பத்துக்குள் வருவான். பள்ளிக்கூடத்தில் போடும் புள்ளிகள் திறமையை நிர்ணயிக்க முடியுமா?. வெரித்தாஸ், பி.பி.சி என்றால் எங்கிருந்தாலும் ரேடியோ முன்வந்து செய்தி கேட்பவன். மை முடிந்த ரெனோல்ட் பேனையில் ' ஏவுகணை' விடத் தெரிந்தவன்.யார் எது கொடுத்தாலும் தம்பிக்கு கொடுத்து தின்பவன். விழுந்து அடிபட்டு அழும் பக்கத்து வீட்டுச் சிறுவனை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பவன். விளையாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்பவன் மொக்கன் என்றா அந்தத் தாய்மை நினைக்கிறது. தனது அலுவலக நண்பர்கள் முன் பெருமையடித்துக் கொள்வதற்கு அந்தக் குணங்களை விடவும் ' முதல் இடம்' என்ற முத்திரை அவசியமாய்ப் போய்விட்டதா?.

    தரிசனம் 2

    பக்கத்து வீட்டுப் பூமணியின் இரண்டு வயது மாறனுக்கு கொஞ்ச நாளாய் உடல், உள நிலையில் கோளாறு. இரவில் தூக்கம் அடியோடு இல்லை. சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பவன் திடீரென வீரிட்டுக் கத்துவான். பயத்தில் தேகம் பதறும். எதைக்கண்டு இப்படிப் பதறுகிறான் என்று எல்லோருக்கும் ஒரே கவலை.

    'அம்புலி' யைக் காட்டி சோறு தீத்தும் தந்திரம் இவனிடம் மட்டும் நடக்கவில்லை. நிலவைக் கண்டாலே வீரிட்டுக் கத்தத் தொடங்குவான். அதுவும் வளர்பிறை தொடங்கிவிட்டால் இது ஒரு பிரச்சனை அன்பாகச் சொல்லி அரவணைத்துக் கேட்டும் எதுவுமே விளங்கவில்லை கடைசியில் மிரட்டியும் தூங்க வைக்க முயற்சித்தாகிவிட்டது.

    நடு இரவு 'அம்மா யன்னலை மூடுங்கோ' பயத்தில் குளறிய குரல். யன்னல் ஊடாக பூரண நிலவு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த பூமணிக்கு நிலைமை விளங்க யன்னலை மூடிவிட்டு குழந்தையை அணைத்துக் கொண்டவள் நிலா நிலா ஓடி வா எனக் குதூகலிக்கும் குழந்தை இப்படி அலறக் காரணம் என்ன? என்பது புரிய மறுக்க யோசனையுடன் கிடந்தாள். சில நிமிடம் கழிந்த பின் அம்மா நாளைக்கும் இப்படி பரா லைற் வருமே மெல்ல காதில் கிசுகிசுத்தான் குழந்தை. 

    பரா லைற் அடிக்குது ஆமி வரப்போறான் என்று அலறித்துடித்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் பூமணியும் அவள் மகன் மாறனும் அடங்குவர். இடப்பெயர்வின் அவலம் மிக மோசமாக அவனைப் பாதித்துவிட்டது. 

    தரிசனம் 3

    கீதாவின்ரை வீட்டுக்கு விளையாடப் போகவேண்டாம் என்று நிஷாந்திக்கு அம்மா எத்தனை தரம் சொன்னனான்.

    'ஏன் போகக்கூடாது அம்மா?' ஆண்டு இரண்டு படிக்கும் நிஷாந்தியின் கேள்வி இது. அவையளோடை நாங்க பழகிறது இல்லை அவை எங்கடை ஆக்கள் இல்லை, அவையளோடை பழகிறது எங்களுக்கும் அப்பாவின் உத்தியேகத்திற்கும் கௌரவமில்லை.

    காலையில் தனக்கும் தாய்க்கும் நடந்த உரையாடலை நிஷாந்தி மறந்து விட்டு சாப்பிட்டதும் விளையாட ஓடிப்போய்விட்டாள்.


    தகப்பனின் தொழில் இதுதான் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஏழை கீதா. ஆனால் உயர்வு தாழ்வு என்ற பேதம் இந்த இளம் தளிர்களுடன் ஊடுருவ முடியாத பருவம் இது. விளையாட்டு....  அது ஒன்றுதான் அந்த மனங்களை ஆக்கிரமித்து நிற்கும்  பருவம்.   கீதாவின் குடிசை முன்னின்ற வேப்பமரத்து முன்றலில் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. திடீரென கையில் பூரவசம் கம்புடன் ஆவேசமாக வந்த நிஷாந்தியின் அம்மா 'உன்னை எத்தனை தரம் சொன்னான் அந்தச் சனியங்களோடை விளையாட வேண்டாமென்று. அடித்து இழுத்துக் கொண்டு தாய் போக ஏன் விளையாடக் கூடாது என்ற காரணம் கொஞ்சம் கூட தெரியாததால் இரு இளம் தளிர்களும் பரிதாபம் ....   விளிகள் கக்க நின்றன.

