Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, May 11, 2017

கல்வி

சுயகற்றலுக்கு வாய்ப்பளிக்கும் நூலகங்களில் மையம் கொள்ள வேண்டிய இலங்கையின் கல்வித்துறை  பின்லாந்தின் கல்விமுறை தரும் புதியசிந்தனை

இலங்கையின் அபிவிருத்திச் சூழலில் சமூக செயன்முறையின் முக்கிய அம்சமாக கல்வி காணப்படுவதுடன்; பாடசாலைகள் சமூகத்தில் முக்கியமான அங்கமாகக் காணப்படுகின்றன. மாணவரிடையேயான பல்வகைப்பட்ட ஆற்றல்களும், திறன்களும் பாடசாலையினூடாக விருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படவேண்டிய அறிவுத் திறன, சிந்தனைத் திறன், தொடர்பாடற் திறன், தொழினுட்பத் திறன், ஊடகத்திறன், கணித அறிதிறன், செயலாக்கத் திறன் போன்ற முக்கிய திறன்களின் வரிசையில் அண்மைக் காலங்களில் மிக முக்கியமாக அதிகம் பேசப்படுகின்ற பதமாக தகவல் அறிதிறன் காணப்படுகின்றது. இது தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப்பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதியாக அமைகின்றது.

ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்  தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் என்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக் கொற்வதற்கும் தொழில்நுட்பக்கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் என்ற கூட்டுப்பதமாக அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் மாணவர்களின் தகவலறிதிறன் மேம்பாட்டில் கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில்  தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for International Students Assessment என்று பெயர். குறித்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகளிடையே பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. இந்நாட்டின் கல்விக்கொள்கையின் இரகசியம் உலகக் கல்வியியலாளர்களின் புருவத்தை உயர்த்தி விட்டிருக்கிறது. 'அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?' என அவர்களை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது.
பின்லாந்து குடியரசு வட ஜரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். இதன் தலைநகர்: ஹெல்சிங்கி பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன. 2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகளாக உள்ளன.  அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகமான நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவதும் பின்லாந்துதான்.
பின்லாந்தின் தேசிய நூலகம் ஹெல்சிங்கியில் அமைந்துள்ளது. மொத்தக்குடித்தொகையான ஜந்தரை மில்லியன் மக்களுக்கும் தலா எட்டுநூல்கள் என்ற வகையில் சுமார் 40 மில்லியன் நூல்கள் பல்வேறு நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 837 பொதுநூலகங்கள் 166 நடமாடும் நூலகங்கள்  58 நிறுவன நூலகங்கள் ஒரு கடலில் மிதக்கும் நூலகம் என சுமார் ஆயிரத்துக்குமேற்பட்ட நூலகங்களைக் கொண்ட பின்லாந்தை 'நூலகங்களின் தேசம்' என சர்வதேச நூலகச்சங்கங்களின் சம்மேளனம் (IFLA) வர்ணித்துள்ளது.

பின்லாந்தில் ஏழு வயதிலிருந்Nது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அதுவரை சுயதேடலுக்கான சுதந்திரம் அக்குழந்தைக்கு வழங்கப்படுகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்கு அடிப்படைக் கல்வியாகிறது. குழந்தை தனது தகவற்சூழலிலிருந்தே தனக்கு தேவைப்படும் தகவலைக் கண்டறிவதற்கு முனைகிறது. இப்படிநிலையிலே குழந்தையின் தகவலறிதிறன் இயல்பாக முளைவிடத்தொடங்குகிறது.

இத்தகைய கல்விச்சூழலை இலங்கையின் இன்றைய கல்வி;ச்சூழலோடு ஒப்பிடும் போது இலங்கையின் கல்விக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது. பரீட்சை நோக்கிலான வகுப்பறைக்கல்வியில் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என்ற இலங்கையின் தற்காலக் கல்விக்கொள்கையை வேரோடு பிடுங்கி எறியும வகையிலமையும்; பின்லாந்தின் சுயதேடல் நோக்கிலான சுதந்திரக்கல்வி இலங்;கையில் நூலகங்களின் நுழைவாயிலை அகலத்திறந்து வைத்திருக்கிறது.

