Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Friday, March 07, 2014

அனைத்துலகப் பெண்கள் தினம்



இனம், மதம், நிறம், மொழி, கலாசாரம், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் வேறுபட்டபோதும் பெண் என்ற அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூக நீதி, சம உரிமை, சமத்துவம் போன்றவற்றுக்காகவும் ஒன்று திரண்டு அகிலம் எங்கணும் குரல் கொடுக்கும் நாள் இது. நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலையும், ஆண்களுக்கு இணையான ஊதியமும் கோரி பெண் நெசவுத் தொழிலாளர்கள் இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1857ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி தொழிற்சங்க ரீதியாக ஒன்று திரண்டு முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்க மண்ணில் உரிமைப் போராட்டத்தில் குதித்த நாள் இது. உலக சனத்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்ட தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பெண்கள். அதேசமயம் உலக மொத்த வருமானத்தில் பத்திலொரு பகுதியை மட்டுமே பெறும் பரிதாபத்துக்குரியவர்களும் இவர்கள் தான். எமது பிரதேசத்தில் அரச உத்தியோகங்களில் இந்த பாரபட்சநிலை இல்லாதிருப்பினும் கூலித்தொழில்களில் இப் பாரபட்சம் அதிகமாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. குறைந்த கூலியில் கொள்ளை இலாபம் அடிக்கும் நோக்குடன் தமது உமைப்பை சுரண்டுபவர்களுக்கு எதிராக முதன்முதல் அணிதிரண்டு போர்க்கொடி தூக்கிய நாள் இது.

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு தான் விரும்பியதை அடைதல். இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து கள்ளர், பொய்யர், வஞ்சகர் போன்ற பலதரப்பட்ட மனித வர்க்கங்களைக் கடந்து நேரிய வழியில் நீதி, அன்பு, ஓழுக்கம் என்பவற்றைப் பின்பற்றி தனது இலக்கை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை திறமை நிதானம் என்ற மூன்று பண்புகளுமே. இந்த பண்புகளை பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அழகு அல்ல-- ஆளுமை என்ற அம்சமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால் உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் ---------

நிமிர்ந்த நடை, நேரிய பார்வை, அமைதியும் எளிமையும் இயைந்த தோற்றம், ஆழமான பேச்சு இவையே ஆளுமையின் வெளிப்பாடுகள். எமது தோற்றத்தினால், எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் எம்மைச் சூழ இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல்-- இது தான் மனித ஆளுமை. ஆறடி உயரத்திலும் துவண்டு, கூனிக் குழைந்து நடப்பதை விட ஐந்தடி உயரத்திலும் கம்பீரமாக நிற்க முனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றதாக இருப்பினும் தமது அறிவுபூர்வமான பேச்சால் அடுத்தவர் கவனத்தை தம்மீது திருப்ப முனைவது ஆளுமை. காலால் நிலத்தில் கோலம் வரைந்து கொண்டு அல்லது கண்கறை அங்குமிங்கும் அலைய விட்டுக் கொண்டு  எதிரிலிருப்பவரிடம்; கதை கேட்பது அல்லது கதை சொல்வது ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக்கிவிடுகின்றது. அழகுக்கும் ஆளுமைக்குமிடையிலான பேதத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது உங்கள் விடுதலைக்கான அடித்தளம் இடப்படுகின்றது. -------

பெண் என்பவள் போகத்துக்குரியவள் என்ற அசைக்க முடியாத கருத்துநிலை பள்ளிப் பக்கமே எட்டிப்பார்க்காத பாமரப் பெண்ணைவிட பட்டப்படிப்பை முடித்துப் பதவியிலிருக்கும் பெண்ணிடம் அதிகம் என்பது கசப்பான உண்மை. அறிவுக் கண் திறந்து அறிவுப் பாதையில் நடைபயிலத் தொடங்குபவள் கூட அழகுக் கவசங்களைக் கைவிட விரும்புவதில்லை. மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு அடிமையாகும் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு மட்டுமே அழகும் அலங்காரமும் ஆக்கிரமிக்க முடியும்.  அழகுப் பதுமைகளாக மட்டுமே இதுவரை உங்களைப் பார்த்துப் பழகிய கண்களை உங்கள் ஆளுமையால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்ற யதார்த்தம் எப்போது உங்களுக்கு உறைக்கின்றதோ அங்குதான் உங்கள் முன்னேற்றத்திற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பெறுகின்றன.

அறிவுக் கண்களால் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். ஒப்பீட்டளவில் நீங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும் இடமும் இதுவாகவே இருக்கின்றது. நாளைய சமூகத்தை வடிவமைக்கப் போகும் சிற்பிகளைத் தயார்படுத்தும் உன்னத இடம் வகுப்பறை. அறிவுக் கவசமிட்டு, ஆளுமையின் மூலம் கவர்ந்திழுத்து, தோற்றம், ஒழுக்கம், உயரிய செயற்பாடுகள் மூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களிடம் பதிய வைக்கும் உன்னதமான இடம். தனது குருவிடம் பக்தியும் மரியாதையும் கொள்வதற்கு தடையாக இருப்பவை கண்ணைப் பறிக்கும் ஆடையும், கழுத்து நிறைந்த ஆபரணங்களும் அமைதியைப் பறிக்கும் கொலுசுச் சத்தமுமே. வெள்ளைச் சீருடை, சீரான தலையலங்காரம், ஆபரணத் தடை என்று பிஞ்சு மனங்களில் புறத்தூய்மையை சட்டம் போட்டு ஏற்படுத்தும் நல்ல பண்பை வகுத்திருக்கும் நீங்களே உங்கள் கோலங்களால் அவர்களின் அகத்தை அழுக்காக்குகின்றீர்கள் என்ற யதார்த்தத்தை உணருங்காலம் எப்போது வருகின்றதோ அங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கற்களை நீங்களே எழுப்புகின்றீர்கள்.

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டுப் பரிணமிக்க வேண்டிய இடம் நிர்வாகப் பதவிகள். கம்பீரம் பொருந்திய காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடு பிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில், பெரிய நிறுவனத்தையே கட்டியிழுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. அழகு விம்பம் ஒன்று தனக்குச் சமமான வகையில் அல்லது தன்னைவிடவும் சிறந்த வகையில் கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச் சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு உங்கள் அகப் புறத் தோற்றங்கள் மாறவேண்டும். நகப்பூச்சின் தரம், ஆபரணங்களின் கன பரிமாணம், வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையம் என்பவற்றை ஆராயும் இடமாக வன்றி ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெறும் விருப்பம் உங்களிடம் எப்போது தலைதூக்குகின்றதோ அப்போது உங்கள் விடுதலை உங்கள் கண்ணெதிரில்.-----

புதிய உயிரொன்றின் உருவாக்கத்துக்கு வேண்டிய இரு அடிப்படை மூலப் பொருட்களும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தைச் சமைக்கும் மேலதிகப் பொறுப்பு கருப்பைக்கு மட்டுமே உரியது. கருவைச் சுமந்த இரண்டாவது மாதத்திலிருந்தே தாயின் உணர்வுகள் கருவைப் பாதிக்கின்றன என அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையானால் ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் கருவியே தான்  என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் உற்பத்திச் சக்தியே தான் என்ற கருத்துநிலைக்கு ணெ; மாறுதல் வேண்டும். நீங்களே விரும்பி ஆணுடன் இணைந்து குழந்தையும் பெற்றுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்ற முறைப்பாட்டுடன் அடுத்தவர் முன்னே போய் நிற்காது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்கத்  தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை எப்போது உருவாக்கிக் கொள்ளுகின்றீர்களோ அன்றே உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில்-----

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும் என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும் முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். 'உயிரைக் காக்கும்! உயிரினைச் சேர்த்திடும்! உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்! உயிரிலும் இந்தப் பெண்மை இனிது! எனவே பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் மாறவேண்டும் உங்கள் மனம் மாறவேண்டும். மனமாற்றம் மானுட விடுதலையை வென்றெடுக்கும் என்பது உண்மையானால் 

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

ஸ்ரீகாந்தலட்சுமி
08-03-2006

Tuesday, February 04, 2014

தமிழ்ச் சமூகமும் பெண்களும் அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள் வழியான சமூக நோக்கு




சமூகம்

மனித வாழ்வின் இன்றைய போக்கைத் தர்க்கரீதியில் விளங்கிக்கொள்ள விழைபவர்கள் அல்லது வாழ்வில் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்சினைகளுக்கோ அல்லது சமூகப்பிரச்சனைகளுக்கோ அறிவியல்ரீதியில் தீர்வுகண்டு சமூக நலனுக்கு உழைக்க முனைபவர்கள் அனைவருக்குமே சமூகம் என்ற கருத்துநிலை தொடர்பான தெளிவான புரிதல் மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகள், பகைமைகள், போராட்டங்கள் பெரிதாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகமுமே ஒரு குடும்பமாக இருந்த ஆதிகால சாதாரண சமூக அமைப்புக்கோ அல்லது ஆபிரிக்க, அமெரிக்க, தென் மற்றும் தென்கிழக்காசியப் பிரதேசங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நிலைகொண்டிருக்கும் ஆதிகால சமூகங்களின் எச்சங்களான பழங்குடிச் சமூகங்களுக்கோ பொருந்தக் கூடிய 'கூடிவாழும் மக்கள் குழு' என்ற சுருக்கமான வரைவிலக்கணமானது வரலாற்றுப் படிநிலை வளர்ச்சிகளின் ஒத்திசைவுகளையும் முரண்களையும் உள்வாங்கி, மாற்றங்கள்;, அழிவுகள் மற்றும் வளர்ச்சிகளை மாறிமாறிச் சந்தித்து சிக்கல் வாய்ந்த சமூகம் (Complex society) என அழைக்கப்படும் இன்றைய சமூக அமைப்பில் 'தனித்துவ வாழ்விடம், இனம், மதம், நிறம், மொழி, பண்பாட்டு அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களின் அடிப்படையில் தனித்துவமானதாக இருக்கும் அதேசமயம் தொழில்கள், சாதியமைப்பு போன்ற பல உட்பிளவுகளையும் கொண்டிருக்கின்ற, ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழுகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழு' என பரந்து விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்டதாக மாறியிருக்கிறது. எல்லைக்கோடு தெளிவாக இனங்காணப்படக்கூடிய எளிய சாதாரண நிலையிலிருந்து வேகத்தை நோக்கி வேகமாய் ஓடி வேகத்துக்குள் வேகமாய் கரைந்து எங்கே போகின்றோம் என்று நின்று நிதானிக்க வழியின்றி சிந்தைக்குள் நுழைபவற்றையெல்லாம் முன்பின் யோசியாது செயலுக்குட்படுத்தும் துரித மாற்றச் செல்நெறியில் மனித சமூகம் நிலைகொண்டிருக்கிறது.

சமூக அமைப்பும் பெண்களும்

இவ்வுலகில் நிலைகொண்டிருக்கும் அனைத்துச் சமூகங்களும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்ல மனித வேட்கைகளின் வழியாகவும் உருவானதொன்று. இச்சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தனித்துவமான வரலாற்றை, பண்பாட்டை, தேசிய அடையாளத்தைக் கொண்டவை. பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் வேறுபட்டவையாக இருப்பது போன்றே இச்சமூகங்களின் தேவைகள், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகள் என்பவையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பழமைக்குள் நிற்பவர்கள், முற்றிலும் புதுமைக்குத் தாவியவர்கள், பழமையுமின்றி புதுமையுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள் என முரண்பட்ட மக்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கும் தற்போதைய சமூக அமைப்பானது தந்தை வழிச் சமூக அமைப்பு (Patriarchal society) ) எனப்படுகிறது. பிறக்கின்ற  குழந்தை தகப்பன் பெயரால் அறியப்படுவதும், குடும்பத்தின் சொத்துகளுக்கு தகப்பனே சொந்தக்காரனாய் இருப்பதும், குடும்ப, சமூக, நாட்டின் வளர்ச்சி தொடர்பான தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் ஆணின் ஆதிக்கம் இருப்பதும் தந்தைவழிச் சமூக அமைப்பின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மனிதனின் சிந்தனை, மொழி, நம்பிக்கைகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டங்கள், கட்டியமைக்கும் நிறுவன அமைப்புகள், கலை இலக்கிய வடிவங்கள், தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் இவ்வமைப்பு ஆழவேரோடி இருக்கின்றது.

உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின், இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப் போராடுதல்; மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். இந்த இரண்டு பணிகளையும் சரிவர ஆற்றுவதற்கு பெண்ணுக்குத் தேவையானது தம்மைத்தாமே பிணைத்துக்கொண்டிருக்கும்; தளைகளிலிருந்து அறிவார்ந்த ரீதியில் விடுபடுதல். அபிவிருத்தியடையவிரும்பும் எந்தவொரு சமூகமும்  அறிவுசார் ரீதியில் தம்மைத் தயார்படுத்தும் பெண்களிடமிருந்தே மேற்குறிப்பட்ட பிரயத்தனங்களை எதிர்பார்க்கும் வாய்ப்புண்டு.

சமூக நிறுவனங்கள்

சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும்; தனிநபர்களைவிட தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாகத் தனிநபர்களால் தோற்றுவிக்கப்பட்ட, ஒன்றுடனொன்று தங்கியிருக்கும் பல நிறுவனங்களதும் ஆதிக்கத்தில் உள்ளதொன்றாகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யவென மனிதரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்கள் இன்று சமூக உறுப்பினர்கள் மீது தமது விருப்பங்களை அமுல்படுத்துகின்ற ஒரு கருவியாக வளர்ந்தது மட்டுமன்றி, இவற்றில் சில தமது சமூகத்தின் பரப்பெல்லைக்கும் அப்பால் சென்று ஏனைய சமூகங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு பாரிய சக்திகளாகவும் உருவெடுத்திருக்கின்றன.