    தரிசனம் 4

    இடப்பெயர்வின் அவலம் மட்டுமா எம்மைத் துரத்துகின்றது. எமது அறியாமை காலம் காலமாக எம்மைச் சிறைக்குள் அடைப்பதை நீங்கள் பார்க்கவே இல்லையோ? என்று இந்தச் சிறுமியின் கண்கள் கேட்பது போல் தெரிகிறதே. ஆம் மூத்த பிள்ளையாகப் பிறந்துவிட்டதால் தானோ படிப்பின் வாசனையை என்னால் அறிய முடியாமல் போனது. எனது தாயின் சுமையைப் பகிர்வதற்கு என்றுதான் நான் படைக்கப்பட்டிருக்கிறேனோ?.

    ம்...ம்.. அவன் தான் என்ன செய்வான், அவள் தான் என்ன செய்வாள் அவளின் தலையில் ஏற்பட்ட சுமைகளை இவ்வளவு காலமும் சுமந்து இருக்கிறாள்... சற்று இறக்கி வைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவள் விட்டு விடுவாளா? தான் பட்ட சுமையை தன் குழந்தையும் படக்கூடாது என்ற அறிவை அவள் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே அவளுக்கு என்று என்னை நோக்கி கேட்பது போல் இல்லை? அவளது பார்வை.
    அந்தக் குழந்தையின் கையில் இன்னொரு குழந்தை. குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமலேயே தாயின் பொறுப்பு வந்துவிட்டது அவளுக்கு. துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் உடலை அசைக்கவே முடியாத சுமை தன்மீது பலவந்தமாக ஏற்றப்பட்ட சுமையினால் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தக் குழந்தை எவ்வாறு இன்னொரு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்? ஆற்றாமை அச்சுறுத்தலாக வன்முறையாக உருவெடுக்கிறது. குழந்தையின் மீது திணிக்கிறது. இங்கு குற்றவாளி யார்? தாயா? இல்லை.. அப்போ குழந்தையா... இல்லவே இல்i. அப்போ இது புரியாத புதிர் விடை தேடி அலைய வேண்டியதுதான்.

    ஓரிரு எடுத்துக்காட்டாக இல்லாத சமூகத்தில் பரவலாக வெளித்தெரியும் இந்த உளவியல் தாக்கங்கள் தான் குழந்தைகள் உலகைப் பெருமளிவில் ஆக்கிரமித்திருக்கிறது. குழந்தையின் எண்ணங்களிற்கும் அவர்களது நடவடிக்கைளுக்குள் ஆழப்புகுந்து அவர்களின் இனிமை, குதூகலம், ஆர்வம், குறும்பு போன்ற பண்புகளுக்கூடாக இவ்வுலகின் சமூக அம்சங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உண்டு.

    ஏனென்றால்!
    ஒரு சமூகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்தப் பிஞ்சுகளின் கைகளில் தான். சமூகத்தை தாங்குவதற்கு முதல் தேவை அன்பும் மனித நேயமும் தான். அன்பும் மனித நேயமும் என்ற அடித்தளத்தில் நின்றுதான் குழந்தையின் அறிவு தேடல் ஆரம்பிக்க வேண்டும். குழந்தையின் அறிவை வளர்க்க நாம் வாங்கிக் கொடுக்கும் புத்தகங்கள் விளையாட்டுப் பொருட்களை விடவும் எமது பேச்சு, செயல், பழக்க வழக்கம், மனித பலவீனங்களான பேராசை, வஞ்சகம், பொறாமை போன்றவை குழந்தையின் மனதை இலகுவில் ஆக்கிரமிக்க வல்லவை.

    ஒரு குழந்தையை அன்புள்ளவனாக, மனித நேயம் மிக்கவனாக, சமூக உணர்வும் பற்றும் மிக்கவனாக, அறிவு ஜீவியாக வளர்ப்பதற்கு சிறந்த பருவம் குழந்தைப் பருவம் தான். குழந்தைகள் உலகை தாக்கும் காரணிகளை இனங்கண்டு எம்மால் முடிந்தவரை மாற்ற முயல்வது தான் எதிர்கால எமது சமூகம் எமது காலல் தாங்கி நிற்க உதவும் ஒரே வழி.