எங்கள் பண்டைய கல்விமுறையில் ஏழு வயதில் குருகுலக்கல்விக்குச் சென்றும் திண்ணைப்பள்ளிக்கும் சென்று கற்றதைப்போல ஏழு வயதில பள்ளிக்குச் செல்லும் பின்லாந்துக் குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அண்ணளவாக ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறையில் தன்னிச்சையாக வளர்கிறது. பாடசாலை இயங்கும் நேரம் இலங்கைப் பாடசாலைகளைப் போலன்றி மிக மட்டுப்படுத்தப்பட்டது.  அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கிறது. படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். நூலகத்திற்குச் சென்று விரும்பியதைக்கற்கலாம். இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வில்; பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
இலங்கையில் வலுவான சமூகத்தின் உற்பத்தி மையங்களாகக் காணப்படும் பாடசாலைகள் பரிட்சைக்கான தயார்ப்படுத்தும் பொறிமுறை முனையங்களாக தம்மை தற்காத்துக்கொள்வதில், பெறுபேறுகளில் போட்டியிட்டுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதன் விளைவாக மாணவரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் மனஅழுத்தம் போதைப்பாவனை என்பவற்றுடன் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால் பின்லாந்தின் கதை வேறு. அங்கு 13 வயது வரை தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை பரீட்சைகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் இல்லை. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுகள் அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். சுயதேடல் நோக்கிலான கல்விக்கு அனுகூலமான பாடசாலை நூலகங்கள் இருந்தும் வாசிக்க வாய்பபளிக்காத இலங்கையின் பாடப்புத்தகக் கல்வி மாணவர்களின் சுயசிந்தனைத்திறனை மழுங்கடிக்கிறது.
இலங்கையில் இலவசக்கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி புகட்டப்படுகின்ற போதிலும் அதில் தனியார் துறையின் செல்வாக்கு மிகுதியாகவே காணப்படுகிறது. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்கள் என நீளும் கல்வியை வைத்துப் பணமீட்டும் நடைமுறைகள் இலங்கைக் கல்விமுறையில் இன்னமும் பிரியாத வரமாக வளர்ந்து செல்கின்றன. பின்லாந்தில் தனியார் பாடசாலை முறை கிடையாது. அங்கு கல்வி என்பது முழுமையாக  அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும் அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால்; பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.
இலங்கையில் ஆசிரியப்பணி என்பது பட்டதாரிகளுக்கான அடிப்படை வேலை வாய்ப்பாக அதிக எண்ணிக்கையில் அரசியல் தலையீடுகளைக் கொண்ட சேவைப்புலமாக இனங்காண முடிகிறது. குறிப்பாக ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளில் பயிற்சிபெறாத சான்றிதழ்ப் பட்டதாரிகள் பாடத்தேர்ச்சிக்கும் கற்பித்தற்துறைக்கும் பொருந்தாத  ஆசிரிய நியமனங்கள் என நீளும் குறைபாடுகளிடையே அவர்களின் நடத்தைக்கோலப்பிறழ்வுகளால் மதிப்பிழக்கும் இலங்கை ஆசிரியத்தொழில் போல அல்லாமல் பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியமாக உள்ளது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பின்லாந்தில் மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வௌ;வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் நெகிழ்ச்சியற்ற தரமான முயற்சிகள் தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பெரும்பாலான இலங்கைப்பாடசாலைகள் மாணவர்களின் குடும்ப உறவிலோ உளநலனிலோ அக்கறைத்தன்மையை வெளிப்படுத்த இயல்பாகவோ அல்லது தற்செயலாகவோ தவறிவிடுகின்றன. வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்;கி ஆசிரியர்களை அவதிப்பட வைக்கின்றன. ஆனால் பின்லாந்தின் போக்கு வித்தியாசமானது. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். பிள்ளைகளின் மன வளர்ச்சியைக் குன்றச்செய்யும் முறையிலான  குறை கூறுதல், அவர்கள் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற பழக்கங்கள் இங்கில்லை.  எனவே மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் அடக்கமாகக் கூறும் பதில் ;, 'பின்லாந்து கல்வி முறைதான் உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது ஏனெனில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது' என்பதே அவர்களின் பதில். தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது மதிக்கத்தக்க மனநிலை.
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாசிக்க கற்றுக் கொடுங்கள். நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுடன் அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள். முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. சுயகற்றலுக்கும் சுதந்திரக்கல்விக்கும் வாய்ப்பளித்து வாசிப்பால் உயர்ந்த புதிய தேசத்தினைக் கட்டியெழுப்புவோம்.