சமூக  நிறுவனங்களின்  ஆதார (Primary) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (Intermediate) நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (Secondary) நிறுவனங்கள் எனக் கூறப்படுகின்றன. கருவறை தொடங்கி கல்லறைவரை மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச்சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச்சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

தமிழ்ச் சமூகத்தின் அமைப்பு

மனிதன் தனித்த ஒரு அடையாளத்தை கொண்டவனல்ல. தமிழ் மொழியைப் பேசுபவன் என்ற வகையில் தமிழன் அல்லது தமிழச்சி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் கொண்டு தமிழ் சமூகத்தின் ஒரு ஆணையோ பெண்ணையோ அடையாளப்படுத்திவிடுதல் சாத்தியமல்ல. பிரதேச வேறுபாடு, சாதியினதும் சாதியின் உட்பிரிவுகளதும் வேறுபாடு, வர்க்க வேறுபாடு, மத வேறுபாடு, பால் வேறுபாடு, தொழில் வேறுபாடு என்று பரந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டுதான் ஒரு குறித்த சமூகத்தில் வாழும் மனிதனை அடையாளப்படுத்த முடிகிறது. இதற்கு பத்திரிகையில் வரும் மணமகன் மணமகள் தேவை விளம்பரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

'கொழும்பு இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய தனியார் வங்கியொன்றில் அதிகாரி தரத்தில் தொழில் புரியும் பட்டதாரி மகனுக்கு பெற்றோர் மணமகளை தேடுகின்றனர்.' இதையே சர்வதேசரீதியில் தகவல் இணையம் மூலமாக மணமகள் தேட விழைவோராயின், 'இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் சிறுபான்மை இன' என்ற மேலதிக சொற்றொடரையும் இணைக்க வேண்டியிருக்கும். பெண் என்று வரும்போது தகவல் மேலும் விரிவடைந்து  எடுப்பான தோற்றமும் மெல்லிய உடல்வாகும் வெள்ளை நிறமுடைய அழகும் குடும்பப்பாங்கும் நிறைந்த..............' என்று தொடரும்.

மொழிக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கைத் தீவின் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; இலங்கைத் தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரை இனங்காண முடியும்.  தமிழ்மொழியைப் பேசியபோதும் பேச்சு வழக்குத் தமிழில் யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத்தமிழ், மலையகத்தமிழ், முஸ்லிம் தமிழ் என்று பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட சமூகமாகவே இது காணப்படுகின்றது. மதம் சார்ந்து நோக்கும்போது இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்பன பிரதான சமயங்களாக பின்பற்றப்படுகின்றன.

சாதியமைப்பு எனப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் உள்ளது போன்று பிராமண சமூகத்தை உள்ளடக்கிய உயர்வகுப்பு, கள்ளர், தேவர் போன்றோரை உள்ளடக்கி பின்தங்கியவகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய தலித் எனப்படும் ஒதுக்கப்பட்டோர் என மூன்றுவகையான சாதியமைப்பு நிலைகொண்டிருப்பது போலன்றி இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பில் பிராமண சமூகம் உயர் தாழ் வகுப்பு என்ற எந்த அடைமொழியுமின்றி மிகச்சிறு அளவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேசமயம் நிலப்பிரதேசங்களில் உழவுத்தொழிலைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட வேளாள வகுப்பும் கரையோரப்பகுதிகளில் மீன்பிடியைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட  கரையார் வகுப்பும் தம்மை மேம்பட்ட வகுப்பாகவும் ஏனையோரை தாழ்த்தப்பட்ட வகுப்பாகவும் கருதும் தன்மை மிக ஆழமாக வேரோடிப்போயிருக்கிறது. 'நாங்கள் அந்தப் பகுதிக்குள் கை நனைப்பதில்லை, சம்பந்தம் பண்ணுவதில்லை' என்று பேசிக்கொள்ளுமளவிற்கு ஒவ்வொரு வகுப்பும் தனக்குள் பல உட்பிரிவுகளையும் உட்பிளவுகளையும் கொண்டிருக்கும் சமூகமாகவே தமிழ்ச்சமூகம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.
 
பொருளாதார நிலைகளின் அடிப்படையில் பாகுபடுத்தின் அரச உத்தியோகப் பாரம்பரியங்களைக் கொண்ட நடவைந எனப்படும் சிறுபான்மைப் படித்த உயர்வர்க்கம், விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்டு படிப்படியாக அரச உத்தியோகங்களுக்கு மாறிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம், கூலித் தொழில்களை அடிப்படைத் தொழிலாகக் கொண்டு இலவசக் கல்வியின் அனுகூலங்களால் மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருக்கும் தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்க்கம் என மூன்று பிரதான வர்க்கங்களை இங்கு இனங்காணமுடியும். உணவுமுறைகளிலும் கூட அரிசியே பிரதான உணவாக இருப்பினும் வன்னி வாழ் மக்களின் தவிடு கலந்த பச்சையரிசி, மட்டக்களப்புவாழ் தமிழ் மக்களின் வெள்ளைப் புழுங்கலரிசி, யாழ்ப்பாண மக்களின் தவிட்டுப் புழுங்கலரிசி என அரிசியின் வகைகள் மாறுவதும் கறிப் பக்குவங்கள் மற்றும்  கலாசார நிகழ்வுகளில் பரிமாறப்படும் பலகார வகைகளில் பிரதேச மணம் கமழ்வதும்  குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
 
ஏனைய சமூக அமைப்புகளைப் போன்றே தமிழ்ச்சமூகத்திலும்; தந்தை வழிச்சமூக அமைப்பே நிலைகொண்டிருக்கின்றபோதிலும் குடும்பத்தில் வீடு பெண்ணுக்கே சீதனமாகப் போய்ச்சேருதல்,  திருமணத்தின் பின்னர் ஆண் பெண்ணின் வீட்டில் வசித்தல் போன்ற ஆதித் தாயுரிமைச் சமூகத்தின் எச்சங்கள் இன்றும் நிலைகொண்டிருக்கும் சமூக அமைப்பாகவும் இது உள்ளது. இன்று பேரன் பேத்தி ஸ்தானத்தில் இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் எந்தவித எழுத்துப் பதிவுமின்றி 'சோறு கொடுப்பித்தல்' என்ற சடங்கின் மூலம் திருமணத்தை முடித்துக்கொண்டவர்களே.

தமிழ்ச் சமூகமும் பெண்களும்;

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித் தெரியும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்;.

அடக்குமுறையின் உச்சக் கட்டத்தில் அணிதிரண்டு உரிமைப் போராட்டம் நடத்தும் தொழிலாளி வர்க்கப் பெண்ணோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகூடிய சலுகைகளுக்காகக் கொடி உயர்த்தும் மேற்தட்டு வர்க்கப் பெண்ணோ அல்ல இலங்கைத் தமிழ்ப்பெண். 'எத்தனை தான் எண்ணுக்கணக்கற்ற தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்ணும் திருமணத்தின் மூலம் ஆணுடன் இணைக்கப்படும்போது அது சமுத்திரத்துடன் கலந்த ஆறு போன்றது' எனக்கூறும் மனுநீதி சாத்திரம் இன்றும் ஆழமாய் வேரோடியிருக்கும் சமூகத்தின் வார்ப்பு இவள். கல்விச் சுதந்திரமோ, திறமையின் அடிப்படையில் தொழில் பார்க்கும் சுதந்திரமோ மறுக்கப்படாதபோதும் தகப்பன், சகோதரன், கணவன், பிள்ளை என்று படிநிலையில் தங்கிவாழப் பயிற்றுவிக்கப்பட்டவள்.

இலங்கைத் தமிழ்ச்சமூகமானது இனத்தால், மொழியால், பண்பாட்டால் ஒன்றுபட்டபோதும் பொருளாதார அந்தஸ்து, கல்வி அறிவு, சாதிக்கட்டமைப்பு, மற்றும் சமூகப் பாரம்பரியங்களால் வேறுபட்ட வாழ்க்கை நிலையை, சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ள மூன்று நிலைப்பட்ட பெண்களை இனங்காட்டியிருக்கிறது.

தமிழ்ப் பெண் சமூகத்தின் வகை மாதிரிகள்

வாழ்தார வசதிகளைக் குவிமுனைப்படுத்தும் பண்பினர்;

வாழ்க்கையின் போக்கை உணவை மையப்படுத்தியே சிந்திப்பவர்கள். கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரத்தின் அவசியம் எதுவுமே புரியாதவர்கள். அறியாமை, பசி, பட்டினி, வறுமை, போசாக்கின்மை, எழுத்தறிவின்மை இவர்களைப் பீடித்திருக்கும் கொடுமையான நோய்கள். இவர்களுக்கு எமது அறிவுரைகள், கருத்தரங்குகள், எழுத்துவடிவ ஊடகங்கள் எதுவுமே பலனளிக்காது. எமது பேச்சுத்தரும் மாற்றத்தைவிடவும் எமது உருவ அமைப்பு, புறத்தோற்ற அமைப்பு, நடையுடைபாவனை அவர்களுக்கு பிரமிப்பையும் எம்மிலிருந்து ஒரு அன்னியத்தன்மையையும் ஏற்படுத்திவிடுகின்றன. உணவு தேடுவது அதற்காக உழைப்புத்தேடி அலைவது இதுதான் இவர்களின் முன்னுரிமை. கற்புநிலைக் கோட்பாடு, கணவன் மனைவி உறவில் மகோன்னதம், கல்வி கற்பதன் பலாபலன், சுகாதாரமாக வாழ்வதன் அவசியம் இவை அனைத்துமே இங்கு தாக்கம் ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு மிகமிகக் குறைவு. உழைப்பே இல்லாமல் அல்லற்படும் குடும்பங்கள், உழைப்பு மட்டுமன்றி மனைவியின் உழைப்பையும் சேர்த்து சுரண்டிக் குடித்து செலவழிக்கும் குடும்பங்கள் என்று இவர்கள் பலதரப்படுவர். வறுமை புதுப்புது ஏக்கங்களையும், கற்பனைகளையும் இவர்களிடம் உருவாக்குவது தவிர்க்க முடியாதது.  இங்குதான் கற்பனையை மையப்படுத்தும் சினிமா முதல்தர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அந்தஸ்தை மையப்படுத்தும் பண்பினர்

இவர்களுக்குப் போதிய உணவு இருக்கிறது. கல்வி கற்பதற்கு வசதியும் இருக்கிறது. உணவு. உடை, உறையுள் மூன்றும் போதியளவு கிடைக்கப்பெறும் இந்தப் பெண்கள் அடுத்து விரும்புவது சுகமான, சுலபமான வாழ்க்கையைத்தான். கல்வி இவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பெண்தான் குடும்பத்தின் ஆணிவேர் அச்சாணி என்பதெல்லாம் இந்தப் படித்தவர்களுக்கு தெரியாது. அழகாக இருப்பது எப்படி? அந்தஸ்துடன் வாழ்வது எப்படி? வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிப்பது எப்படி? இவைதான் இவர்களின் மனத்தை எந்நேரமும் ஆக்கிரமித்திருப்பவை. பெண்ணைப் பொத்திப் பொத்தி வளர்த்து ஒழுக்கமுள்ளவளாக, முடிந்தால் உழைப்பதனூடாக தட்டிலொரு பெரும் செல்வத்தை அள்ளித் தருபவளாக அல்லது இருக்கிறதை வித்துவிட்டாவது நல்ல மாப்பிளைக்கு கட்டிக்கொடுக்கும் வகையில் வளர்க்கப்படுபவளாக...... சூழல், வளர்ப்புமுறை, சிந்தனை அனைத்துமே இத்தகையதொரு வாழ்க்கைக்கு அடிகோலும் வகையிலே மையப்படுத்தப்படுகிறது. அடுத்தவர்களுடன் தம்மை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காணும் ஒப்பீட்டு வாழ்க்கை இங்கு பரவலாகக் காணப்படுகிறது. காதல் மனங்கள் அதிகமாகக் கருக்கொள்வதும், சினிமாவில் வரும் கதாநாயகனை, அல்லது உணர்வுகளைத் தூண்டும் நாவல்களின் கதாபாத்திரங்களைப் பார்த்து அப்படியொரு வாழ்க்கைக்கு ஏங்கித் தோற்றப் பொலிவிற்கும் செய்யும் தொழிலுக்கும் மனதைப் பறிகொடுப்பவர்கள் இவர்கள். இவர்களில் கல்வி கற்பது குடும்ப கௌரவத்தைப் பேணும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கல்வி கற்பவர்கள், தொழில்பார்க்க வேண்டும் என்பதற்காகக் கற்பவர்கள், அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கற்பவர்கள், எந்த நோக்கமும் அற்று எல்லோரும் படிக்கிறார்கள் நாமும் படிப்போம் என்று கற்பவர்கள் எனப் பலவகைப்படுவர். இலக்கியங்களில் இவர்கள் விரும்பிப் படிப்பது கதைகள் மட்டுமே. கருத்துமாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் கனவுகள், கற்பனைகள், ஏக்கங்கள், விரக்தியைத் தூண்டிவிடும் இலக்கியங்களை மட்டுமே விரும்பிப் படிப்பது இவர்களுக்கொரு சாபக்கேடு. வாழ்க்கை வேண்டும் அதிலும் அந்தஸ்தான வாழ்க்கை வேண்டும், குடும்ப கௌரவம், சாதிமதம் அனைத்திற்கும் ஒத்துவரக்கூடிய வரன் வேண்டும். இந்தத் வரையறைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். மனிதனுக்குள் இருந்து இயல்பாகவே கிளர்ந்தெழும் பாலுணர்வு பண்பாட்டு அம்சங்களால் கட்டுப்படுத்தப்படும் போது ஒழுக்கப்போர்வைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள முனைபவர்களும் இவர்கள்தான்.... இங்கும் கூட கருத்து மாற்றத்தை ஏற்படுத்துவதில் அறிவுசார் கருத்தரங்குகள், பேச்சுக்கள், எழுத்து ஊடகங்கள் தோல்வியடைந்து போகின்றன.