    Thursday, August 11, 2011

    வதையின் விதை




    'அப்போது தான் ஆரம்பித்திருந்த அழகிய மழைக்காலம் ஒன்றின் மாலை நேரம் அது. பிள்ளைப்பருவ விளையாட்டை இன்னும் மறவாதது போல் செம்மண் புழதி குளித்து நின்ற இயற்கைப் பெண்ணை நன்கு குளிப்பாட்டி விட்டிருந்தாள் மழையன்னை. வசந்தத்தின் வாயிலில் நுழையக் காத்திருக்கும் தன் செல்லப் பெண்ணின் மேனி எங்கும் முத்தங்களால் மினுமினுப்பாக்கிக் கொண்டிருந்தான் சூரியத் தகப்பன.; அந்த ஊருக்கென்றே பிரத்தியேகமாகப் போட்டிருந்த செம் மண் வீதியும் வரம்புகள் உயந்த பச்சை வயல்களும் சிவப்புக் கரையுடன் கூடிய கட்டம் போட்ட பாவாடையை அவள் அணிந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. ஊரின் இரு கண்களாக இருந்த அந்த இரு குளங்களின் அணைக்கட்டில் செழித்து வளர்ந்திருந்த பசிய புற்கள் மை தீட்டிய விழிகளின் கீழ் மடல்களை நினைப்பூட்டியது. கொல்லையில் இருந்த படி சின்னையா அப்பு சுருட்டு குடிப்பது போல் பச்சைப் பசேலென்ற அந்த பெரிய வயற் காட்டில் தனித்து நின்ற அச் சிறு குடிலில் இருந்து அடுப்புப் புகை வெளிக்கிளம்பியது..'

    'என்ன அற்புதமான ஒரு கற்பனை. வன்னி வாசி எனக்கே உதிக்காத இந்தக் கற்பனை அச் சிறு பெண்ணுக்குள் எப்படி முளைவிட்டது.. '. படிக்க உபயோகிக்கும் மேசையை ஒட்டிய சுவரில்  பக்குவமாய் ஒடடப்பட்டிருந்த அந்த எழுத்துக்களை எத்தனை தடவை படித்தாலும் பிரமிப்பு அடங்காது சாரதா ரீச்சருக்கு..

    இயற்கைக் காட்சி பற்றி எழுதித் தாங்கோ என்று நச்சரித்த தன் மகளுக்கு பரிதினி எழுதிக் கொடுத்த இந்த வரிகள் சாரதா ரீச்சரின் மனதுக்குள் ஆழப் புகுந்து இப்போது அவளின் படிப்பு மேசை இருந்த சுவரில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தது.  ரீச்சரின் மகளது அன்புக்குரிய அக்காவாக அந்த வீட்டுக்கு பழக்கப்பட்ட பரிதினியை மறக்கமுடியாத அளவு தவிக்கும் நிலைக்கு சாரதா ரீச்சர் வந்து நாட்கள் பலவாகிவிட்டன. எப்போதும் எதையோ தேடுவது போல் தோற்றமளிக்கும் அந்த விழிகளும்,, உதடு குவித்து வெளிவிடும் அந்த புன்னகையும் உயிர் கொடுத்த மண்ணை நோகடிக்கக்கூடாது என்பது போல் மென்மையாக ஆனால் அவதானமாக மிதித்துச் செல்லும் அந்த பாதங்களும்,; அவளை சராசரிப் பெண்ணில் இருந்து சற்று வித்தியாசப்படுத்துவது போல் இருக்கும் சாரதா ரீச்சருக்கு.   

    'பரிதினியை உடனே பார்க்க வேண்டும்.--- இரண்டு வாரங்கள்--. அப்பப்பா-- இருபது வருடங்கள் கடந்தது மாதிரி..


        


    'எந்தக் குறுக்கால போனது இந்த எளிய வேலையைச் செய்துதோ..? நாரி முறிய நான் போட்ட கதியால் இண்டைக்கு  ஏன் இப்பிடி அலங்கோலமா விழுந்து கிடக்கு-- ஐயோ! பிள்ளையாரப்பா! உனக்கு பிச்சிப் பூவிலை அருச்சனை செய்யவேண்டும் எண்டு ஆசைப்பட்ட ஐயரிட்டை, எங்கட வீட்டில நிறைய இருக்கு நான் கொண்டு வாறன் எண்டு எடுப்பாய்ச் சொல்லிபோட்டு வந்திட்டன். இப்ப என்ன செய்யிறது.-- போட்டுது.. எல்லாத்திலயும் மண் விழுந்து போட்டுது. எடி மேனை உதைப் பாத்துக் கொண்டிருக்க எப்பிடி உனக்கு மனம் வந்தது..?'  ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் அம்மா.

    'என்ன மேனை காலங்காத்தாலை இப்படிக் கத்துறாய்' என்று கேட்ட சிவம் அக்காவிடம் தன் புராணத்தைத் தொடங்கினாள் அம்மா.