Monday, January 04, 2016

முரண்களுக்குள் தொலையும் முழுமை - 2


முரண்களுக்குள் தொலையும் முழுமை -2
 ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்;
நுழைவாயில்
ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ கல்வி என்ற கருத்துநிலை பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக தமிழர்களிடம் உள்ள தகவல்கள் எண்ணற்றவை. கல்விக்கு தமிழ்ச் சமூகம் வழங்கியிருக்கும் இடம் மிகவும் உன்னதமானது. கல்விக்கென இலங்கை அரசு செலவழிக்கும் தொகையோ மிகவும் அளப்பரியது. கல்விக்கு அரசு வழங்கும் முன்னுரிமை, உலகின் கல்விக்கொள்கைளின் சிறப்பம்சங்களை பிழிந்தெடுத்து உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள், திறமைகளை வடித்தெடுத்து பொருத்தமான இடங்களில் பொருத்தக் கூடிய வகையில் தரம்பிரிக்கப்பட்ட பாடசாலைகள், சர்வதேச உதவு நிறுவனங்களின் அளப்பரிய கவனம் என கல்வியின் புறவயப்பட்ட விரிவாக்கமானது ஆச்சரியமும் பிரேமையும் தரத்தக்கதாக அமையும் அதே சமயம் கற்றல், கற்பித்தல் உட்பட  சமூகப் பிரஜை ஒன்றை உருவாக்குவதற்கான கல்வியின் அகவயப்பட்ட விரிவாக்கமானது அவலமும் பிரமையும் தரத்தக்கதாக அமைந்திருக்கிறது. உலகமயமாக்கம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தகவல் சுனாமி, பொருளாதார வளர்ச்சி போன்றவை கல்வியை அறிவுநுட்பத்திற்கான அடித்தளம் என்ற நிலையிலிருந்து மாற்றி பொருளீட்டுவதற்கான முதலீடாக தரமிறக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கல்வி பொருளாக மாற்றப்பட்டு எழுத்தறிவிக்கும் இறைவர்களான ஆசிரிய சமூகமே அதன் விற்பனையாளராக மாறியிருக்கும் பரிதாபம், விற்பனையை மேம்படுத்துவதற்கான விளம்பரதாரர்கள், இடைத்தரகர்கள் என கல்வி வியாபாரம் களைகட்டி பறக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். இதனால் ஏற்படும் விசனமும் 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, போன்றோரின் சிந்தனைகள்; வழி சென்று மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதை அறிவுறுத்தி உண்மைக்கல்வியை எமது மக்களுக்கு நாம் வழங்குவதில் தடையாக இருக்கின்ற எண்ணற்ற பல காரணிகளில் ஒன்றிரண்டை ஆவணப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கற்றல் என்ற கருத்துநிலை 
கற்றல் என்பது ஒரு அறிவை புதிதாகப் பெறுதல் அல்லது ஏற்கனவே உள்ள அறிவை இற்றைப்படுத்தல் அல்லது மெருகூட்டுதல் அல்லது வலுவூட்டுதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. செய்முறை சார்ந்து நோக்கும்போது படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது.  பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார்.  இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாகவோ இருக்கலாம். கற்றல் பாங்கு என்பது மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளினூடாக நடைபெறும் பார்த்தல், கதைத்தல், கேட்டல், தொட்டுணர்தல், முகர்தல் ஆகிய செய்முறைகளில் நடைபெறுகின்றது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது கற்றல் என்பது வாழ்நாள் முழுமைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு செய்முறையாகும். கற்பதற்குரிய இடம் கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்ற  தவறான பார்வை எம்மிடையே உண்டு. இக்கல்வி நிறுவனங்கள் வாழ்க்கைக்கான கற்றலின் ஒரு பத்து வீதத்தையாவது தருமா என்பது கேள்விக்குரியது. அவ்வாறாயின் கற்றலின் களங்கள் வேறு எவை?
கற்றலின் ஆரம்பம் கருவறையாகும். வாழ்வின் பெரும்பாலான கற்றல் குடும்பம் என்ற ஆதார நிறுவனத்திலிருந்து தான் நடைபெறுகின்றது. குடும்பமும் சுற்றுப்புறச் சூழலும் தான் கற்றலின் பிரதான களங்கள்.

கருவறை என்னும் கற்றலறை
மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில் தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும் போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது.
குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப் பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமை மிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக் கொண்டு வரும் கருவின் போக்கையே திசை திருப்பிவிடும்' என்ற ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) அவர்களது கூற்று சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலையை தகர்த்;து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலையை ஆய்வாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது. எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும். இதனால் தான் இன்றைய தந்தைவழி சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழி சமூக அமைப்பிலும் சரி தாய்மை நிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மை நிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது.

கருவறைக் கவலையீனங்கள்
கருவறையிலேயே கற்றல் செயற்பாடு நடைபெறுவதை ஆய்வுகள் மெய்ப்படுத்தியிருக்கின்றன.  பெற்றோர் மற்றும் சூழலால் குழந்தை வடிவமைக்கப்படுகிறது. தாயின் குரலிலிருந்து அது ஒலியைக் கற்கிறது. ஏனைய ஒலிகள்; கருவறையைக் கடந்து தெளிவான முறையில் கருவை வந்தடைதல் சாத்தியமற்றது. பிறக்கும் குழந்தைகள் தாய் பேசும் மொழியின் சாடையிலேயே அழுகின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒலியை மட்டுமன்றி சுவையையும் மணத்தையும் கூட கருவறையில் சிசு கற்கின்றது. இது உண்மையெனில் கருவறையில் கேட்டல் அல்லது செவிமடுத்தலூடாக சிசு கற்கின்றது. தாயின் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் குழந்தையிடம் போய்ச் சேருகின்றது. குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில் தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் ஏற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
வறுமையை அடிப்படை பண்பாகக் கொண்ட சமூகங்களில் பசியால் வரும் அனைத்து எதிர்க்கணிய மன எழுச்சிகளையும் செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட சமூகங்களில் உடலுழைப்பின்மையால் ஏற்படும் நோய்கள் சார்ந்து பெண்ணுக்கு ஏற்படும் மன எழுச்சிகளையும் குழந்தை கற்கின்றது. இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்ப் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் போன்றவற்றை கருவறையில் குழந்தையும் எதிர்கொள்கின்றது. இன்றைய சமூகத்தில் பரக்கப்பரக்க பஸ் எடுத்து வேலைக்குப் போகும் கர்ப்பிணிப் பெண்ணின் பரபரப்பு, பதட்டம், இயலாமை, வேதனை, விரக்தி அனைத்தையுமே குழந்தை அனுபவிக்கின்றது.