அறிவை முதன்மைப்படுத்தும் பண்பினர்

வாழ்க்கைப் போக்கை அறிவுசார் ரீதியில் உற்றுணர்ந்து அதன் ஓட்டத்திற்கமைய வாழ முனையும் சிறுபகுதி பெண்கள் இவர்கள். உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை உலக இலக்கியங்கள் வாயிலாகத் தேடி அறிந்து அதை சமூகத்துக்கு  வெளிப்படுத்த நினைப்பவர்கள், அறிவியல் கண்கொண்டு நோக்கி அனைத்தையும் அறிவால் பகுத்து அதன் சாதகபாதகங்களை சமூகத்திற்கு எடுத்துக்காட்ட முனைபவர்கள், ஒரு பெண்ணின் இயலாற்றல் எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுப் போய் நிற்பவர்கள், தனது அறிவுடமையை மூலதனமாக வைத்து சமூகத்தில் தளம் பதிக்க நினைத்து புரியாத மொழியில் இலக்கியம் படைக்க முனைபவர்கள், யதார்த்தம் சரியாகப் புரிந்தாலும் கட்டுக்கோப்புக்களைக் களைந்தெறிந்து தனித்து நடமாடும் வல்லமை இழந்தவர்கள், கைவிட்டுப்போன கணவனை, கைகால் இழந்தவனை தனியே நின்று குடும்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றவர்கள், எமது கலாச்சாரம், சமூகச்சூழல் என்பவற்றுக்குள் நின்றுகொண்டு தாம் பெற்ற அறிவைப் பகுத்தாராய முனையாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் அதை அப்படியே இங்கு பிரதிபலிக்க முயன்று தமது இனப் பெண்களின் ஏன் ஆண்களின் கேலிக்கும் இலக்காகின்றவர்கள் என இவர்கள் பலவகைப்படுவர்.

தமிழ்ப் பெண் சமூகத்தின் பண்புரு மாதிரிகள்

மாற்றம் நாடாப் பண்பு

'பட்டினி கிடந்தாலும் நல்லநாள் பெருநாளில் நாலுபேர் 'நாக்கு வளைக்காமல்' நல்லதாய் உடுத்துக் கொண்டு நிற்கவேண்டும்; வாயைக்கட்டி வயிற்றைக் கட்டியாவது நகைநட்டுச் சேர்க்க வேண்டும்; குடிகாரனோ, கூத்தியார் வீட்டுக்குப் போறவனோ, மாப்பிள்ளை எவனாக இருந்தாலும் இருப்பதை வித்துச் சுட்டாவது பிள்ளையைக் 'கரை' சேர்க்க வேண்டும்; ஆழமாய்ப் படித்து அதிகமாய் உழைத்தாலும், அடியுதை வாங்கிக்கொண்டு கணவனுடனேயே இருக்கவேண்டும்' என்ற சிந்தனைகள் ஆழமாய் புரையோடிப் போயிருக்கும் தமிழ்ப்; பெண்ணில் ஏற்படும் மாற்றம் சாதாரணமாக நோக்கப்படக்கூடியதல்ல. அறியாமையில் உழல்பவர்களை அறிவுசார் நடவடிக்கையால் மாற்ற முனையலாம். அதிகம்  படித்துவிட்டும் தன்னைச் சுற்றி விலங்குகளைத் தானே போட்டுக் கொள்பவளை கருத்தரங்குகளோ, கண்டனப் பேரணிகளோ மாற்றுவதென்பது இலேசானதொன்றல்ல. போதனைகள் தமிழ்ப் பெண்ணிடம் எடுபடுவதை விட அடுத்தவரின் கோலங்கள் எடுபடுவது அதிகம். இதற்கமையவே சமூகத்தில் பெண்களின் இருப்புநிலை பற்றிய தேடலையும் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.

பெண்ணுரிமைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

தனக்கெனத் தனித்துவ வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பெண்கள்; ஏனைய பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பினும், அறிவுசார் ரீதியில் ஆண்களுக்கு இணையாக வளர்ந்திருப்பினும் பிற்போக்குத்தனங்கள் மற்றும் மூடப் பழக்கவழக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவது தமிழ்ச்சமூகத்தின் பாமரப் பெண்ணுக்கு மட்டுமன்றி படித்த பெண்ணுக்கும் முடியவில்லை. ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ்ப் பெண்களை விடவும் ஈழத்துத் தமிழ்;ப் பெண்கள் சுதந்திரம் உடையவர்கள் என்ற கருத்துநிலை பலரிடையேயும் காணப்படுகிறது. கருவில் இருக்கும் போதே ஆணா பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்ணாயின் அதனை அழித்துவிட நிர்ப்பந்திக்கும் கணவனோ, அல்லது சாப்பாட்டில், வாழ்க்கை வசதிகளில், கல்வியறிவில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அப்பாக்களோ, அதுவுமன்றி திருமணம் செய்த பின்பும் அடிக்கொருதரம் பணம் கேட்டு அனுப்பும் மாமியார்களோ, அண்ணாவிடம் கோள்மூட்டிக் கொடுத்து அண்ணிக்கு அடிவாங்கிக் கொடுக்கும் மைத்துனிகளோ தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவு என்பதைப் பார்க்கும் போது அப்படி ஒரு கருத்து நிலை உண்மைதான் என்ற மயக்கநிலை இருக்கத்தான் செய்யும். இலவசக் கல்வி, சம வாய்ப்பு, சட்டத்தின் ஆதரவு போன்றவற்றால் ஏனைய தமிழ்ப் பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் எனினும் உலகிலுள்ள ஏனைய சமூகங்களிலுள்ளதைப் போன்று  பிற்போக்குத்தனங்களின் ஆக்கிரமிப்புக்குள்  பல நூற்றாண்டுகள் சிக்குப்பட்டிருப்பவர்களாகவே இவர்கள் இனங்காணப்படுகின்றனர்.

ஒடுக்குமுறைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

ஒரு இனத்துக்குள்ளேயே பிரதேச வேறுபாடும், சாதி, மத, வர்க்கம், பால் என்ற அடையாளங்களுடன் பெண் என வரும்போது புறத்தோற்ற அம்சங்களும் முக்கியம் பெற்றுவிடுகின்றன. இந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டு தான் பெண்ணொடுக்குமுறை என்ற அம்சத்தையும் கருத்தில் கொள்ள முடியும். குடும்பம், சமூகம், அரசு என்ற மூன்று வலுவான நிறுவனங்களின் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த அடையாளங்களின் நேரடியான, மறைமுகமான தாக்கங்களுக்கு உட்பட்டவளாகவே இன்றைய பெண்ணின் விம்பத்தை பார்க்க முடிகிறது. குடும்பம், சமூகம், அரசு என்ற இந்த மூன்று வலுவான சட்டங்களும் உலகின் எந்தவொரு பெண்ணையும் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்தச் சிறைக்குள் நின்றுகொண்டே தான், தாம் வாழும் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சூழலுக்கூடாக மத, சாதிய, வர்க்க, பால் ஒடுக்கு முறைகளின் தீவிரத் தன்மையோ, மிதவாதத் தன்மையோ பெண் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானிய, பங்களாதேசிய முஸ்லிம் பெண்ணொருத்தி மதரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படும் தாக்கமளவுக்கு இலங்கை இந்திய முஸ்லிம் பெண்கள் உட்படுவதில்லை. உயர்சாதிப் பெண்ணளவுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண், பால் ஒடுக்குமுறைக்கு உட்படுவதில்லை.
இலகுவான எடுத்துக்காட்டு ஒன்றின் மூலம் பத்திரிகை விளம்பர பாணியில் இந்த முக்கோண கூண்டொன்றிற்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்ணை அடையாளப்படுத்திப் பார்க்கலாம்.

வன்னிப் பிரதேசத்தில் ஒட்டங்;குளம் என்னும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான 30 வயது இந்துக் கூலிப்பெண்.
'இந்தப்பெண் மதுபோதையில் வந்து அடித்து நொருக்கும் கணவனைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு ஒரு வயிற்றுக் கஞ்சிக்காக நாள் முழுதும் மாவிடித்தோ, தோட்டவேலை செய்தோ உழைக்க வேண்டியிருக்கிறது. தனது சாதிக்குள்ளேயே 'திடீர்' பணக்காரராகித் தம்மை ஒதுக்கும் தமது உறவினரின் புறக்கணிப்பைத் தாங்க வேண்டியிருக்கிறது. உயர்சாதியின் எடுபிடியாகித் தமது உழைப்பை உறுஞ்சும்; தன் சாதிச் சண்டியரையும், குறைந்த கூலியில் தமது உழைப்பை சுரண்டும் அதேசமயம் பாலியல் ரீதியாக சுரண்டும் தமது முதலாளியையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பாடசாலையில் ஓரங்கட்டப்பட்டு முறிந்த மனதுடன் வரும் பிள்ளைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் தமிழ்ச்சமூகம் முன்னெடுத்துவரும் போராட்ட வாழ்வியலால் மோசமடைந்திருக்கும் வறுமை, பசி, பட்டினி, இடம்பெயர்வு, பொருளாதாரத் தடை என்பவற்றுடன் இராணுவ ஆக்கிரமிப்பு அபாயம் வருமிடத்து பாலியல் ரீதியாகவும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'.

பெண்ணிய ஆளுமைப் பண்பு

இத்தனை ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்ட போதும் கூட இந்தப்பெண் படித்த உயர்சாதிப் பெண்ணொருத்தியைவிடக் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிக்கின்றாள் என்பது தான். உயர்வர்க்கப் பெண்ணுக்கு இருப்பது போன்று கற்புடைமைக் கோட்பாடு, விதவைநிலை, சீதனப் பிரச்சினை போன்ற அம்சங்களின் பாதிப்பு இங்கு மிகக்குறைவு. தனித்;தியங்கும் ஆற்றல், முடிவெடுக்கும் ஆற்றல் இருப்பதைக்கொண்டு திருப்தியடையும் ஆற்றல், பாரிய பிரச்சனைகளையும் தாங்கி நிற்கும் ஆற்றல் இவளிடம் மிகவும் அதிகம். உழைப்பு, சுறுசுறுப்பு, நீண்ட ஆயுள் இவர்களின் சிறப்பம்சங்கள்.

'அந்த பெண்மணிக்கு வயது 65 இற்கு மேல் இருக்கும். ஆறும் ஆண்பிள்ளைகள். பிள்ளைகளிடம் கடமைப்படக்கூடாது என்ற சிந்தனையும் உடலில் சக்தியிருக்கும் வரை தனது உழைப்பில் தான் வாழவேண்டும் என்ற மனவுரமும் இணைந்து இந்தவயதிலும் மாவிடித்தல், வீடு மெழுகுதல் என்று தினமும் தேனீயின் சுறுசுறுப்புடன் ஓடித்திரிபவர். வேலை கிடைக்காத போது ஒரு சுருட்டும், ஒரு கோப்பை தேனீரும் உடலை ஆற்றும். கையில் கொஞ்சம் பணம் புரண்டால் பேரப்பிள்ளைகளுக்கு அது உடனே போய்விடும். எழுதப் படிக்கவோ, இன்றைய உழைப்பை சேமித்து வேலையில்லாதபோது பயன்படுத்தும் அறிவோ, ஆண் பிள்ளைகளைப் பெற்றபடியால்  உரிமையோடு சாப்பிடலாம்தானே என்ற எண்ணமோ அறவே கிடையாது. உயர் வர்க்;கப் பெண்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

நடத்தைசார் வன்முறையின் தாக்கத்தை குடும்ப வன்முறையூடாக மிகவும் மோசமாக அனுபவிப்பவர்கள் இவர்கள். அதேசமயம் பசி, பட்டினி, அறியாமை போன்ற அமைப்பியல் வன்முறையின் நேரடி இலக்கும் இவர்களே. ஆனால் அரச வன்முறை வடிவங்களில் ஒன்றான இடப்பெயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதித்த அளவுக்கு இவர்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இத்தனை கால ஒடுக்குமுறைகளையும் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளுமளவிற்கு அறியாமைக்குள் முடக்கப்பட்ட நடுத்தர வர்க்கப்பெண்கள் ஒடுக்குமுறையின் அழுத்தங்களில் தப்பிப் பிழைக்க முடியாமையின் வெளிப்பாடாக மரபுகளை மீறும் கட்டங்களில் அல்லது விழித்தெழும் கட்டங்களில் சாதி, பணம், படிப்பு, அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் துச்சமாக மதித்து கீழே தாம் தள்ளிய இந்த தாழ்த்தப்பட்ட  சமூகத்தினர் தம்மைவிடவும் சுதந்திர உணர்வுடன் வாழ்கின்றார்கள் என்பதையும், தனிச் சொத்துடைமை குறைந்த அல்லது அறவே இல்லாத இம்மக்கள்தான் ஆதிகால தாயுரிமைச் சமூக அமைப்பின் எச்சங்களை சுமந்து நிற்பவர்கள் என்பதையும் வியப்புடனே பார்க்க வேண்டியிருக்கிறது. இளவயதுத் திருமணங்கள், கட்டுப்பாடுகள் குறைந்த குடும்ப உறவுகள், குடும்பத் திட்டமிடலின்மை, ஆரோக்கியக்கேடு, சுகாதாரச் சீர்கேடு, அறியாமை போன்றவை பிரதான பண்புகளாக இருக்கும் இத்தகைய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகங்களில் படிப்பால், பணத்தால் முன்னுக்கு வருபவர்கள் தமது சமூகத்திலிருந்து மெல்ல விலகி உயர்மட்ட குடும்பங்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற கசப்பான யதார்த்தத்தை இங்கு உள்வாங்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி அப்படி வாழ்பவர்கள் மூலம் வெளிவரும் இலக்கியங்கள்கூட மீண்டும் ஆணாதிக்கச் சக்கரத்துள் நுழைந்து விடுகின்றன.