    'வளவு முழக்க இருக்கிற இந்த பூக்கண்டுகளைப் பார்த்து சனங்களுக்கு ஒரே  பொறாமை எண்டு ஒரு காலத்திலை எனக்கு பெருமையாத் தான் இருந்தது. இப்ப என்னெண்டால் என்ரை தலையிலை எல்லாம் பொறிஞசு போய் நிக்குது. குனிஞ்சு ஒரு தும்பு எடுக்கிறாளில்லை.. எங்களை இருக்க நிக்க விடாமல் தேடித் தேடி நட்டதை விட்டிட்டுப் போறனே எண்ட கவலையிலை வன்னியிலை இருந்து வாறவன் போறவனுக்கெல்லாம் என்ரை பூக்கண்டு-- என்ரை பூக்கண்டு-- எண்டு கொஞ்சக்காலம் புலம்பிக் கொண்டிருந்தவள்.. பிறகு காட்டுக் குணம் வந்திட்டுது போல--. இப்ப ஒண்டிலையும் அக்கறை இல்லை. இல்லாட்டி கண்ணுக்கு முன்னாலை எல்லாம் தாறுமாறா பட்டுக் கொண்டு போக மரக்கட்டை மாதிரி பாத்துக் கொண்டிருப்பளே'. சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.


         


    ஒவ்வொரு நாளும் அந்தச் சிறு மண்வீட்டைக் கடந்து போகும் போதும் வரும் போதும் சாரதா ரீச்சரின் மனம் பரிதினியின் நினைவுகளால் நிரம்பியிருக்கும். மல்லாவியை விட்டு தங்கட ஊருக்குப் போன அன்று அவள் பட்ட பாட்டைப் பார்க்க வேண்டுமே... நூறு தரமாவது வீட்டைச் சுற்றியிருப்பாள். படலை வாசலில் நின்று அழகு பார்த்தாள். நேராய்... பக்கவாட்டாய்.. மூலைப்பக்கமாய்.. ஷஎத்தனை தடவை பார்த்தாலும் பொச்சம் தீராது ரீச்சர்ஷ என்று ஒரு முறை அவள் சொன்னது நினைவில் வந்தது.
    முன் பக்க வளவை நிறைத்திருக்கும் பெரிய இரு வேம்புகள், வலப்பக்க பின் மூலையில் ஒரு பலா, இடது பக்கமாய் ஒரு பெரிய புளி என்று வீட்டுச் சொந்தக்காரருக்கே கிடைக்காத நிழலும் குளிர்ச்சியும் அந்த வீட்டுக்கு இருந்ததை ரீச்சரும் உணர்ந்நிருந்தாள். என் வீடு என்ற தலைப்பில்; மகள் வித்தியாவுக்கு அவள் எமுதிக் கொடுத்தது நினைவில் பசுமையாய் வந்தது.

    'எட்டு பெரிய அறைகளையும் இரண்டு பெரிய விறாந்தைகளையும் கொண்ட அந்த பிரமாண்டமான வீட்டுக்குள் கிடைக்காத அந்த சுகத்தை 20 அடி நீளமே உள்ள இந்த சிறு வீடு எனக்கு தருகிறது. சாத்திர விதிமுறைக்கு பொருந்தாதது தான். ஆனாலும் முன் விறாந்தையில் இருப்பவருக்கு தெரியாமல் அறைக்குள் போய்வர, உடுப்பு மாற்ற வசதியாக.--,. மாத சுகயீனம் வந்தால் அம்மாவின் கெடுபிடிகளுக்கு அகப்படாமல் அந்த சிறு பத்தியில் ஒதுங்கிப் படுக்க--, ஒவ்வொரு நாள் காலையிலும் அவள் கடவுளாக மதிக்கும் அந்த சூரியதேவன் தானே வந்து தட்டி எமுப்பக் கூடிய வகையில்  கிழக்கு முகமாக காயாத் தடிகளினால் சட்டமிடப்பட்ட முன.;விறாந்தையில படுக்க-- என்று  எனக்கு பிடித்தமான இந்த வீட்டை இழப்பது என்னையே இழப்பது போன்றது.
    'றேடியோ சுற்றிக் கேட்பதற்கென தெற்கு சுவரோரமாய் ஒரு பழைய சைக்கிள், இருக்கையாய் பாவிப்பதற்கென பலகை, பலகைக்கு பக்கத்தில் ஒரு புத்தக இறாக்கை, ஒரேயொரு கதிரை அதில் வைத்து எழுதுவதற்கு ஒரு பலகை,.. எதுவுமே எங்களுக்கு சொந்தமில்லைத் தான். ஆனால் சொந்தமற்ற அவற்றுக்குள் நிறைய சொந்தங்கள் புதிதாக உருவாகிவிட்டிருந்தன. போகும் போது அவரவர்களிடம் அவை போய்ச் சேர்ந்து விடும்.'
    இவளது எழுத்துக்களின் லயிப்பால் ஒரு தடவை அவள் பரிதினியிடம் ஷ பிள்ளை உமக்குள்; இருக்கிற ஆற்றல்களை நீர்; பயன்படுத்த வேண்டும். கதை எழுதினீரெண்டால் நான் பிரசுரிக்க ஏற்பாடு செய்வன் என்று கேட்டபோது ஷ ரீச்சர் எனக்கு துண்டு துண்டாத் தான் எதையும் எழுத வருமே தவிர சம்பவங்களைக் கோர்க்க வராது.ஷ என்று சிரித்துக் கொண்டே அவள் சொன்னது இன்றும் பசுமையாய் காதில் ஒலித்தது.