சமூக நிறுவனங்களின் ஆதிக்கம்
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். சமூக  நிறுவனங்களின்  ஆதார (pசiஅயசல) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (ஐவெநசஅநனயைவந) நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (ளுநஉழனெயசல) நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. கற்றல் செயற்பாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

குடும்பம் என்னும் முதல் நிறுவனம்
உழைப்பு, தாராள மனப்பாங்கு ஒத்துணர்வு, அழகுணர்ச்சி, கட்டுப்பாடு, கீழ்ப்படிவு போன்ற நற்பண்புகளின் பிறப்பிடமாக அமைவது குடும்பம். கருவறையை விட்டு குழந்தை வெளியே வந்ததும் பார்த்தல் அல்லது அவதானிப்பு மூலமான கற்றல் செயற்பாடு இங்கிருந்துதான் தொடங்குகின்றது. பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது.
பார்த்துக் கற்றலில் கூர் நோக்கு அல்லது அவதானிப்பு என்ற அம்சம் முக்கியம் பெறுகின்றது. தான் வாழும் சூழலின் ஒவ்வொரு அம்சமும் அதில் காணப்படும் முரண்களும் குழந்தையின் கற்றல் செயற்பாட்டில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூகத்திலுள்ள ஏனைய மனிதர்களைப் பற்றி ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மை, தான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பது தொடர்பாக ஒருவனது குறிக்கோள்கள், ஒருவனது வாழ்க்கை நடை என்பவை குடும்பத்திலிருந்தே வருகின்றது. 'நான்' என்னும் உணர்வையும் 'நாம்' என்னும் உணர்வையும் குழந்தைகளில் விதைப்பதில் குடும்பத்திற்குப் பெரும் பங்குண்டு. ஒத்துழைப்பு, பரந்த மனப்பான்மை, உதவும் பாங்கு கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் வளரும் பெற்றோரின் குழந்தைகள் முழு ஆளுமை வளர்ச்சியுடன் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கருவறை விட்டு வெளியே பிரவேசிக்கும் குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் முழுமையாக வீட்டுச் சூழலால் வடிவமைக்கப்படுகினறது.
குழந்தையின் ஆளுமை வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி அக்குழந்தை வாழும் குடும்பச் சூழலே. குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படக்கூடிய புறக்கணித்தல்-ஏற்றுக்கொள்ளல், அசட்டை செய்தல்-அதிக கவனமெடுத்தல், கட்டுப்படுத்தல்-முழுச்சுதந்திரமளித்தல், பணிந்து போதல்-அதிகாரம் செய்தல், ஒதுங்குதல்-ஒன்றிப்போதல் ஆகிய தொடர்புகள் குழந்தைகளது ஆளுமை வளர்ச்சிப்போக்கையும் சமூக மனப்பான்மைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதைக் கல்விசார் ஆய்வுகள் மெய்ப்படுத்துகின்றன. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது. பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. நகர்ப்புறக்குடும்பங்களில் நெருக்கமான வசிப்பிடங்களில் வாழ்க்கை, பணம் சேர்ப்பதில் நாட்டம், பெற்றோர் இருவரும் வேலை பார்த்தல், விவாகரத்து போன்ற அம்சங்கள் அதிகமாக இருக்க கிராமப்புறக்குடும்பங்களில் அறியாமை, வறுமை, போன்ற அம்சங்கள் அதிகமாக உள்ளன.

குழப்பமுறும் குடும்பச் சூழல்
 'முதல் மூன்று ஆண்டுகளில் ஒருவன் கற்கும் அளவு அவனது வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை' எனக் கூறும் யோன் டூவி என்ற கல்வியியலாளரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எமது வீடுகளில் நடப்பதை ஒருமுறை நினைவில் கொண்டு வருவோமெனில் 'பிறந்த இரண்டு வயது குழந்தை எழுப்பும் வினவல்களுக்கு பேராசிரியர்களே விடையைத் தேடிடும் காலம் இது. முந்திய தலைமுறைக் குழந்தைகளைப் போலன்றி இன்றைய குழந்தைகள் மிக்க அறிவுடன் பிறக்கிறது அல்லது வளர்கிறது என்று பெருமிதம் கொள்ளும் பெற்றோருக்கும், இதனை ஆய்வின்றியே அறுதியாகக் ஏற்றுக்கொள்ளும் இன்றைய உயர் தகவல் தொழி;ல்நுட்பச் சூழலுக்கும் மட்டும் இது பொருத்தமானது என்ற தவறான பார்வை எம்மிடையே உண்டு. இன்று நேற்றல்ல! குழந்தையின் வினவல்கள் என்றுமே பதிலளிக்க மிகவும் கடினமானவை. சில பெற்றோர் முடிந்தளவிற்கு பதிலளிக்க முற்படுகின்றனர். பலரோ அடக்கிவிடுகின்றனர்.  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஆயாவின் பராமரிப்பில் வாழும் குழந்தையின் வினவல்களுக்கு பதிலளிக்க யாருமே இருப்பதில்லை. பல குழந்தைகளின் வினவல்கள் பதிலளிக்கப்படமுடியாத சந்தர்ப்பங்களில் கிழட்டுக் கதையாக உருவகப்படுத்தப்பட்டு பெற்றோரால் அல்லது வீட்டிலுள்ள பெரியோரால் முடக்கப்பட்டுவிடுகின்றது.
இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் பூசல்நிறைந்த குடும்பங்களாகவே காணப்படுகின்றன. பெற்றோர் இருவருமே வேலை பார்க்கும் குடும்பங்களில் உள்ள காலை நேரப் பதட்டம், பரபரப்பு, சண்டை, அதனால் வெளிப்படுத்தப்படும் விரக்திநிலை அனைத்தையுமே குழந்தை ஆழ்ந்து அவதானிக்கின்றது என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். குடும்பங்களில் நாம் காணும் இன்னோர் பண்பு தொடர்ச்சியான நச்சரிப்பு. நச்சரிப்புக்கு பேர் போனவர்கள் பெண்கள் என்பதை பெண்களே ஏற்றுக்கொள்வர். மனைவி என்ற வகிபங்கில் அதைக் கொண்டா, இதைக் கொண்டா என கணவனை நச்சரிப்பதும், தாய் என்ற வகிபங்கில் சிறிது நேரம் கூட விளையாட விடாது படி, படி என பிள்ளைகளை நச்சரிப்பதும் குடும்பத்திலிருந்து சற்றேனும் ஓடி ஒளிந்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்களிடம் இந்த நச்சரிப்பு ஏற்படுத்துகின்றது. உலகத்தின் புகழின் உச்சியில் ஏறியிருந்தபோதும் மனைவியின் நச்சரிப்பால் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களில் உலகப் புகழ் பெற்ற பிரான்சின் மன்னன் நெப்போலியன் ரஷ்யாவின் இலக்கிய மேதை லியோ ரோல்ஸ்ரோய், அமெரிக்க  அதிபர் ஆபிரகாம் லிங்கன் போன்றோர் உள்ளடங்குவர்.