சாதியமைப்புடன் போராடி வாழும் பண்பு

இலங்கைத் தமிழ்ச் சமுகத்தின் நடுத்தரவர்க்கத்தினரில் பெரும்பாலானோர் நிலப்பிரபுத்துவ சிந்தனையும் முதலாளித்துவ வாழ்;நிலையும் கொண்டவர்கள். இதைச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டுமூலம் பார்க்க முடியும்.

'அந்த இளம் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இருவருமே தொழில் பார்ப்பவர்கள். இடப்பெயர்வு தமது அந்தஸ்தின் வெளிப்பாடுகளை கணிசமாய் காட்டுவதற்கு தடங்கலாகிவிட்டதே என்ற மனப்புழுக்கம் கணிசமாக இருந்தாலுங்கூட முடிந்தவரை தமது வசதிகளை வெளிக்காட்ட முனைப்புடன் நிற்பவர்கள். இடப்பெயர்விற்கு முன்னரான தமது ஊரின் வாழ்நிலையில் தமது வீட்டில் தொழில் செய்பவர்கள் தமது தகப்பனாரைக் கண்டதும் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொள்வர் என்று அடிக்கடி பெருமைப்படும் வர்க்கத்தினர் இவர்கள். குழந்தைகள்; பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. பின்புதான் எல்லாமே தொடங்கியது. இருவருமே வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைக்கு ஆள் தேவை. ஆரம்பத்தில் இருப்பதில் உயர்சாதியினரைத் தேடி அலைந்து களைத்துப்போய் இப்போது வேலைசெய்ய ஆள் கிடைத்தால் போதும் என்ற நிலை. போடும் உடுப்பு, சாப்பிடும் சாப்பாடு, இருப்பிடம் எல்லாம் வேலையாள் கைபட்டுத்தான் நகரும். வீட்டுப் பாவனைக்கு கிணற்றில் தண்ணீர் அள்ள வேலையாளுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவர் அதில் குளிப்பதற்கு அனுமதியில்லை. சமைப்பது, கறி ருசி பார்ப்பது, குழந்தைக்கு கையால் நன்கு பிசைந்து சோறு ஊட்டுவது அனைத்தும் அவர் பணி. ஆனால் சாப்பிடும் பாத்திரமும், குடிக்கும் பாத்திரமும் அவருக்கு புறம்பு.

உயர் நடுத்தர வர்க்கம் எனச் சொல்லிக்கொள்பவரின் வீட்டுக்கு வெளியே கூட்டுவதும், ஆடு, மாடு, கோழி பராமரிப்பதுவுமே ஒதுக்கப்பட்ட இந்த மக்களுக்கு இடப்பெயர்வின் பின்னரான வாழ்நிலை இவர்களின் வீட்டுக்குள்ளேயே எந்நேரமும் தங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதில் ஒரு முரண்நகை எதுவெனில் சாதித்தடிப்புமிக்க குடும்பத் தலைவனின் பெற்றோர் இருவரும் ஊரிலிருந்து வன்னிக்கு வந்த சமயம் வேலையாளின் கைவண்ணத்தில் உருவான சமையலை மௌனமாய் ஒரு கை பார்த்துவிட்டு எழும்பிப்போக வேண்டியிருந்தமை தான். அதேசமயம் வேலை செய்பவரின் உறவினர்கள் யாராவது இவரைச் சந்திக்க வந்தால் தீண்டாமையின் சகல பண்புகளுடனும் தான் அவர்கள் இன்றும் உபசரிக்கப்படுகின்றனர்.

இந்தச் சமூகப்பெண்களிடம் காணப்படும் மிகப்பெரும் பலவீனம் வாழ்வின் அரைப்பகுதி நல்ல மனைவியாக இருப்பதற்கான தயார்படுத்தல்களிலும் மீதிப்பகுதி தனது பெண் குழந்தைகளை தயார்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதுமேயாகும். இவர்களைப் பொறுத்து வாழ்க்கையே திருமணம். திருமணம் வாழ்வின் ஒரு அங்கம் மட்டும் அல்ல. பள்ளிப்படிப்புப் பெண்ணிலிருந்து பட்டதாரிப் பெண்வரை இதுதான்.

புதுப்புதுப் பாணிகளில் மாறிக்கொண்டிருக்கும் ஆடை அலங்காரங்களின் நவீன மாதிரிகளாய் நடமாடுவதற்கும், வீதி முழுவதையும் நிறைத்துக்கொண்டு சைக்கிள் சவாரி செய்வதற்கும், விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் தனியார் கல்விக் கூடங்களில் கற்கவும், விரும்பிய பாடநெறியை தெரிவு செய்வதற்கும் முழுச்சுதந்திரம் உடையவர்கள் இவர்கள். இத்தனை வாய்ப்புகளும் கிடைத்த போதிலும் இவர்களில் கணிசமானோர் பரீட்சையில் சித்தியடைவதற்கான நேர்த்தி, தொழில் வாய்ப்பு பெறுவதற்கான நேர்த்தி என்று கோவிலில் தவம் கிடப்பவர்கள். உடற்சுத்தி, இதய சுத்தி, சொல் சுத்தி மூன்றும் இறைவனைத் தொழ மிக அடிப்படையானவை என்ற மதநியமங்களை மறந்து கோவில் சுற்றாடலை களியாட்ட விழாவாக மாற்றும் வகையிலான ஆடை அலங்கார வகைகளுடன் நடமாடுபவர்களும் இவர்கள் தான். ஓப்பீட்டு ரீதியில் கணிசமானளவு ஆண்களைவிடப் பெண்களே அதிகம் படித்தவர்களாகவும் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

முடிவுரை

பெண்ணினத்தின் மிகமிகச் சிறுபகுதியினரே பெண்ணொடுக்குமுறை வடிவங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் அதேசமயம் பெரும்பகுதி பெண்ணினமோ இதுபற்றிய எந்தவொரு அறிவோ, உணர்வோ இன்றி ஒடுக்குமுறைகளுக்குப் பழக்கப்பட்டு வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. குவாட்டமாலாவைச் சேர்ந்த ஆ.டுரபயசனந என்பவரின் பின்வரும் கருத்து லத்தீன் அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமன்றி எமது பெண்களுக்கும் பொருந்தும்.

'எமது சொந்த வரலாறு தொடர்பாகவோ எமது அடையாளம் தொடர்பாகவோ பெண்களாகிய எமக்கு அதிகம் தெரியாது. எம்மைப்பற்றி எமக்கே தெரியாது. எம்மைப்பற்றி அறியும் வழிவகைகளும் எமக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. யதார்த்த நிலையுடன் நாம் மோதும் கட்டங்களிளெல்லாம் பெண்கள் பற்றிய புராணக் கதைகளை நம்ப நாம் தலைப்படுகின்றோம். எம்மை நாம் தெளிவாகப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுகின்றோம். அடுத்தவர்களைப் பார்ப்பதிலேயே எமது முழுநேரத்தையும் நாம் செலவிடுகின்றோம். அடுத்தவர் நிழலிலேயே நாம் தொடர்ந்தும் வாழ்கின்றோம். அடுத்தவர் எம்மைப் பார்க்கும் முறையே எமது வாழ்வுக்குப் போதுமானது என எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.'

எமது மண்ணில் பெண்விடுதலை பற்றி சிந்திக்கும் பெண்ணோ, பெண்விடுதலையே தெரியாத பெண்ணோ எல்லோர் மனதின் மூலையிலும் இந்த உணர்வே நிறைந்திருக்கிறது என்பதை எம்மால் மறுக்க முடியாது.






















கருப்பை உறவு



அறிமுகம்

மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில்தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும்போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது. ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு மனிதனை உருவாக்குவதற்கான அடித்தளம் இந்த கருப்பை வாழ்விலேயே போடப்படுவதை ஆய்வுகள் வெளிக்கொணர தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான கருப்பை உறவுநிலை பற்றிய தீவிர அக்கறை எடுக்கவேண்டியது அவசியமாகும். இந்த வகையில் கருப்பை உறவு தொடர்பான கருத்தியல் அம்சங்கள் தொடர்பாகவும், இந்த உறவு நிலையைப் பாதிக்கும் சூழல் காரணிகள் தொடர்பாகவும் ஒரு பொதுப் பார்வையை இக்கட்டுரை தர முயல்கிறது.


பரம்பரையா சூழலா ? 

குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப்பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை பிறப்புக் காரணிகளின் அடிப்படையில் அதாவது தகப்பனை அல்லது தாயை அல்லது இருவரின் அம்சங்களையும் கொண்டுதான் பிறக்கின்றது என ஒரு சாராரும் சூழல் காரணிகள்தான் குழந்தை வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது என இன்னொரு சாராருமாக இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனாலும் கூட அண்மைக்கால ஆய்வு முடிவுகளின் படி சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலை தகர்ந்து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலை ஆய்வாளர்களிடையே ஏற்பட்டுவிட்டது. ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) இது தொடர்பாகக் கூறுகையில் 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமைமிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக்கொண்டுவரும் கருவின் போக்கிலேயே திசை திருப்பிவிடும்' எனக் கூறுகின்றார். எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும்.

குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில்தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் எற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.


பாதிப்புகள்: ஊருக்கொருவிதம்   

வறுமையை அடிப்படைப் பண்பாகக்கொண்ட சமூகங்களில் போசாக்கின்மையால் ஏற்படும் நோய்கள் கருப்பை உறவுநிலையை பாதிக்கிறது. செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட, உடலுழைப்புக் குறைந்த பெண்ணுக்கு சலரோகம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. 'தீவிர பெண்ணிய' சிந்தனைகளுக்கு உட்பட்டு மதுப்பழக்கம், புகைபிடித்தல், போதைப் பொருள் பாவனை போன்றவற்றை பின்பற்றும் பெண்ணின் கருப்பையானது மூளை, எலும்பு வளர்ச்சியற்ற குழந்தையையே உற்பத்தி செய்யும் அபாயம் உண்டு.

ஈழத்தமிழ்ப் பெண்களைப்போன்று இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் என்பன பாரிய உடல் உளத் தாக்கத்தை ஏற்படுத்தும்.


கருப்பை உறவு நிலை: அன்றும் இன்றும் 

இன்றைய தந்தைவழிச் சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழிச் சமூக அமைப்பிலும் சரி தாய்மைநிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மைநிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆனால் கலாச்சார வரம்பை மீறிய தாய்மை நிலையை இழிவுபடுத்தும் கருத்துப் போக்குகள் தந்தைவழி சமூக அமைப்பின் கருத்தியல் அச்சுக்களில் கச்சிதமாக பொருந்திவரும் பெண்ணின் தாய்மைநிலையே கொண்டாடப்படுகிறது என்ற யதார்த்தத்தை கோடி காட்டி நிற்பதனால் கருப்பை உறவுநிலை  தொடர்பான ஆரம்ப கருத்தியல் பற்றிய தெளிவான புரிந்து கொள்ளல் ஒன்று அனைவருக்கும் அவசியமானதாகும்.

காலங்காலமாக மனித சமூகத்தினால் பின்பற்றப்பட்டு வந்த சமூக அமைப்புகள் (நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்றன) வழி உச்சம் பெற்றுள்ள சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகள், இந்த சமூக அமைப்புகளுக்கு எதிர்ப்பியக்கங்கள், சமூக விஞ்ஞான ஆய்வுகளின் வழி தோற்றம் பெற்ற பெண்ணிலைச் சிந்தனைகள் என்ற ஒரு சிக்கல் வாய்ந்த தற்கால சமூக அமைப்பு ஒன்றுக்குள் நுழையமுதல் இருந்த சமூக அமைப்பில் காணி, வீடு போன்று பெண்ணும் முழுக்க முழுக்க ஆணின் சொத்தாகவே கருதப்பட்டாள். இந்தச் சொத்தின் உடலுக்கோ, உணர்வுக்கோ பங்கம் ஏற்படாத வகையில் மிகவும் நுணுக்கமாகவும் திட்டமிட்ட வகையிலும் ஆண் உருவாக்கிய கருத்தியல்கள் பெண்ணே 'தன்னை ஒரு சொத்தாக' கருதுமளவிற்கு வளர்த்துவிட்டது. ஆணின் வாரிசை சுமக்கின்றோம் என்ற பொறுப்புணர்ச்சியில் பெண்ணும், தனது வாரிசை சுமக்கின்றாள்;: என்ற அதிக அக்கறையில் ஆணும் இருந்த நிலையில் கருப்பை உறவுநிலையில் சிக்கல் எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. பெண்ணின் உடல், உள ஆரோக்கியமானது மத, கலாச்சார, பண்பாட்டு தளைகளால் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. குழந்தை உருவாக்கத்துக்கு வேண்டிய மூலப்பொருள்களில் ஒன்றை வழங்குவதுடன் ஆணின் பணிமுடிவடைந்து விடுகிறது. மிகுதி முழுக்க தன் பொறுப்பில் தான் என்ற அறிவோ, அதற்கான சூழலோ அன்றைய பெண்ணுக்கு இருக்கவில்லை.

ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. சொத்து என்ற தெளிவான நிலை உருக்குலைந்து இன்றைய பெண்ணின் விம்பம் சரியான வகையில் அடையாளப்படுத்த முடியாத வகையில் தெளிவற்று நிற்கிறது. தான் யார்? என்று தன்னைத்தானே கேள்விகேட்டு தனது இருப்பை உறுதிப்படுத்த தடையானவற்றுக்கெதிராக சாம, பேத, தான, தண்ட நிலைகள் அனைத்தையுமே பிரயோகிக்கும் சமூகப் பிரஜையாக பெண்ணை மாற்றிக் கொண்டிருக்கின்றது. தீவிரமாகிக் கொண்டுவரும் பெண்ணிலைச் சிந்தனைகள், ஒருபுறம் ஏற்கனவே சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் கருத்தியல்களுக்கும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளுக்கு மிடையிலான மோதல், மற்றொருபுறம் பக்கத்து வீட்டுச் செல்வச் செழிப்பைப் பார்த்தோ அல்லது தொலைக்காட்;சிப்பெட்டி வழி உலகைப் பார்த்தோ அதன்படி தானும் வாழவிரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற உச்சமடைந்து கொண்டு செல்லும் சமூக, பொருளாதார, கலாச்சார ஏற்றத் தாழ்வுகள், இன்னொரு புறமோ உயிர், உடல், உடைமை இழப்புகள,; அகதிவாழ்வு, பொருளாதார கஷ்டங்கள் என்பவற்றின் மூலம் மனிதனின் இருப்பையே கேள்விக்குரியதாக மாற்றியிருக்கின்றன. மண் ஆக்கிரமிப்பும், இன ஒடு;க்குமுறையும் சார்ந்த யுத்தங்கள், இத்தகைய சூழல் பாதிப்பு பெண்ணின் மன உலகத்தை உலைக்களமாக மாற்றியிருக்கிறது. சில மரபை மீறும் வலுவற்று எரிமலை போல் உள்ளுக்குள்ளேயே குமுற சில காட்டாற்று வெள்ளம் போல் தன்னிச்சையாக ஓடிக்கொண்டிருக்க இன்னும் சில இவ்விரண்டுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற தொரு நிலையில் கருப்பை உறவுநிலை சிக்கல் வாய்ந்ததாக மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை.


உற்பத்திக் கருவியா  உற்பத்திச் சக்தியா ?      

உற்பத்திக்கருவி என்பது எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் கருவியாகும். (உ-ம் மாவரைக்கும் இயந்திரம்) உற்பத்திக் கருவியும் அதை இயக்குவதற்கான அறிவும் அனுபவமுமுடைய மனிதனும் இணைந்து உற்பத்திச் சக்தியாக மாறுகிறது. இதனடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின் கருப்பை என்பது இயந்திரம் போன்று வெறுமனே ஆணின் கருவை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு கருவியல்ல. தந்தையின் உயிரணுவானது (விந்து) தாயின் உயிரணுச் சுவருக்குள் (முட்டை) அதை கரு வளமுடையதாக மாற்றுவதுடன் ஆணின் பணி முடிவடைந்து விடுகின்றது. கரு உருவான காலம் முதற்கொண்டு 10 மாதங்கள் வரையும் தாயின் கருப்பையே புதிய உயிரொன்றின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்கின்றது.

புதிய உயிரொன்றின் உருவாக்கத்திற்கு வேண்டிய இரு அடிப்படை மூலக்கூறுகளும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தை சமைக்கும் மேலதிகப் பொறுப்பு தாயிற்கே முழுக்க முழுக்க உரியது. எனவே இங்கு ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் உற்பத்திக் கருவிதான் பெண் என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் ஒரு உற்பத்திச் சக்தியாக பெண் இருக்கவேண்டிய யதார்த்தத்தை கருப்பை உறவு தொடர்பான அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துக்கொண்டே வருகின்றன. ஆனாலுங்கூட பெண்ணை உடைமையாக்கி, அவளின் உணர்வையும், அறிவையும் ஒடுக்கி, தேவையான எரிபொருள் நிரப்பி, அடிக்கடி பழுதுபார்த்து, எண்ணையிட்டு பராமரித்து தனக்கு வேண்டிய வாரிசை நூற்றாண்டு நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மனித மூளையை மெச்சத்தான் வேண்டும்.

கருத்தியலில் இன்னோர் புரட்சி தேவை 

'நாம் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல' காதில் அடிக்கடி விழும் இந்த பெண்ணியக் கோஷம் கருப்பை ஒரு உற்பத்திக் கருவி என்ற ஆணாதிக்க கருத்தியலில் விழும் ஓர் அடியாகவே பார்க்க வேண்டும். எனினும் கருப்பை தொடர்பான மாற்றுக் கருத்தியல் ஒன்றை பெண்கள் சமூகம் தெளிவாக முன்வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. கருப்பை வெறும் உற்பத்திக்கருவி அல்ல என்ற விழிப்புணர்வு ஆக்கபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும் அதேசமயம் கருப்பை என்பது ஆற்றல் மிக்க உற்பத்திச் சக்தி என்ற கருத்தியல் சரியான முறையில் வேரூன்றவில்லையோ என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது.

வெளியே ஆணாதிக்க போக்குக்கு எதிரான பெண்ணிய சிந்தனைகள் தனிமனித திருப்தியை நோக்கி செல்கின்றதேயன்றி சமூகப் பொறுப்புணர்வு என்ற அம்சத்தை முற்றாக மறந்துவிட்டனவோ என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது. 'கருப்பை ஒரு சுமை', 'கருப்பபையை கழற்றி வீசுங்கள்' என்ற கோஷங்கள், பாலியல் சுதந்திரம் தேவை என்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஒரு புறமும், தானே விரும்பி உடலுறவு கொண்டு குழந்தையை பெற்றுவிட்டு 'என்னை ஏமாற்றிவிட்டார்' என்ற முறைப்பாட்டுடன் நிற்கும் பெண்கள் இன்னொரு புறமுமாக இந்த சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஆற்றலும் ஆளுமையும்மிக்க ஒரு சமூக பிரஜையை உற்பத்தி செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க தன்னில்தான் தங்கியிருக்கின்றது என்ற அறிவும் உணர்வும் இன்றைய பெண்ணுக்கு நிறையவே இருக்கிறது. இருக்கவும் வேண்டும். தனது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்க தன்னைத் தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப்பொறுப்பையும் பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இயற்கை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்ற யதாhர்த்தத்தை ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ பெண்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இது ஆணைவிட பெண்ணுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. சமூகத்தின் வாரிசை உருவாக்கும் தயார் நிலையில் உடல், உள, உணர்வு, ஒழுக்கநிலைகளில் கூடுதல் கவனம் வேண்டியுள்ளது. தனது வாரிசை சுமக்கின்றமையால் பெண் ஒழுக்கமுள்ளவளாக இருக்கவேண்டுமென்ற ஆணாதிக்க சிந்தனை வழிப்பட்டதல்ல இக்கருத்து நிலை. மாறாக இயற்கை இயல்பாகவே பெண்ணுக்கு வழங்கியிருக்கும் மேன்மை நிலையை உய்த்துணர்ந்து அதற்கமைய சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டிய தார்மீகக் கடமைக்குத் தயாராக வேண்டும் என்ற பெண்ணிலை நோக்கின் வழிப்பட்டதே இது.

ஆனால் இந்த அறிவு நிலைக்குப் பதில் தனிமனித திருப்தியை நோக்கி பெண் நடை பயில்வதானது பெண்ணிலைச் சிந்தனைகளில் மீள்பார்வை ஒன்று தேவை என்பதையே உணர்த்தி நிற்கிறது. ஒரு வேளை தன்மீதான தளைகளை அகற்றுவதில் இன்றைய பெண்ணுக்கு இருக்கும் தீவிர முனைப்புத்தான் கருப்பை ஒரு சுமை என்ற தனிமனித திருப்தியில் இருந்து விலகி கருப்பை ஒரு ஆற்றல் மிக்க சக்தி என்ற அபிவிருத்தி நோக்கிய அவளின் சிந்தனைக் கதவை திறக்கும் வாய்ப்பை தள்ளிப்போடுகின்றதோ?



















விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள்


அறிமுகம்;

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள். தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன்மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக்கொள்ளப் போராடுதல்;: மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். பெண் தனக்குத்தானே விரும்பி அணிபவை, பெண்ணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அணிவித்துவிடுபவை என ஆணாதிக்க சமூக அமைப்பால் பெண்ணைச் சுற்றியிருக்கும் விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுபடவேண்டிய அவசியம் பெண்ணுக்கு உண்டு. இவ்விலங்குகளில் பல அறிவின் துணைகொண்டு பலமாக அகற்றப்படக் கூடியவை. சில அதிகப் பிரயத்தனத்துடன் அகற்றப்பட வேண்டியவை. இன்னும் சில கூட்டு முயற்சிகளினூடாக மட்டுமே அகற்றப்படக் கூடியவை. வேறும் சிலவோ அடித்து நொருக்கித்தான் அகற்றப்படக் கூடியவை. இதில் பெண்ணின் ஆளுமையை மிக மோசமாகச் சிதைக்கக்கூடிய வல்லமையுள்ள அதேசமயம் அறிவின் துணைகொண்டு மிகச்சுலபமாக அகற்றக்கூடிய ஒரு விலங்கு தொடர்பான ஒரு பொதுப்பார்வையை தர்க்கரீதியாக ஆராயும் முயற்சியே இக்கட்டுரையாகும்.    

சாமத்தியச் சடங்கு

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல்மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெருசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சு வழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப்பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத்தில் பெண் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்குத் தயாராகி விட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.


பழையன கழிதலும் புதியன புகுதலும் 

துஷ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக் கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்கு உரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர்முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பனவும் காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

பருவமடைந்த நாளிலிருந்து வீடுதவிர வேறு இடங்களிற்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன்கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இருநூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகிவிட்டன.

'அனைவரிற்கும் கல்வி' என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்;தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்ள உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்பு சாதனங்களும் உலக வாழ்நிலையை அறிந்து கொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கி வைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப்பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.

ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தமிழ்; மண்ணில்; நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்;ப முயன்றதை விடவும் காரண காரியத் தொடர்பற்ற, மனம்போனபோக்கின்படி செய்யப்படுகின்ற, மூட நம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தாலுங்கூட மாற்றமடையாது பேய் பூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில்நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்தக் கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களின் மூலத்தை அறிவுத்தேடலின் வழி கண்டறியும் வாய்ப்பு அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.


புதுப்புது நுட்பங்கள்   

ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால் அறுகு வைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப்பெண்கள் தவிர்க்கப்பட்டு வயதுவந்த பெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடு;த்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல், பூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம் பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதன் காரணமாக மனமகிழ்வுக்கு உரிய இந்த நிகழ்வு ஏழைப்பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவது தான்.

தொட்டிக்குள் நீர் நிரப்பிப் பூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்; பிடிக்கும் நிகழ்வு கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பமாகும். இடப்பெயர்வால் ஏற்பட்ட வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை  தொட்டி வாய்ப்புகள் மிகவும் குறைந்த வன்னி மண் தோற்றுவிக்க, நிலத்தில் கிடங்கு வெட்டி மண் கரையாமல் அதன் மேல் தரப்பாள் (வுநுNவு) போட்டு அதற்குள் நீர் நிறைத்துப் பூக்கள் நிரப்பி நீராட்டு விழா நடத்துவது புதியதோர் பாணியாக மாறியிருக்கிறது.

பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச்சடங்குகளை முடித்த பின்னர் கோயில் கும்பிடுவதற்கு பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.

'வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கின்றோம்' என்று செய்யும் செயல் எல்லாவற்றுக்கும் ஒரு சப்;பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகி விட்டது.

ஒன்றையொன்று வெல்லும் கேலித்தனங்கள்

'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்தி பொல்லுடன் கிளம்பி விடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறை சாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?

வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கைகால் பட்டு விட்டால், முறைத்துப் பார்த்துச், சிலசமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?

மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து இன்று அவற்றை முற்றாக ஒழிக்கும் வல்லமையை பெற்ற எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லாதொழித்து இரண்டு கிழமைக்கு முன்னதாகவே பாடசாலை, ரியூசன் என்று பறந்தோடும் வல்லமை பெற்ற எமக்கு, 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர் கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்தி;க்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்....?

வேப்பிலை சுற்றுவதையும், இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூகவிழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்புங்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?

தலைமுறை இடைவெளி

மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்தாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்பு சாதனப் பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒருசில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனிதநடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை – குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய ரீதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப் போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ்வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு தலைமுறை இடைவெளி அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர் ஆகிவிடுவர். குறிப்பாக பெண்பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப் பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண்குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.


இரண்டும் கெட்டான் பருவம்

நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின்தள்ளிப்போட, சிறியவராகவும் இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம்பருவம் (யுனுழுடுநுளுநுNஊநு) என 1904 இல் பு.ளுவுயுNடுநுலு ர்யுடுடு என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாகக் கருதப்படுகிறது.

மனித வாழ்வின் ஏனைய பருவங்களை விடவும் அதிகம் கவனத்தில்கொள்ளவேண்டிய ஒரு பருவமாக, வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம்பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித்துருவி ஆயிரம் கேள்விகள்கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படு;த்தும் குழந்தைப் பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திற்கும் தொடர்பு என்ன? என்று தன்னைத்தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பக வளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப்போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.

மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச்சடங்கு ஆக்கபூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.
எங்கே நிற்கின்றோம்...?

வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்ய வேண்டிய தேவையும், இப்பொருளை எவ்வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது அறிவூட்டல் வாய்ப்புக்கள் எதுவுமற்று சமையலறைக்கள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக் கூடும்.

ஆனால் இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச்சென்ற எம்முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச்சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகி விட்டது. எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூலமோ பார்க்கிறோம், கேட்கிறோம், தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க ரீதியாக காரண காரியத் தொடர்பைக் கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்துக்கு ஆளாவதைப் பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப்பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா?