    'இவளிடம் இருக்கும் கற்பனையும் உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த நேர்மையும், எதையும் ஆழ்ந்து  அவதானிக்கும் விதமும் சரியான முறையில் வழிகாட்டப்பட்டால் இன்று இவள் எங்கேயோ போயிருப்பாள். நாளைக்கு லீவு விடுகினம். போய் இரண்டு நாள் என்றாலும் அவளுடன் தங்க வேண்டும் பெத்த பிள்ளையிடம் கூட இப்படி இருப்பனோ தெரியேல்லை.. 


      


    'மேனை உனக்கு கொஞ்சமெண்டாலும் அறிவு நினைவு இருக்க வேணும்.. வீடு முழக்க ஒழுக்கு. எதால ஒழுகுது எண்டே கண்டுபிடிக்கேலாமல் நான் அந்தரிச்சுக் கொண்டு இருக்கிறன் நீ என்னடாவென்றால் வேதக்கார வீடுகள் மாதிரி வலு சிம்பிளா செருப்போட திரியிறாய்ஃ இம்மை வறுமை தெரியாமல் இப்பிடி புத்தகம் படிச்சுக் கொண்டிருக்க என்னெண்டு மனம் வருகுது. பொங்கல் வரப்போகுது. இந்த ஒழுக்கோட அல்லாடுறது எப்பிடி--.. வளவு கூட்டித் துப்பரவாக்குறது எப்பிடி---..

    வீட்டுக்கு கம்பீரத்தைக் கொடுக்கவென அந்தக் காலத்தில் ஆயிரமாயிரமாய்ச் செலவழித்து முன்புறமும் வலப்புறமும் உள்ள முகப்புப் பகுதியில் எழுப்பின சீமெந்து பிளாட்டின் மேல் இத்தனை வருட கால இடப்பெயர்வில் கவனிக்க ஆட்களின்றி குவிந்த  வேப்பங்கஞ்சல்களும் மழைநீரும் தேங்கி ஊறினதால் பிளாட்டின் கம்பிகள் பொருமியதோ, அதனால் பெய்யும் மழை எல்லாம் அப்படியே சுவரை ஈரமாக்கி சுவரோரமாக வழிந்து தரையை ஈரமாக்குவதோ,. இதை திருத்துவதென்றால் இலட்சக்கணக்கில் முடியும் என்று மேசன்காரன் சொன்னதோ அம்மா அறிய வாய்ப்பில்லை.

    'கொப்பர் உனக்கெண்டு பார்த்து பார்த்து கட்டின வீடெல்லே இது. கொஞ்சமெண்டாலும் அக்கறை இருக்கவேணும். இலட்சக் கணக்கில் செலவழிச்சுக் கட்டிப்போட்டு இப்ப ஓலை வீட்டைவிடக் கேவலமா இருக்கு. மேசன்காரனை ஒருக்காக் கூட்டிவந்து காட்டுங்கோ எண்டு தெரிஞ்சவை போனவை எல்லாரையும் கேட்டு அலுத்துப் போச்சு'.

      


    இந்தப் பிள்ளைக்கு என்ன நடந்திருக்கும்.. ஊரிலேயே பெரிய வீடு. இயற்கை மீதான அவள் நேசிப்பின் இலக்கணமாய் முன்புறமும் இடதுபுறமும் பெரிய பூந்தோட்டம். பிறகென்ன நடந்தது. சிறு உணர்வையும் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்த அந்த கண்களுக்குள்  இந்த மரத்தனம் எப்பிடி நுழைந்திருக்கும். இவளது கவலைக்கு காரணத்தை எப்பிடியும் கண்டுபிடித்தாக வேண்டும்.