மாறும் உறவு மனப்பாங்குகள்
மனப்பொருத்தமுள்ள குடும்ப வாழ்க்கையே நல்ல குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் தொடக்கமாகவும் அமையும் என்ற உளவியலறிஞர்களின் கூற்றுக்கு அமைய தமிழ்ச்சமூகங்களின் வாழ்க்கை இல்லை என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர். 'அப்பா லீவில் வந்தால் நாம் வீட்டின் முன்புற வாயிலால் நுழைய முடியாது. ஏனெனில் அப்பாவும் அம்மாவும் தனிமையில் இருந்து பேசும் இடமாக அது மாறிவிடும். அப்பாவின் பெட்டியில் கணிசமான இடம் அம்மாவிற்குரிய பொருட்களாகவே இருக்கும். யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. எங்களுக்கென்றும் அப்பா கொண்டு வருவார் ஆனாலும் அம்மாவிற்குரியதைவிட ஒருபடி குறைவாகவே அவை இருக்கும்' என மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாய் தந்தையர் ஒன்றாக அமர்ந்து பேசுவதைக் காண்பதே மிக அரிதாக இருந்த ஒரு காலகட்டத்தில் ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தொலைதூரத்தில் வேலை பார்த்து இடையிடையே வீட்டுக்கு வரும் தகப்பனின் நடவடிக்கைகளையும் தாய் தந்தையரின் அந்நியோன்னியத்தையும்  பெருமையுடனும் நகைச்சுவையுடனும் விவரிக்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவனை தற்போது எம்மால் தரிசிக்க முடியுமா?. வீடு பெரிதாக, பல அறைகளைக் கொண்டமைந்தாலும் சிறு குழந்தைகளுக்கெதிரிலேயே ஒன்றாக படுத்துறங்குவது இன்றைய தலைமுறைப் பெற்றோருக்கு மேற்கத்தைய பாணியாக இருக்கக்கூடும். ஆனால் குழந்தை தூங்கியிருக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு அசண்டையீனமாக குழந்தை எதிரிலேயே குடும்பம் நடத்தும் சில பெற்றோரையும் அதனை இரகசியமாக அவதானிக்கும் குழந்தைகளையும் மேற்கத்தைய சமூகம் நிச்சயம் கொண்டருக்கவில்லை என்ற கசப்பான யதார்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்?.
குழந்தை பேசக் கற்றுக்கொள்ளும் ஆரம்பக்கட்டங்களிலேயே 'நீ அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா' என்ற தாய் அல்லது தகப்பனின் அதுவுமன்றி உறவினரின் 'செல்லங்கொஞ்சும்' வினவல்கள் குழந்தையை ஒன்றில் ஏதாவது ஒரு கட்சியில் சேரும் மனப்பாங்கைக் கற்றுக்கொடுக்கின்றது அல்லது இருவரையும் தனித்தனி திருப்திப்படுத்தும் கெட்டித்தனத்தைக் கற்றுக் கொள்;கின்றது. கணவன் மனைவி உறவு தங்கியிருத்தல் உறவாக இருக்கும் பண்பு அதிகமாக இருக்கும் குடும்பங்களில் கட்சிகட்டிப் பிரிக்கும் பண்பையே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