காட்டுமிராண்டிக் காலகட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகரீக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக் கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித சமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்குநிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுவதுடன் பொது நலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத் தாவிய காலம் முதற்கொண்டே மனப் பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கி விட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப் பார்;க்க முடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண்படுத்தும் முயற்சியைக் 'கண்;டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.

புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன் வருமா?













தலையை நிமிர்த்தாமலே தலைவிதியை நோகலாமோ?



நாம்...

மனிதன் - தனித்து வாழ முடியாத ஒரு சமூகப்பிராணி. தான் வாழும் சூழல்களுக்கு ஏற்பத் தன்னை சரிசெய்து கொள்ளாத எதுவுமே இவ்வுலகில் நிலைத்து நிற்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து அதற்கமைய தன்னை, தனது குடும்பத்தை, அயலவனை, நண்பனை, இச்சமூகத்தை, ஏன் இவ்வுலகத்தையே சரிவரப் புரிந்து அதனுடன் இணைந்து வாழ வேண்டியவன். தனக்கெனச் சிறப்பாக அமைந்த பகுத்தறிவின் துணைகொண்டு இயற்கையையே போட்டிக்கழைத்து அளப்பரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருப்பவன். அன்பு, நட்பு, காதல், பாசம், மரியாதை, பக்தி என்ற உயரிய பண்புகளைத் தன்னகத்தே கொண்டமைந்தவன். அதேநேரம் அச்சம், கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற கீழ்த்தர உணர்ச்சிகளுக்கும் சுலபமாக ஆட்படுபவன். சிறுமுகமலர்ச்சியில், கண்களின் பாவத்தில், இலேசான தலையசைப்பில் கூட தனது மன உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். தனக்கென்றே ஒரு தனித்துவத்தை, குணவியல்புகளை, விருப்பு வெறுப்புக்களைக் கொண்டமைந்தவன்.


எமது பாதை...  

வாழ்க்கைப்பாதை மேடு பள்ளம் நிறைந்தது. கற்களும், முட்களும் நிரம்பியது. இவ்வுலகில் நிலைத்து வாழ்வதற்கு இப்பாதையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுடன் இயைந்து, அறிஞர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், கள்ளர், பொய்யர், கொலைஞர். கோழைகள் என்ற பலதரப்பட்ட மனித ஜீவன்களைக் கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல வேண்டும். நேரிய வழியில் நீதி, அன்பு, ஒழுக்கம் போன்றவற்றைப் பின்பற்றி தனது வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் குறிக்கோளை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை, திறமை, நிதானம் என்;ற மூன்று பண்புகளும் தான். வாழ்க்கைப் பாதையின் அனைத்துச் சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய மனோபலத்தைப் பெறுவதற்கு எமக்கு உதவும் இந்தப் பண்புகள் மனித ஆளுமையை விருத்தி செய்வதன் மூலமே பெறப்பட முடியும்.

ஆளுமை என்பது...

நல்ல தோற்ற அமைவு, உளப்பக்குவம், உயரிய நடத்தை என்ற பண்புகளின் தொகுப்புத்தான் ஆளுமை எனப்படுவது. எம்மைச் சூழ இருப்பவர்களை எமது தோற்றத்தினால் எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல். இது தான் மனித ஆளுமை. மனித ஆளுமையின் அதி முக்கிய அம்சமாக கருதப்படும் எமது தோற்ற அமைவு எம்முன்னே இருப்பவரை எம்மை நோக்கி ஈர்ப்பதற்கோ, எமது கருத்துக்கள் மூலம் அவர்களில் தாக்கம் விளைவிப்பதற்கோ எமக்கு அனுசரணையாகவுள்ளது. ஆளுமையுடன்கூடிய எமது தோற்றம்தான் நிமிர்ந்த நடை, நேரியபார்வை, அமைதியும் எளிமையும் இணைந்த தோற்றம், ஆழமான பேச்சு, இவைதான் ஆளுமையின் வெளிப்பாடுகள். ஆளுமை என்பது அழகிய தோற்றம் என்ற ஒரு தவறான சிந்தனை எம்மவரிடையே, குறிப்பாக பெண்களிடையே காணப்படுகிறது.

அழகு என்பது...

அழகு வேறு ஆளுமை வேறு. அங்கங்கள் அதற்குரிய லட்சணங்களுடன் அமைந்திருத்தல் அழகு என கூறப்படுகிறது. பிறைநுதல், கயல்விழி, சங்குக் கழுத்து, நேரிய நாசி, நீண்ட கூந்தல் என்று அழகை வர்ணிப்பவர்கள் அழகுக்கு இலக்கணம் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் காண்பவர் கருத்தைக் கவர்வதும் மெய்மறந்து அதில் லயிப்பதும் அழகின் பண்புகள். மனிதனின் பார்வைக்குப்பார்வை அழகு என்ற அம்சம் வேறுபட்டது. ஒருவருக்கு அழகானதாகத் தெரிவது இன்னொருவருக்கு அவலட்சணமாக இருக்கிறது. சிலருக்கு சிவந்த நிறம் அழகாகத் தெரிந்தால், சிலருக்கு கரிய கட்டுடல் அழகாகத் தெரிகிறது. சிலருக்கு சிரிப்பு அழகென்றால் சிலருக்கு சிரிக்கும் கண்கள் அதைவிட அழகு. சிலருக்கு இடை அழகென்றால் சிலருக்கு எடுப்பான நடை அழகு. எல்லா அழகும் ஒருவரிடம் பொருந்தி இருப்பதில்லை. அவ்வாறு பொருத்தி இருப்பவர்களும் உள்ளத்தளவில் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்தால் அங்கு அக அழகு புற அழகை மறைத்து விடுகிறது. அதுபோல் அவலட்சணமான முகங்கூட மென்மையும், அமைதியும், அழகும்மிக்க பேச்சினால் பல அழகிகளையும், அழகர்களையும் சுண்டி இழுத்துவிடுகின்றது. எம்முன் நடமாடும் எதிரும் புதிருமான தோற்றங்கொண்ட எத்தனையோ காதல் தம்பதியர் இதற்கு எடுத்துக்காட்டு. அழகின் ரசனை வெறும் கண்களிலோ அல்லது அவயவங்களிலோ அல்ல. மாறாக அது ஆழமான உறவுகளில் உள்ளத் தூய்மையில் தங்கியுள்ளது. எனவே 'அழகு என்பது இது தான்' என எதையுமே வரையறுத்துக் கூறிவிட முடியாது. 'எது எமக்கு நிறைவையும் சந்தோசத்தையும் தருகின்றதோ அதுதான் அழகு' என்கிறார் ஒரு ஆங்கில கவிஞர். ஆழமான அன்பு அவலட்சணத்தையும் கூட அழகாக்கிவிடும்.

மாறாக ஆளுமை என்பது அங்கங்களின் அமைப்பைவிட அதன் சரியான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டது. ஆறடி உயரம்தான் அழகென்றால் ஐந்தடி உயரத்திலுங்கூட நிமிர்ந்து கம்பீரமாக நிற்கமுனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றவையாக இருப்பினும் தனது மென்மையான அறிவுபூர்வமான பேச்சினால் அடுத்தவரின் கவனத்தைத் தன்மீது திருப்ப முனைவது ஆளுமை. தமது ஆளுமை மூலம் வரலாறு படைத்த எத்தனையோ அவலட்சண முகங்களை வரலாறு எமக்குக் காட்டியிருக்கிறது. அழகைக்காட்டி வியாபாரந்தான் செய்ய முடியுமே தவிர, சாதனை படைக்க முடியாது.

எமது இலக்கு...

மனித சமுதாயத்தின்; இறுதி இலக்கு தான் விரும்பியதைப் பெறுதல், இவ்வுலகிலுள்ள படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். நாம் எப்படி வாழ விரும்புகின்றோமோ, அதன்படியே வாழ்க்கையும் அமையும். நாம் விரும்பியதை அடையும் போது அதன் மூலம் நிறைவும் மகிழ்வும் கிடைக்கிறது. அதையும் நேரியவழியில் அடைய எத்தனித்து, அதனால் அளப்பரிய இடர்களை எதிர்கொண்டு, இடர்களைச் சமாளிக்கும் தன்னம்பிக்கை, துணிவு என்பவற்றைப் பெற்று, அதன்மூலம் எமக்கென ஒரு ஆளுமையை விருத்தி செய்து நாம் விரும்பிய இலக்கை அடையும் போது எமது மகிழ்ச்சி இரட்டிப்பாகின்றது. மனிதவாழ்வின் நிறைவானது மனித ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றதேயன்றி அழகில் அல்ல. ஆனால் அடுத்தவர் கவனத்தைத் தம்மீது திருப்ப அழகை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனிதர்கள் குறிப்பாக பெண்கள் தமது பாதையில் அதிகமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இலக்கின் தடைகள்... 

உடல் அழகுக்கும் ஆளுமைக்கும் இடையிலான வேறுபாட்டை சரிவரப் புரிந்து கொள்ளாது அடுத்தவரின் கவனத்தைத் தம்மீது திருப்ப தமது அழகை ஆயுதமாக பயன்படுத்துபவர் யார்? பெண்கள் சமூகத்தை நோக்கித்தான் இந்த வினா எழுப்பப்படுகின்றது. காலம் காலமாகப் பெண்களை அழகுப் பதுமைகளாக்கி வேடிக்கை பார்த்த ஆண்களின் தனித்துவப் பண்பாகவே இந்த ஆளுமை என்ற அம்சம் நோக்கப்பட்டது. அல்லும் பகலும் ஆண்களை மகிழ்விப்பது எப்படி என்ற கலையைத்தான் முதலாளித்துவப் பெண்களுக்குப் பயிற்றுவித்ததேயன்றி அவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து, தனித்து இயங்க அவர்களை அது அனுமதிக்கவில்லை. பெண்களுங்கூட தமது தனித்துவத்தை, அடையாளத்தை இழந்து, நாம் அடக்கப்படுகின்றோம் என்ற உண்மையைக்கூட அறிய முடியாத அல்லது அறியவிரும்பாதவர்களாக, போகப் பொருளாக மட்டுமே பயன்பட்டார்கள். ஒருவேளை சோற்றுக்குக்கூட அடுத்தவரை நம்பியிருக்குமாறு பெண்களை வளர்த்தமை ஆயிரமாயிரம் அழகுப் பதுமைகளின் முன்பு போட்டி போட்டுக்கொண்டு கணவனின் கருத்தைக் கவர்வதற்குத் தமது அழகை ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவல நிலைக்குப் பெண்களை இட்டுச்சென்றது. அடுத்த பெண்களைக் கணவன் நாடினால் தமது வாழ்விற்கே ஆபத்து என உணர்ந்து அழகினால் அவனை – சிறை பிடிக்கும் எண்ணத்தைப் பெண்களில் வேரூன்றச் செய்தது. அறிவும் ஆளுமையும் நிறைந்த பல அரசகுல மங்கையரையும், பெண் பாவலர்களையும் வரலாறு எமக்குக் கோடிகாட்டி நிற்கின்றதெனினும் அவை அங்கங்கே இலைமறை காயாக இருந்த ஒரு சில நிகழ்வுகள் மட்டும் தான். ஆணைக் கவரும் போட்டியில் தங்கள் அழகை மிகைப்படுத்திக் காட்டும் கலையில் பெண்களின் கவனமும், அலங்காரப் பதுமைகளாக்கும் ஆண்களின் ஆர்வமும் இணைந்து –அலங்காரக்கலையில் பெண்களைத் தேர்ந்த விற்பன்னர்களாக்கிவிட்டது. வாழ்க்கையில் அடுத்தவரின் கவனத்தை அழகால், அலங்காரத்தால், ஆடை அணிகளால் மட்டுமே கவர நினைக்கும் ஓர் இழிவான, விபச்சாரத்திற் கொப்பான மனோநிலையை மிக ஆழமாகப் பெண் மனத்தில் வேரோடுவதற்கு முதலாளித்துவம் வழி செய்துவிட்டது.

ஆனால் இன்றைய காலம் பெண்களுடைய அறிவுக்கண் திறந்து அவர்கள் தமக்கென ஒரு பாதையை வகுத்து வீறுநடை போடுங்காலம். அடுக்களையே வேதம் என்றிருந்தவர்கள் அவனியில் பவனி வரும் காலம். அழகே உலகம் என்றிருந்தவர்கள் அகிலத்தையே மாற்றியமைப்பதில் வரலாறு படைக்கும் காலம். முன்னேற்றப் பாதைக்கு அழகையும், ஆடை அலங்காரங்களையும் ஒருபுறம் வைத்;துவிட்டு ஆளுமையை அடித்தளமாக்கும் காலம். ஆனால் அந்தோ பரிதாபம்! முதலாளித்துவத்தின் எச்ச சொச்சங்கள் இன்னமும் பெண்களை விட்டுப் போகவில்லை. தனது திட்டத்தை மிக ஆழமாகவே பெண்கள் மனத்தில் பரம்பரை பரம்பரையாக அது பதித்துவிட்டது.  ஆளுமையைக் காட்டும் இடங்களில் கூட இந்த அலங்காரங்கள் பெண்களின்; திறமையை, ஆளுமையை குழியில் போட்டு மூடிவிடுகின்றன. ஏன்?

அடுத்தவர் பார்வையில்...  