    ஷஇஞ்சரப்பா பரிதினியிட்ட போனனான். கண் கொண்டு பார்க்கேலாமல் கிடக்கு. மெலிமெலியென்று மெலிஞ்சு முழியும் வெளியில தள்ளி சாவாரில் ஒன்றாய் திரியுதப்பா பெட்டை.
    'தாய் மனிசி என்னவாம்'
    நான் அண்டைக்கு போகேக்கை தாயும் மேளும் என்னவோ அமளிப்பட்டவை. நான் கொஞ்சநேரம் வெளியில நிண்டு காது குடுத்தனான். மனிசி தாறுமாறாய் ஏசுது. பக்கத்து வீடு ஆடு வளவுக்கை நிண்டு பூமரமெல்லாம் தின்ன இவள் பார்த்;துக் கொண்டு பேசாமல் இருக்கிறாளாம். இடம் பெயர முதல் வளவுப் பூக்கண்டு முழக்க இவள் தேடித் தேடி வைச்சது தானாம். இப்ப ஒண்டையும் திரும்பிப் பார்க்கிறாளில்லையாம். வன்னியில இருந்து வந்த நாள் தொடக்கம் இப்பிடித் தான் இருக்கிறாளாம். ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியுதில்லை. உங்களுக்கு தெரியும் தானே அவளிட்டை இருந்து எதையும் அறியேலாது எண்டு--.

    'மூக்கும் முழியுமாய் இருக்கிறாள். எங்கையன் மனசைக் குடுத்திட்டாளோ'
    'என்னெண்டு தெரியேல்லையப்பா. லீவு முடிஞ்சு போறதுக்கிடையில ஏதாவது செய்யவேணும்.
    'அருமையான பெட்டை. அக்காவின்ரை பெடியனுக்கு கேட்டுப்பார்ப்பம் எண்டு நினைச்சன், நீ சொல்லுறதைப் பார்த்தால்---
    'சும்மா விசர்க்கதை கதையாமல் அவளை முதல்ல நிமிர்த்துறதுக்கு வழி சொல்லுங்கோ..
    'நினைக்கிறதை கிறுக்கிற பழக்கம் அவளுக்கு இருக்கெண்டு முந்தி ஒருக்கால் சொன்னனீரெல்லே.. இரண்டு நாளைக்கு அங்கை நிண்டு மேசையைக் கிளறிப்பாரும்.. காதல் பிரச்சனையாத் தான் இருக்கும். இந்த வயசில வேறென்ன இருக்கு கவலைப்பட...

       


    'கடவுளே என்ரை பிள்ளைக்கு ஒண்டும் நடக்கக் கூடாது. கறண்டகம் மாதிரி என்ன வடிவா இருந்தவள் இப்பிடி இளைச்சுப் போட்டாளே. தேப்பன்ரை வினை கொஞ்சம் இருக்குத் தான். வாய்விட்டு எதையாவது சொன்னால் தானே பரிகாரம் தேடலாம். காத்துக் கறுப்புப் பட்டிருக்கும் என்று ஐயரிட்டை நூல் வாங்கிக் கட்டியும் ஒண்டும் நடக்கேல்லை. உடம்பில எந்த வருத்தமும் இல்லை எண்டு டாக்குத்தர் சொல்லிப் போட்டார். அண்டைக்கு கோவிலிலை வைச்சு அந்த அம்பிகம் என்னமாய் புpடுங்கி எடுத்தாள். என்ரை பிள்ளை உயிர் போனாலும் அப்பிடிப் போகாது எண்டு கிழி கிழி எண்டு கிழிச்சுப் போட்டு வந்து அண்டு முழக்க ஒரு வாய் தண்ணி குடிக்காமல் இருந்ததனான்.. என்னில வஞ்சம் தீர்க்கிற மாதிரியெல்லே திரியுறாள். என்ரை மனதறிய நான் ஒரு பிழையும் விடேல்லையே. கோழி மிதிச்சு குஞ்சு சாகுமே. மல்லாவியல நிண்டு வரமாட்டன் எண்டு அடம்பிடிச்சவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்த பிழையைத் தவிர வேறை எந்தப் பிழையும் நான் செய்யேல்லை. முன்னம் முன்னம் வந்தது. பிள்ளையாரே அவளுக்கொண்டென்றால் என்னை உயிரோடை பார்க்க மாட்டாய். அவள் அம்பிகம் சொன்னதில உண்மை இருக்குமோ---, 


      


    'அம்மா உங்கட பிள்ளை பழைய மாதிரி வர என்னவெண்டாலும் செய்வீங்களே...ஷஅம்மாவைக் கேட்ட சாரதா ரீச்சரிடம் ஷஎன்ன ரீச்சர் இப்பிடிக் கேட்டிட்டீங்கள். என்ரை பிள்ளையைவிட எனக்கு வேறேதன் முக்கியமாய் இருக்குமே.,உங்களைக் கண்ட பிறகு தான் கொஞ்சம் உயிர் வந்த மாதிரி திரியிறாள் உங்களுக்குத் தான் ரீச்சர் அவளின்ரை மனசுக்கை இருக்கிறதைக் கண்டு பிடிக்கேலும்.. என்ரை பிள்ளையை எப்பிடியாவது முந்தி இருந்த மாதிரி ஆக்கி விடுங்;கோ ஷ என்று தவிப்பு நிறைந்த குரலில் சொன்ன அம்மாவிடம் ஷஅப்ப மல்லாவி போறதுக்கு ரெடியா இருங்கோஷ என்று சிரித்தபடி சொன்ன சாரதா ரீச்சர் பரிதினியை பார்க்க அவளின் அறைக்குள் நுழைந்தார்.