வலுவற்ற 'வளர்ப்புப் பண்ணைகள்'
கற்றல் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வலுமிக்க நிறுவனங்களாக இருப்பவை கல்வி நிறுவனங்கள். மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனமாக முன்பள்ளிக்கல்வி நிறுவனங்கள் கருதப்படுகின்றன. உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல் உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். முன்பள்ளிப்பருவக் கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது.
மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணை'களாகக் கருதப்படும் இந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்குரியது. இந்நிறுவனங்களின் கற்பித்தற்பணி எமது சமூகத்தில் பெரும்பாலும் அடிப்படைக்கல்வித் தகுதியற்றவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தனது பிள்ளை ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டுமென்ற பெற்றோரின் அவாவானது வருவாய் நோக்குடன் இயங்கும் பல முன்பள்ளிகளின் உருவாக்கத்திற்குக் களமமைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் முன்பள்ளியே தெரியாது வீட்டின் அருகிலுள்ள பாடசாலையில் தாய்மொழியில் கல்வி கற்று பொறியியலாளராகவும் மருத்துவராகவும் உயர்ந்து நடமாடும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மவரிடம் இன்றைய பெற்றோர் கற்றுக்கொள்வது என்ன?. பெரும்பாலான முன்பள்ளிகள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களாக இயங்குகின்றன. குழந்தையின் தொல்லையிலிருந்து பெற்றோர் சற்றுநேரமாவது ஒளிந்திருக்கக்கூடிய புகலிடங்களாகவும் இவை மாறுகின்றன. முன்பள்ளியின் நேரத்தைச் சற்றுக்கூட்டினால் என்ன என்று அங்கலாய்க்கும் தொழில்பார்க்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு மாற்றுவழியாக முன்பள்ளிப் பிள்ளைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களை உருவாக்கினால் என்ன என்ற கருத்துநிலையும் தோற்றம் பெற்றிருக்கின்றது.

ஆட்டங்காணும் அத்திவாரம்
மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை பாடசாலைகள் என்ற கல்வி நிறுவனங்கள். குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்கிறார் ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலி. குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியும் என்ற இவரது  கூற்று ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது.
ஆரம்பக் கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ ஒரே ஆசிரியரின் கீழ் விடப்படுவதும் ஆசிரியர்கள் குழந்தை விரும்பும் பாடத்தை அதனது போக்கில் விளங்கப்படுத்துவதற்கேற்ற சூழலும் எமது கல்விமுறையில இல்லை. புத்தகச் சுமையால் கேள்விக்குறி போல் வளைந்து நிற்கும் குழந்தைகள் உலகில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் இடமின்றி ஆண்டு ஒன்றிலிருந்தே புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவதும் ஐந்து ஆண்டுகள் வரை குழந்தையின் கற்றல் மகிழ்ச்சிகரமானதாகவன்றி அவலம் நிறைந்ததாக மாறியிருப்பதும் பரிதாபத்திற்குரியதொன்று. பரீட்சையில் சித்தியடைவதைவிட முதற்தரத்தில் தேறுவதற்கான தயார்படுத்தல்களே முனைப்புப் பெற்றிருக்கின்றன.

தொழிற்கல்வியின் ஆக்கிரமிப்பு
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20 வீதமாவது தொழிற்கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும். மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம்  போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தலின் அவசியத்தை இது உணர்த்துகிறது. 17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும்  உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்கமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80 வீதம் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது.

ந்தஸ்து நோக்கிலான அழுத்தங்கள்
தமிழ்ச் சமூகத்தின் கல்வி நோக்கம் வெறும் தொழில் நோக்கமாக இருந்திருப்பின் மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கையை சிரமேற்கொண்டு பாடசாலைக்கொரு கைப்பணி நிலையங்களால் எமது பாடசாலைகள் நிரம்பியிருக்கும். அந்தஸ்து மிக்க தொழில் நோக்கி பிள்ளைகளை வலிந்து செலுத்தும் ஆதிக்க சக்தியாகவே இன்றைய தமிழ்க் குடும்பங்களை இனங்காண முடிகிறது. தமது ஆறேழு பிள்ளைகளில் ஒன்றை பொறியிலாளராகவோ அன்றி மருத்துவராகவோ ஆக்குவதற்கு எமது முந்தைய தலைமுறை அவ்வளவு சிரமப்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தனது தேவைகளை மட்டுமன்றி குடும்பத்தின் தேவைகளை அதுவும் கூட்டுக் குடும்பத்திலுள்ள பேரன் பேத்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தமது பிள்ளைகளைப் பழக்கிய பெற்றோரிடமிருந்து தான் மிகச் சிறந்த கல்வியாளர்களை மருத்துவர்களை, பொறியிலாளர்களளை இச்சமூகம் உருவாக்கியிருக்க இன்றைய தலைமுறையோ ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் தம்மை மட்டுப்படுத்தியிருப்பது மட்டுமன்றி தனது தேவைகளைக்கூட தனித்து நிறைவேற்றமுடியாதளவிற்கு குழந்தைகளை அனைத்திலும் தங்கியிருப்போராக மாற்றியிருக்கிறது.  தமது கரங்களால் தமது வயிற்றை நிரப்புவதற்குக்கூட நேரமின்றியோ அல்லது விருப்பமின்றியோ அதுவுமன்றி பெற்றோரின் அதீத கவனிப்பின் தன்மையாலோ  பெற்றோரில் தங்கியிருக்குமளவிற்கு ஆக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் அம்மாவின் கரங்களினால் செலுத்தப்படும் உணவை இயந்திரத்தனமாக உள்வாங்கும் அதே பிள்ளை கொத்து ரொட்டிக் கடையில் தட்டு நிரம்ப கொத்தும் பெப்சி சோடாவுமாக எத்துணை மகிழ்ச்சியாக தனது கரங்களினால் அத்தனை உணவையும் சாப்பிட்டு முடிக்கின்றது என்பது எத்தனை அன்னையருக்குத் தெரியும்?. உண்ணும் உணவின் சத்துக்களை கூடுமானவரையில் உணவுக் கலங்கள் உறுஞ்சுவதற்கு உமிழ்நீரின் உதவி தேவையென்பதையும் சொந்தக்கரங்களால் உண்ணுவதன் மூலமே உமிழ்நீர் சுரப்பிகள் இயங்கும் என்பது படித்த அம்மாக்களுக்கே தெரியவில்லை.