இன்றும் நீங்கள் அழகுப்பதுமைகள். அறியாமை என்னும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு எங்கே, ஏன் போகின்றோம் என எண்ணிப்பார்க்கக்கூட முனையாமல் ஆண்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள். அறிவுக்கண் திறந்து அறிவுப்பாதையில் நடைபயிலத் தொடங்குபவர் கூட அறியாமையில்; எம்மை உழலவைத்த அழகுக்கவசங்களை இன்னமும் கைவிட விருப்பமின்றி அதனையும் அணிந்து கொண்டே நடைபயில முனைபவர்கள். ஆளுமையை வெளிக்கொணர வேண்டிய முக்கிய இடங்களில்கூட கண்ணைப்பறிக்கும் அலங்காரங்களுடன் நின்று 'பெட்டைக்குட்டி கதைக்கவும் பழகிட்டுது' என்று அடுத்தவரின்  ஏளனத்திற்கு அடிக்கடி இலக்காகின்றவர்கள், இன்றுவரை அழகுப்பதுமைகளாகவே உங்களைப் பார்த்துப் பழகிவிட்ட ஆணின் கண்களை எமது தோற்றத்தால், உயரிய நடத்தையால் மாற்றி அவர்களுக்கு அறிவுத்தெளிவை ஊட்டுவதற்குப் பதில் எமது அழகை இன்னமும் ரசிக்க வழிசெய்து கொடுப்பவர்கள். வீட்டுக்குள் இருந்த உங்கள் அழகை தூரத்தே மட்டும் பார்த்து பெருமூச்சு விட்ட ஆண் இனத்திற்கு 'கருத்துச் சொல்கின்றேன் பேர்வழி' என்று பெண் விடுதலை உணர்வைச் சாட்டாக வைத்;து கிட்ட நெருங்கி வந்து உங்கள் அழகை கிட்ட ரசிக்கும் பாக்கியத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் பெண் விடுதலை என்ற மேன்மையான உணர்வையே கொச்சப்படுத்துபவர்கள்.


உங்கள் ஆற்றல்... 

தமது ஆற்றல் எத்தகையது என்பதை இன்னமுங்கூட பெண்கள் அறியவில்லையா? இவ்வுலகின் ஆதார மையம், அச்சாணி பெண்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? எமது அறிவு, எமது திறமை, எமது மனோதிடம் என்பன உலகத்தை எமது காலடியில் தலைசாய்க்கக்கூடிய ஆளுமையை எமக்கு அளித்திருக்கும் போது கேவலம் அழகை வியாபாரமாக்கி அடுத்தவரை கவரநினைக்கும் இழிநிலையை முதலாளித்துவம் எம்மில் பதித்துவிட்டது என இன்னமுமே, உணரமுடியாத அறிவிலிகள் தான் பெண்களா?

உங்கள் பணி...

இன்றைய உலக அமைப்பில் பெண்கள் வகிக்கும் பணி ஆணைவிடவும் அளப்பரியது. பெண்மைக்கே உரிய சிறப்பம்சங்களான அன்பு, கருணை, பாசம், இரக்கம், தாய்மை என்பன இச்சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்து அதைக் கைவிட்டுவிடாமல் அதேசமயம் ஆணுக்கு நிகராக அல்லது அதையும்விட அதிகமாக அறிவுத்துறையில், நிர்வாகப்பதவியில், தொழில்நுட்பத்திறனில், உடற்பலத்தை காண்பிக்கும் யுத்தகளத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது பெண்ணினம். ஆணின் பாதை ஒரே சீரான பாதை. ஆனால் பெண் செல்லும் பாதையோ பலதரப்பட்ட ஆற்றலும் தேவைப்படும் பாதை.

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப தமது ஆளுமைத் திறனையும் மாற்றி வைக்கும் தேவை பெண்ணிற்கு உண்டு. குடும்பச்சுமை, வேலைச்சுமை என்ற இரட்டைச்சுமையில் திண்டாடும் இவர்களுக்கு ஆணைவிடவும் அதிகளவு ஆளுமை அவசியம். அதுமட்டுமல்ல. இதுவரை ஆணுக்கு மட்டுமே உரியதாக இருந்த ஆளுமைப்பண்பை பெண்கள் புதிதாக உருவாக்கி அதை தம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அனைத்துச் சுமைகளையும் தாங்கி நேரம் இல்லாது சிரமப்படும் பெண்கள் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் வீணாக்கக் கூடாது. இதுவரை எந்தக் கோலத்தில் நீங்கள் மற்றவர்களால் பார்க்கப்பட்டீர்களோ அதிலிருந்து அவர்களை மாற்ற உழைக்க வேண்டும். அன்பு சொரியவேண்டிய நேரத்தில் அன்பைக் காட்டி, ஆளுமையைக் காட்டவேண்டிய இடத்தில் ஆளுமையைக் காட்டி, அன்பை சொரிபவர்களாக, அழுகுப் பதுமைகளாக, ஆறுதலளிப்பவளாக, ஆலோசனை தெரிவிப்பவளாக, அடக்கி அதிகாரம் செய்பவளாக எல்லாவற்றிலும் மேலாக உலகிற்கு உயிர் கொடுப்பவளாக, சந்ததி விருத்திக்கு உதவுபவளாக, அடக்குமுறைக்கெதிராக, கிளர்த்தெழுந்து ஆயுதம் தாங்குபவளாக, கணத்திற்குக்கணம் ஆளுமைத்திறன்களை மாற்றியமைத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அளப்பரிய பணி உங்களுக்குண்டு. ஆனால் பெண்களோ.... இன்னமும் உதட்டு அலங்காரங்களி;ல்தான் முழுநேரத்தையும் வீணாக்குகின்றார்கள். முக அழகுக்கு மஞ்சளா, எலுமிச்சம்பழமா, கிறீமா, நக அழகுக்கு மருதாணியா, கியூடெக்ஸா, உடல் அழகுக்கு சேலையா, பாவாடை சட்டையா, என்ற விவாதத்திலேயே இவர்களின் முழுப்பொழுதும் போகின்றது. வேலையற்று வீட்டிலிருக்கும் பெண் என்றாலும் சரி, வேலைக்குப் போகும் படித்த பெண் என்றாலும் சரி இந்த நகப்பூச்சுப்பவுடர் கலாச்சாரத்திலோ அல்லது ஆடை அணிகலன்களிலோதான் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அறிவும் ஆளுமையும் பரிணமிக்க வேண்டிய கல்விக்கூடங்கள், நிர்வாகத்துறைகள், வேலைத்தளங்கள், போன்றவற்றையெல்லாம் அழகு வியாபார நிலையங்கள் ஆக்கியிருப்பது பெண்கள் சமுதாயந்தான் என்பது எத்தனை வேதனைக்கும் வெட்கத்திற்குமுரிய ஓர் உண்மைநிலை.

கல்விக்கூடங்களில்...

உங்கள் அறிவுக்கண்களால் மாணவர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் வகுப்பறை. நாளைய சமூகத்தை வடிவமைக்கப் போகும் சிற்பிகளை தயார்படுத்தும் ஓர்; உன்னத இடம் அது. அறிவுக் கவசமிட்டு ஆளுமையின் மூலம் மாணவர்களை உங்களை நோக்கி கவர்ந்திழுத்து உங்கள்; தோற்றம், ஒழுக்கம், செயற்பாடுமூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களில் பதிய வைக்கும் உயர்வான இடம். தனது குருவிடம் பக்தியும், மரியாதையும், கொள்வதற்கு கண்;ணைப்பறிக்கும் ஆடையும், கழுத்துத் தெரியும் சட்டையும், அமைதியைப் பறிக்கும் கொலுசுச்சத்தமும் உதவுமா? உங்கள் அழகை மற்றவர்கள் ரசிப்பதற்கான இடம் வகுப்பறையல்ல. உங்கள் அறிவு விருந்தை சுவைப்பதற்கான இடம் அது. உங்கள் ஆடையின், நகப்பூச்சின், முகப்பவுடரின், ஆபரணங்களின் தரத்தை அலசும் இடம் அதுவல்ல. உங்கள் அறிவை, ஆளுமையை, எளிமையைக் கண்டு வியந்து போற்றி உங்கள் மீது மதிப்புக்கொள்ள வைக்கும் இடம் அது. ஆனால் உங்களில் சிலர் செய்வது, அறிவைப் பரப்பவேண்டிய இடத்தில் கழுத்தழகை, இடுப்பழகைக் காட்டும் இடமாக மாற்றிவிட்டார்களே? வெள்ளைச்சீருடை, ஒரே மாதிரியான தலையலங்காரம், ஆபரணத்தடை என்று மாணவர்களின் புறத்தூய்மைக்கு சட்டம்போட்டு நடைமுறைப்படுத்தும் நீங்கள் உங்கள் அலங்காரத்தால், டாம்பீகத்தால், அகத்தூய்மையை அழுக்காக்கி விடுகின்றீர்களே? இச்சமூகத்திற்கு எனது பணி, கடமை என்ன என்று சிந்தனை செய்யவேண்டிய இளம் மனங்களில் அழகுப் பொருட்களிலும், ஆபரணங்களிலும் மூழ்கிக் கிடக்கும் ஆவலை, ஏக்கத்தை விதைத்து விடுகின்றீர்களே? ஏழைகளின் மத்தியில் இயலாமையை, விரக்தியை, சோர்வை தூண்டுகின்றீர்களே?

வேலைத்தளங்களில்... 

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டு பரிணமிக்க வேண்டிய இடம். நிர்வாகப் பதவிகள், நிதானமான, கம்பீரம் பொருந்திய உங்களி;ன் காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடுபிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில் ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டி இழுக்கும் ஆற்றல் பெற்ற நீங்கள் கேவலம் கண்ணைப்பறிக்கும் ஆடையும், கழுத்தை நிறைக்கும் ஆபரணமுமாக உலாவருகின்றீர்கள். ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் மதிப்பையும், மரியாதையும் பெற வேண்டிய நீங்கள், உங்கள் நகப்பூச்சின் தரத்தை, ஆபரணங்களின் கனபரிமாணத்தை, வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையத்தை ஆராயும் இடமாக தயார்படுத்துகின்றீர்கள். உங்களைப் போகவிட்டு முதுகுக்குப் பின்னால் உங்களை பெண்களே விமர்சிக்கும் இழிநிலைக்கு ஆளாகின்றீர்கள். உங்களின் தோற்றத்தைப் பார்த்து பெண்களே அறிவுசார் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தயங்குவது உங்களுக்குப் புரியவில்லை. வேலைத்தளங்களில் தேவைப்படுவது நிர்வாகத்திறன். மனிதனின் வெளித்தோற்ற அலங்காரங்களையும் விட, மனித ஆளுமையை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் இங்கு பிரதானமாகத் தேவைப்படுகின்றது.

அழகு விம்பம் ஒன்றுக்குள் தனக்கு சமமான வகையில் அல்லது தன்னை விடவும் சிறந்தமுறையில் கருத்துக்களை உருவாக்கும் திறன் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச்சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு முதலில் உங்கள் தோற்றம் மாறவேண்டும். இரசனைக்கு இடமுள்ளதாக இல்லாது கம்பீரமும், ஆளுமையும் வெளித்தெரியும் வகையில் உங்கள் வெளித்தோற்றம் அமைய வேண்டும்.

பொது இடங்களில்...

உங்கள் அலங்காரத்தையும், டாம்பீகத்தையும் காட்டுவதற்கு மரணவீடுகள், மருத்துவ மனைகள், அநாதை இல்லங்கள் என்பவற்றைக்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை. கையை இழந்து கிடப்பவனிடமா உங்கள் கைவளையலையும்;, மோதிரத்தையும் காட்டுவது. ஒரு வேளை சோற்றுக்கே ஆலாய்ப் பறக்கும் குடும்பத்தில் உங்கள் அழகு சாதனங்களின், ஆபரணங்களின் விளம்பரங்கள் ஒன்றில் உங்கள் மீது அவர்களை வெறுப்புக் கொள்ள வைக்கின்றது. அல்லது தமது இயலாமை, ஏக்கம், விரக்தி என்பவற்றின் மூலம் தங்கள் மீதே வெறுப்புக் கொள்ள வைத்து சமுதாய சீர்கேடுகளை உருவாக்குகிறது.


அழகாக இருப்பதே குற்றமா...?

அவ்வாறாயின் அழகாக இருப்பதே குற்றமா? மனிதனுக்கு அழகுணர்ச்சியே இருக்கக் கூடாதா? என நீங்கள் பொருமுவது கேட்கிறது. அழகுணர்ச்சி என்பது மனித முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது. மனித ஜீவன்கள் அனைத்திற்குமே பொதுவானது. ஒவ்வொரு ஜீவனிடமுமே அழகுணர்ச்சியின் தன்மை வேறுபட்டது. நாம் முகஞ்சுழிக்கும் பழங்குடி மக்களின் ஆடை அணிகலன்களோ அல்லது எம்மைத் திகைக்க வைக்கும் ஆபிரிக்க குடிகளின் மூக்கு, காது, கழுத்தில் தொங்கும் பிரமாண்டமான வளையங்களோ எமக்கு புரிய வைப்பது எதுவெனில் அழகுணர்ச்சி என்பது இனத்திற்கு இனம், மனத்திற்கு மனம் வேறுபட்டது என்பதைத்தான்.

இன்றைய உலகின் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சிக்கு மனித வாழ்க்கையின் அளப்பரிய தேவைகள் எந்தளவிற்கு காரணமாக இருந்ததோ அதைவிட அதிகம் காரணமாக இருந்தது இந்த அழகுணர்;ச்சிதான். இயற்கையின் அழகை கண்ணால் பருகியதுடன் நிற்காது அதை நிரந்தரமாக்கிப் பார்க்க எழுந்தவைதான் ஓவிய, சிற்ப, புகைப்பட கலைகள். வெப்பம் குளிரிலிருந்து எம்மைப் பாதுகாக்க மட்டும் தான் வீடு என்றால் இலட்சக்கணக்கில் உழைப்பின் பெரும்பகுதியை மனிதன் வீட்டிற்குள் முடக்கியிருப்பானா? இருப்பதற்கு மட்டுந்தான் இருக்கை என மனிதன் நினைத்திருந்தால் இன்று விதம் விதமான சோபாக்களை நாம் கண்டிருக்க முடியுமா?