    'பரிதினி நாளைக்கு வெளிக்கிடுவம் எண்டு நினைக்கிறன்'
    'ஏன் ரீச்சர் பள்ளிக்கூடம் துவங்க இன்னும் ஒரு கிழமை இருக்கெல்லே. இன்னும் இரண்டுமூன்று நாள் தங்கிப்போட்டுப் போங்கோவன்
    'இல்லைப் பிள்ளை இரண்டு நாள் எண்டு வந்து இஞ்சை இப்ப உம்மோடை இரண்டு கிழமையெல்லே தங்கிப்போட்டன். அதுசரி. உம்மை நான் மல்லாவிக்கு கூட்டிக்கொண்டு போறதா உத்தேசம்.. உமக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கோ என்று அறியத் தான் இப்ப வந்தனான். அவளின் கண்களுக்குள் பழைய ஒளி ஊடுருவியதை அவதானித்தவாறே பேச்சைத் தொடர்ந்த சாரதா ரீச்சர் ஷஎங்கட பள்ளிக்கூடத்தில தமிழ் ரீச்சர் ஒரு வருட விடுமுறையில போறா.. நீர் கொஞ்ச நாளைக்கு அங்க வந்து படிப்பியும் நான் எல்லாம் ஒழுங்குபடுத்தியிட்டன். என்ன சம்மதம் தானே..'
    'அம்மா இல்லாமல் என்னால எங்கையும் இருக்கேலாது ரீச்சர்', தயங்கித் தயங்கி அவளிடமிருந்து வந்தது வார்த்தைகள்.
    'அவவையும் கூட்டிக்கொண்டு போறது.'
    'அவ வரமாட்டா ரீச்சர்'
    அது நானெல்லோ அவவைக் கூட்டிக் கொண்டு வாறது. நீங்கள் முந்தி இருந்த வீடு இப்பவும் அப்பிடியே இருக்கு. அங்கையே தங்கலாம்.. பரிதினிக்குள் பழைய பரிதினியைக் கண்ட புழுகம் ரீச்சருக்குள்.


      


    கண்கள் தாரை தாரையாக நீரை உகுக்க ரீச்சர் கொடுத்த பரிதினியின் எழுத்துக்களை படிக்கத் தொடங்கினாள் அம்மா
    'படுங்கோ.. நல்லாப் படுங்கோ.. பிச்சிப் பூ கேட்குது உங்களுக்கு. மல்லாவி வீட்டில், தானா முளைச்ச அந்த முல்லைக் கொடிக்கு ஒரு தடி நட்டுவிடுங்கோ எண்டு எத்தனை நாள் சொல்லியிருப்பன். கால் முறிஞ்சு கிடக்காட்டில் உங்களைக்  கெஞ்சியிருப்பனே. நட்டவைக்கு தெரியும் தானே படரவிட நீ பேசாமல் கிட என்று எவ்வளவு விட்டேத்தியா போனனீங்கள். என்ர கண்ணுக்கு முன்னாலேயே பக்கத்து வீடு ஆடு நித்திய கல்யாணி மரத்தை கடிச்சுத் தின்ன பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனீங்களெல்லே. கலையுங்கோ கலையுங்கோ எண்டு கத்தினதுக்கு இந்த நாத்தல் மண்ணுக்கு உது பூக்கும் எண்டு கனவு காணுறியே எண்டு எவ்வளவு இலேசா சொன்னியள். பாருங்கோ உங்கட கண்ணுக்கு முன்னாலேயே இந்தப் பூமரம் எல்லாம் அழியப்போகுது. இருந்து பாருங்கோ.. அப்ப தான் என்ரை மனம் ஆறும்.'