வெறுவாய் மெல்லும் மூன்றாம் நிலைக்கல்வி
மூன்றாம்நிலைக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறைசார் வல்லுனர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகத்தின் பங்கு அளவிடற்கரியது. பல்கலைக்கழகக் கல்வியின் உண்மையான நோக்கம் ஆய்வும் அந்த ஆய்வின் பெறுபேறை சமூகத்தில் பிரயோகிப்பதுமாகும். பல பேராசரியர்களைச் சுடச்சுட உருவாக்கியிருக்கும் பல்கலைக்கழகம் இதுவரை சமூகத்திற்கு தேவையான எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது?  பல்கலைக்கழக சமூகமே தமது பணியிடத்தை அரிவரிப் பள்ளிக்கூடம் என ஏளனம் செய்யுமளவிற்கு இது தரமிறங்கியுள்ளது. மாணவர்களை பாலியல் இம்சை செய்தல், மாணவர்களின் ஆக்கங்களை தமது ஆக்கமாக வெளியிடுதல், தமது வசதியை கருத்திற்கொண்டு பாடவேளைகளை வடிவமைத்தல், போன்ற ஊடகங்களின் எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள கற்பித்தற் சமூகமும், பணம், பதவி, சமூகச் செல்வாக்கு போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும் தராதரமற்ற நியமனங்களை ஊக்குவிக்கும் நிர்வாகக் கட்டமைப்பும் மாணவ சமூகத்தின் பிரதான கற்றல் களங்களாக மாறியிருக்கின்றன.  

உளத்தூண்டல் அற்ற உடற்கல்வி 
தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, குழுப்புரிந்துணர்வு மற்றும் சமூக மென்திறன்களைத் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதில் உடற்கல்விக்கு பாரிய பண்புண்டு. வீட்டுக்குள் விளையாடும் பாண்டிக்குண்டு, தாயம், முற்றத்தில் விளையாடும் கிட்டிப்புல், தாச்சி, போளை அடித்தல்  போன்றவை முதற்கொண்டு நிறுவனமயப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் வரை உள்ளடங்கும். இது மட்டுமன்றி மன ஒருமைப்பாடு, புலனடக்கம், போன்றவற்றைத் தரவல்ல உளப்பயிற்சிகளையும் உள்ளடக்கும். ஆனால் நடைமுறையில் இந்த உடல் உள பயிற்சிகள் வெறும் சம்பிரதாய விளையாட்டுப் போட்டிகளாகவும், அரசியல், சமூக குழு முரண்பாடுகளை ஊக்குவிக்கும் களமாகவுமே எமது சமூகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. சமூக உறுப்பினர்கள் அனைவருமே பங்குகொள்ளக்கூடிய விளையாட்டுகளை கைவிட்டு பதின்மூன்று பேர் கொண்ட கிரிக்கெற் உலகிற்குள் மாய்ந்து போய்க்கிடக்கின்றது இன்றைய பெரும்பான்மை இளைய சமூகம்.

சிறுவர் உரிமை மீறல்கள்
குழந்தையின் தன்மையும் முதிர்ச்சியடைந்த ஒரு மனிதனின் இயல்பும் வேறு பட்டவை என்ற சிந்தனை அறவே எழாத 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து விடுபட்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்படவேண்டியவர்கள் என்ற சிந்தனைத் துடிப்பு தோற்றம் பெற்ற மத, இலக்கிய மலர்ச்சிக் காலத்தை மெல்லக் கடந்து, குழந்தையின் மூளை வளர்ச்சி, உளவியல் தாக்கம், குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்பு, குழந்தைக்கும் சகல குழந்தைகளுக்குமிடையிலான தொடர்பு, குழந்தையின் நடத்தை மாற்றம், அதற்கான சமூக சூழல் பற்றிய அதிகளவிலான கேள்விகளும் ஆய்வுகளும் அக்கறைகளுமாக ஒரு நூற்றாண்டைச் செலவழித்து சிறுவர் உரிமைகளும் நலன் பேணும் திட்டங்களும் வெறும் உபதேசமாகப் போய்விடுமோ என்ற வினா எழுப்பும் நிலையில் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கிறது மனித சமூகம். 15 வயதிலேயே குழந்தைக்கு தாயாகும் சிறுமியரையும் குடும்பப் பாரத்தைச் சுமக்கும் பொறுப்புள்ள சிறுவர்களையும் தம்முன்னே காணும் சிறுவர் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருமே 'குழந்தைகள்' என கணிக்கப்படவேண்டியவர்கள் என்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகடனம் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே கருதப்படுகிறது.