அழகுக்கு அழகூட்டுவது அலங்காரம். நீண்ட கூந்தல், அழகு என்பதற்காக அதனை விரித்துவிட்டுத் திரியமுடியாது. அழகான உடல் என்பதற்காக அசுத்தமாக, ஆடை இன்றி இருக்க முடியாது. கறிக்கு வாசனை ஊட்டும் கறிவேப்பிலை போன்றதுதான் இந்த அலங்காரம். ஆனால் இன்று நாம் காண்பது கறிவேப்பிலையே கறியாக மாறுவதைத்தான். அளவுடன் இருக்கும்போது அழகுக்கு அழகு செய்யும் ஆடை அலங்காரங்களால் அளவு மீறும்போது அவை மனித ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக அமைந்துவிடுகின்றன.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் உலகத்தை ஆக்கப்பாதையில் இட்டுச் செல்வதற்கென மனிதனால் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு கட்டத்தின்பின் உலகையே அழிப்பவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. மானுடத்தைப் போதித்த இலக்கியங்கள் இன்று வக்கிர உணர்வைத் தூண்டுவதற்கும் படைக்கப் படுகின்றன. அதுபோல்தான் மனிதனை மேம்படுத்தும் அழகுணர்ச்சியுங்கூட காலமாற்றத்தால் விகாரமடைந்து தனது எளிமையை, தூய்மையை மேன்மையை மறந்து பகட்டு ஆடம்பரப் போக்குக்குத் தன்னைப் பலிகொடுத்து நிற்கின்றது.

அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதுதான் பெண்ணின் நோக்கம் என்றால் ஆடம்பரத்தாலும், அலங்காரத்தாலும் அதைச் சாதிக்க முடியாது. மனிதரை ஈர்ப்பது எளிமையான அழகு. நிலவும், மலரும், அருவிகளும் மனித மனத்தை ஆக்கிரமித்த அளவிற்கு மனிதனின் அளப்பரிய கண்டுபிடிப்புக்களான வானுயர்ந்த கோபுரங்களோ, மாடிக் கட்டடங்களோ ஆக்கிரமிக்கவில்லை. மலரின் மென்மை, நிலவின் குளிர்மை, மரங்களின் பசுமை, மழலைகளின் பேச்சு போன்றவை மனிதனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது போல் எதுவுமே கொடுக்கவில்லை. கண்ணைப் பறிக்கும் இரத்தச் சிவப்புநிற முள்முருக்கம்பூ கூட எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆனால் மென்மை, தூய்மை, வாசனை மிக்க மல்லிகை மலர் மனித மனத்தை ஆக்கிரமித்தளவிற்கு இதனால் முடியவில்லையே ஏன்?

அதுபோல்தான் உங்கள் அக அழகும், புற அழகும் இணைந்துதான் மனிதனை உங்களால் ஆக்கிரமிக்க, ஆளுமைப்படுத்த முடியும் என்பதை பெண்ணினம் புரிந்து கொள்வது அவசியம். மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு மனிதன் அடிமையாகும் ஒரு குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே பெண்கள் தமது அழகால், அலங்காரத்தால் அவனை ஆட்கொள்ள முடியும் அல்லது மேன்மையான எண்ணம் எதுவுமற்ற, பாலியல் வெறிகொண்டவர்களிடம் மட்டுமே உங்கள் அழகும் அலங்காரமும் சாதனைபுரிய முடியும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து அதன்படி நடக்க விழையும் மனிதனுக்குத் தேவைப்படுவது அறிவும், ஆலோசனையும் மட்டுமே? ஆண்களை கவனித்துப் பாருங்கள். அறிவும் ஆளுமையும்மிக்க பெண்ணிடம் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும், அவர்கள் வழங்கும் மரியாதையையும். அழகுதான் வாழ்க்கைக்கு அடிப்படையெனில், இவ்வுலகில் அழகில் சிறந்த பலருக்கு ஏன் வாழ்க்கை இனி;க்கவில்லை? என்பதை பெண் சமூகம் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை?

முடிவாக...    

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும்' என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும், முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். உங்களை மாற்றியமைக்க உங்களால் முடியும்.

உங்களின் ஆற்றலை வீணான அலங்காரங்களில் செலவிடாது ஆளுமையை விருத்தி செய்ய பயன்படுத்துங்கள். உங்கள் உன்னத திறமைகளால், இவ்வுலகத்தை வழிநடத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அழகு சாதனங்கள்;, ஆடம்பரப் பொருட்களும், முதலாளித்துவம் உங்களுக்கு இட்ட அடிமைத்தளைகள். உங்களை அடிமைச்சிறையில் உழலவைக்கும் விலங்குகளை உங்களின் விருப்புக்குரிய பொருளாக மாற்றி நீங்களே உங்களுக்கு விலங்குகளை பூட்டிக்கொள்ளும்படி முதலாளித்துவம் எவ்வளவு திறனுடன் செயல்பட்டிருக்கிறது. நாடு விடுதலையடைய நீங்கள் விடுதலையடைய வேண்டும். நீங்கள் அடுத்தவர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டுமெனில் முதலில் உங்களிடமிருந்து விடுதலையடைய முயற்சிக்க வேண்டும்.

1998














Saturday, August 13, 2011

உங்கள் விடுதலை -----


உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு தான் விரும்பியதை அடைதல். இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்திலும் மனிதன் மாத்திரமே இறுதி இலக்கை அடைபவன். சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து கள்ளர், பொய்யர், வஞ்சகர் போன்ற பலதரப்பட்ட மனித வர்க்கங்களைக் கடந்து நேரிய வழியில் நீதி, அன்பு, ஓழுக்கம் என்பவற்றைப் பின்பற்றி தனது இலக்கை அடைய விரும்பும் மனிதனுக்குத் தேவைப்படுபவை தன்னம்பிக்கை திறமை நிதானம் என்ற மூன்று பண்புகளுமே. இந்தப் பண்புகளைப் பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அழகு அல்ல-- ஆளுமை என்ற அம்சமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால் உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் ---------

நிமிர்ந்த நடை, நேரிய பார்வை, அமைதியும் எளிமையும் இயைந்த தோற்றம், ஆழமான பேச்சு இவையே ஆளுமையின் வெளிப்பாடுகள். எமது தோற்றத்தினால், எமது உயரிய பண்பினால், எமது செயல்களினால் எம்மைச் சூழ இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், எமது சிந்தனைகளை அவர்கள் ஏற்று, அதனை மதித்து நடக்கத் தூண்டும் ஆற்றல்-- இது தான் மனித ஆளுமை. ஆறடி உயரத்திலும் துவண்டு, கூனிக் குழைந்து நடப்பதை விட ஐந்தடி உயரத்திலும் கம்பீரமாக நிற்க முனைவது ஆளுமை. உதடுகள் அழகற்றதாக இருப்பினும் தமது அறிவுபூர்வமான பேச்சால் அடுத்தவர் கவனத்தை தம்மீது திருப்ப முனைவது ஆளுமை. காலால் நிலத்தில் கோலம் வரைந்து கொண்டு அல்லது கண்கறை அங்குமிங்கும் அலைய விட்டுக் கொண்டு  எதிரிலிருப்பவரிடம்; கதை கேட்பது அல்லது கதை சொல்வது ஆளுமையைச் சிதைத்து முன்னேற்றத்தின் தடைக்கற்களாக்கிவிடுகின்றது. அழகுக்கும் ஆளுமைக்குமிடையிலான பேதத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது உங்கள் விடுதலைக்கான அடித்தளம் இடப்படுகின்றது. -------

பெண் என்பவள் போகத்துக்குரியவள் என்ற அசைக்க முடியாத கருத்துநிலை பள்ளிப் பக்கமே எட்டிப்பார்க்காத பாமரப் பெண்ணைவிட பட்டப்படிப்பை முடித்துப் பதவியிலிருக்கும் பெண்ணிடம் அதிகம் என்பது கசப்பான உண்மை. அறிவுக் கண் திறந்து அறிவுப் பாதையில் நடைபயிலத் தொடங்குபவள் கூட அழகுக் கவசங்களைக் கைவிட விரும்புவதில்லை. மனித வாழ்க்கைப் பாதையில் இச்சைகளுக்கு அடிமையாகும் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு மட்டுமே அழகும் அலங்காரமும் ஆக்கிரமிக்க முடியும்.  அழகுப் பதுமைகளாக மட்டுமே இதுவரை உங்களைப் பார்த்துப் பழகிய கண்களை உங்கள் ஆளுமையால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்ற யதார்த்தம் எப்போது உங்களுக்கு உறைக்கின்றதோ அங்குதான் உங்கள் முன்னேற்றத்திற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கப்பெறுகின்றன.

அறிவுக் கண்களால் அறியாமை என்னும் இருளைப் போக்கும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். ஒப்பீட்டளவில் நீங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும் இடமும் இதுவாகவே இருக்கின்றது. நாளைய சமூகத்தை வடிவமைக்கப்போகும் சிற்பிகளைத் தயார்படுத்தும் உன்னத இடம் வகுப்பறை. அறிவுக் கவசமிட்டு, ஆளுமையின் மூலம் கவர்ந்திழுத்து, தோற்றம், ஒழுக்கம், உயரிய செயற்பாடுகள் மூலம் உங்களில் மரியாதையை, மதிப்பை, பக்தியை ஏற்படுத்தி உங்கள் அறிவை அவர்களிடம் பதிய வைக்கும் உன்னதமான இடம். தனது குருவிடம் பக்தியும் மரியாதையும் கொள்வதற்கு தடையாக இருப்பவை கண்ணைப் பறிக்கும் ஆடையும், கழுத்து நிறைந்த ஆபரணங்களும் அமைதியைப் பறிக்கும் கொலுசுச் சத்தமுமே. வெள்ளைச் சீருடை, சீரான தலையலங்காரம், ஆபரணத் தடை என்று பிஞ்சு மனங்களில் புறத்தூய்மையை சட்டம் போட்டு ஏற்படுத்தும் நல்ல பண்பை வகுத்திருக்கும் நீங்களே உங்கள் கோலங்களால் அவர்களின் அகத்தை அழுக்காக்குகின்றீர்கள் என்ற யதார்த்தத்தை உணருங்காலம் எப்போது வருகின்றதோ அங்கே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கற்களை நீங்களே எழுப்புகின்றீர்கள்.

அறிவும் ஆளுமையும் போட்டி போட்டுப் பரிணமிக்க வேண்டிய இடம் நிர்வாகப் பதவிகள். கம்பீரம் பொருந்திய காலடிச் சத்தத்தில், ஆழ்ந்த அமைதியான பார்வையில், உதடு பிரியாத புன்னகையில், இலேசான தலையசைப்பில், பெரிய நிறுவனத்தையே கட்டியிழுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. அழகு விம்பம் ஒன்று தனக்குச் சமமான வகையில் அல்லது தன்னைவிடவும் சிறந்த வகையில் கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே தயங்கும் இச் சமூகத்தின் மனத்தில் உங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிப்பதற்கு உங்கள் அகப் புறத் தோற்றங்கள் மாறவேண்டும். நகப்பூச்சின் தரம், ஆபரணங்களின் கன பரிமாணம், வாசனைத் திரவியங்களின் உற்பத்தி மையம் என்பவற்றை ஆராயும் இடமாக வன்றி ஆழ்ந்த நோக்கு, அளவான பேச்சு, அறிவார்ந்த கருத்து என்பவற்றின் மூலம் உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெறும் விருப்பம் உங்களிடம் எப்போது தலைதூக்குகின்றதோ அப்போது உங்கள் விடுதலை உங்கள் கண்ணெதிரில்.-----

புதிய உயிரொன்றின் உருவாக்கத்துக்கு வேண்டிய இரு அடிப்படை மூலப் பொருட்களும் ஆணுக்கும் பெண்ணுக்குமுரியவை. ஆனால் இந்த மூலக்கூறுகளினின்றும் முழுமையான உருவத்தைச் சமைக்கும் மேலதிகப் பொறுப்பு கருப்பைக்கு மட்டுமே உரியது. கருவைச் சுமந்த இரண்டாவது மாதத்திலிருந்தே தாயின் உணர்வுகள் கருவைப் பாதிக்கின்றன என அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையானால் ஆணின் கருவைச் சுமக்கும் வெறும் கருவியே தான்  என்ற கருத்துநிலை தகர்ந்து ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு உயிரை உற்பத்தி செய்யும் உற்பத்திச் சக்தியே தான் என்ற கருத்துநிலைக்கு ணெ; மாறுதல் வேண்டும். நீங்களே விரும்பி ஆணுடன் இணைந்து குழந்தையும் பெற்றுவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்ற முறைப்பாட்டுடன் அடுத்தவர் முன்னே போய் நிற்காது கருப்பையில் ஆணின் உயிரணுவை உள்வாங்கத்  தயார்படுத்தும்போதே உருவாகப்போகும் புதிய உயிருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை எப்போது உருவாக்கிக் கொள்ளுகின்றீர்களோ அன்றே உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில்-----

'தனது மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களை மனிதனால் மாற்ற முடியும் என்பதே மனித வர்க்கத்தின் முதன்மையானதும் முதல்தரமானதுமான கண்டுபிடிப்பாகும்' என்கிறார் உளவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ். 'உயிரைக் காக்கும்! உயிரினைச் சேர்த்திடும்! உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்! உயிரிலும் இந்தப் பெண்மை இனிது! எனவே பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் மாறவேண்டும் உங்கள் மனம் மாறவேண்டும். மனமாற்றம் மானுட விடுதலையை வென்றெடுக்கும் என்பது உண்மையானால்

உங்கள் விடுதலை உங்கள் கரங்களில் !
உங்கள் முன்னேற்றம் உங்கள்  மனங்களில்!

ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
08-03-2006