    'வேணும் நல்லா வேணும். கடவுள் தந்த தண்டனை இது. வயலூர்ப்பிளளையாரிட்டை வரம் வேண்ட மட்டும் தானே பறந்து பறந்து திரியுறனீங்கள். அந்த வீட்டில கொஞ்சமாவது கவனம் எடுத்தனீங்களே. பிறத்தியார் வளவில போட்ட இந்த வீட்டில இந்தளவு வாரப்பாடு இருக்கக் கூடாது எண்டு செவ்வாய் வெள்ளி சாம்பிராணி காட்டக் கூட மனம் வாறேல்லை உங்களுக்கு. ஊருக்குப் போய்த் தான் பொங்குறது எண்டு அந்த ஏழு வருஷமும் பொங்கலே இல்ல அந்த வீட்டில--. வீடு ஒழுகுது எண்டு பக்கத்து வீட்டு அண்ணையிட்ட வேண்டின தரப்பாளைக் கூட போடாமல் ஒழுக்கு இல்லாத இடமாப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கி படுத்தனீங்கள். சங்கக் கடையிலை பொலித்தீன் வேண்டிக் கொண்டு வந்து தட்டத் தனியனாய் ஒழுக்குக்கு நான் செருக சொந்த வீட்டில கூட மனிசர் இப்பிடி அக்கறைப்படமாட்டுதுகள்-- இது என்னடாவெண்டால் விசர்க்கோலங்கொண்டு அலையுது. எண்டு புறுபுறுத்தபடி  பக்கத்து வீட்டு மனிசியோடை ஊர்ப்புதினம் அளந்தனீங்களெல்லே. இடம் பெயர்ந்து ஒண்ட இடமில்லாமல் தவிச்ச எங்களை ஏழு வருஷம் வாழ வைத்த அந்த வீட்டில இல்லாத அக்கறை இஞ்ச மட்டும் ஏன் வரவேணும்.'

    'நான் இப்பிடி நடக்கிறது பிழையெண்டு எனக்கு வடிவாத் தெரியுது. ஆனாலும் இவ இப்பிடி ஓடித்திரிய ஆவேசமாக்கிடக்கு. ஏதோ தான் தான் திறம் எண்ட மாதிரியும் மற்றவை இழக்கம் எண்ட மாதிரியும் நினைப்பு. அந்தரிச்சுப்போய் நிற்கும் போது எவ்வளவு இதமாக் கதைச்சு தங்கட வளவுக்கை கொட்டில் போட இடங் கொடுத்த அவையைப்பற்றி இவ்வளவு மட்டமா கதைக்கேக்கை உண்மையில அவ என்ரை அம்மாவோ எண்டும் சந்தேகம் வருதுது. 'இந்த அவிச்சலுக்குள்ள என்னெண்டுதான் காலம் போகுதோ எண்ட புறுபுறுப்பை மழைக்காலத்தில் முழங்கால் புதையுpற சேற்றில என்னெண்டு தான் இதுகள் சீவிக்குதுகளோ எண்டு மாத்திப் போடுவாள். வீட்டு வளவுக்கை உண்டாக்கின கத்தரி,பயித்தை,மிளகாய் எண்டு வீட்டுக்கார அண்ணை குடுக்கிற எல்லாத்தையும் வாங்கிச் சமைத்துக் கொண்டேஷஎடி உனக்கு ஒரு புதினம் தெரியுமே.. உந்தப் புளியும், வயலுக்கை வாற நெல்லும், செத்தலும் போக உப்பும் கருவாடும் மட்டும் கொஞ்சம் சாசு கொடுத்து வாங்கினால் மழைக்காலம் முழக்க வயித்துப்பாட்டுக்கு போதும் எண்டு உந்த கிழவி சொல்லுது. என்று நொடிக்கும் போது அம்மா எண்டும் பாராமல் மூஞ்சியில இரண்டு அறைவிட்டா என்ன என்டு மனம் ஆங்காரம் கொள்ளுது. இவள் மாற மாட்டாளோ'

    'என்னெண்டாலும் என்ரை அம்மா. அவளைக் கவலைப்படுத்தாமல் பார்க்க வேணும். எனக்கு எங்கிருந்து இந்தப் பழி தீர்க்கிற புத்தி வந்துதோ தெரியேல்லை. தேப்பன் மாதிரி எல்லாத்தையும் மனசுக்கை வைத்து புழங்குற சாதி எண்டு அம்மா திட்டுறது சரிதான். சரியோ பிழையோ எல்லாத்தையும் உடனுக்குடன் கக்கிவிடுவாள். என்னைப்போல் சாதிக்க மாட்டாள் என்றளவில் என்னைவிட அம்மா மேல்தான்.'


        

    போனவுடன் அந்த முல்லைக் கொடிக்கு ஒரு தடி நட வேணும் என்று நினைத்த படி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த பரிதினியை தன் பாரம் எல்லாவற்றையும் புதிய தடியொன்றில் ஒப்படைத்துவிட்டு நின்ற அந்த முல்லைக் கொடி வரவேற்றது. இதென்ன உலக மகா அதிசயம் என்ற படி தாயை ஏறிட்டு நோக்கிய மகளின் விழிகளை சந்திக்கும் திராணி, தான் அறியாமல் விட்ட பிழைகளுக்காக பகல்; முழக்க அழுதழுது வீங்கிய அந்த தாயின் விழிகளுக்கு இருக்கவில்லை



        