சமூக நெறிபிறழ் நடத்தைகள் 
'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ் என்ற அறிஞர்.  ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல்  ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது. தனிமனிதனையும் அவன் வாழும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பது சாத்தியமற்றது. கற்றல் செயற்பாடானது ஒரு சமூகத்தின் சூழலால் வடிவமைக்கப்படுகின்றது. மனிதனும் சமூகமும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பது போன்றே தனிமனித வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுடனொன்;று பின்னிப்பிணைந்தது. மனித வளர்ச்சியானது சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது போன்று மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு மனிதனின் ஆளுமை பண்புகள் அவன் வாழுகின்ற சமூகத்தின் தன்மையினால் நிர்ணயிக்ககப்படுகின்றது என்பது உண்மையெனில் தற்போதைய எமது சமூகம் பற்றிய தௌ;ளிய அறிவு எமக்கு அவசியமானதாகும்.  ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடத்தைகளைக் கொண்டமைந்த மிகமிகச் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகமாக, எங்கும்; எதிலும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் அதேசமயம் தனிமனிதர்களிடமிருந்து அதிகளவு கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் சமூகமாக, இன ஒடுக்குமுறையை பூரணமாக அனுபவிக்கும் சமூகமாக,. தமது தனித்தன்மைகளை, பாண்பாட்டுக்கோலங்களை மெல்லமெல்ல கைவிட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அலையும் சமூகமாக, நெறிபிறழ் நடத்தைகள் மெல்ல மெல்ல தலையெடுத்தாடுகின்ற சமூகமாக, சமூகச்சிந்தையற்ற கல்வியாளர்களை மிக அதிமாகக் கொண்டிருக்கும் சமூகமாக இனங்காணப்பாட்டிருக்கும் இன்றைய எமது சமூகத்தில் மாணவர்களை சமூக இயல்பினராக்குவது எவ்வாறு என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகவே உள்ளது.

மறைந்து கொண்டு வரும் அனுபவக்கல்வி
கற்றலின் பிரதான களங்களில் முக்கியமானது பிறரது பட்டறிவு எமக்கு படிப்பறிவாவது ஆகும். முந்தைய தலைமுறை சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்கள் கல்வி நிறுவனங்கள் தரும் கற்றலின் பிரயோகங்கள் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்விலிருந்து கருக்குடும்ப வாழ்விற்கு எமது சமூகம் மாறியகையுடன் மூத்தவர்களது அனுபவங்களைப் பகிரும் அரிய வாய்ப்பும் மறைந்து விட்டது. நிலைகொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் அது தலைமுறை இடைவெளி என்ற  பார்வையில் புறக்கணிக்கப்படுகின்றது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சுயமாக உழைத்து முன்னேறிய ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பின்னர் ஊதாரித்தனமாக மாறிய மனைவியை 'ஆபத்துக்குதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தைத் தீராத்தண்ணீர், தரித்திரமறியாப் பெண்டிர்'; என்ற விவேகசிந்தாமணியின் பாடல்களில் பொருத்தமான ஒன்றை மேற்கோள் காட்டும் அன்றைய அப்பாக்கள் பள்ளிக்கூட வாசல் மிதிக்காது வெறும் திண்ணைப் பள்ளியில் கற்றவர்கள் மட்டுமே. திருக்குறள் போன்ற நீதி நூல்களை அதன் பொருளுடன் சொல்லும் வல்லமையை இன்று எத்தனை அப்பாக்கள் கொண்டிருக்கின்றார்கள். குளிக்கும் இடம், கூட்டும் இடம், ஏன் கழிக்கும் இடம் கூட திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் மனப்பாடம் செய்வதற்கு அன்றைய தலைமுறை பயன்படுத்தியதால் தான் இன்றும் புத்தகம் இன்றியே அவற்றை நினைவில் இருத்திப் பாடும் வல்லமையை அது கொண்டிருக்கின்றது. இன்றைய எமது நிலை...?. மனனப் போட்டியில் மதிப்பெண் வாங்குவதுடன்  அது மறந்துவிடுகின்றது. வள்ளுவர் சொல்லும் கசடு அறக்கற்றலும் கற்றபின் அதற்கு அமைய நடத்தலும் ஏட்டுப்படிப்பாகவே நின்றுவிடுகின்றது.

முன்னணி வகிக்கும் முகஸ்துதிகள்
சமூகத்தின கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மனிதனின் மற்றுமோர் முக்கிய கற்றல் களங்களில் ஒன்றாகும். பரந்த கல்வி, ஆழமான அறிவு,  அனுபவ முதிர்ச்சி, ஒழுக்கமான வாழ்க்கை போன்றவற்றால் உயர்ந்து நிற்கும் பெரியவர்களை சமூகத்தின் நிகழ்வுகளுக்கு அழைத்து அவரது வகையால் பெருமையும் பெருமிதமும்; அடைந்த தமிழ்ச்சமூகத்தின் விழாக்கள் உண்மையான பாராட்டுக்களால் அன்று நிரம்பி வழிந்தன. மேடையில் இருப்பர் தொடர்பான மரியாதை அவையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவர் முன்னால் விழுந்து வணங்கி ஆசி பெறுவதும் கூட பெரிய விடயமாகப் போற்றப்பட்டது. ஆனால் இன்றைய சமூகத்தின் நிகழ்வுகள் எமக்குக் கற்றுக்கொடுப்பது உண்மையான பாராட்டுக்களை அல்ல. முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்கும் புறங்கூறுவது எப்படி என்பதையே. இன்றைய அழைப்பிதழ்களில் வெறும் பிரதம விருந்தினரை உள்ளடக்கிய எம்மவரின் அழைப்பிதழ்கள் இந்த முதுகு சொறியும் போக்க்pனால் சிறப்பு விருந்தினர், பின்னர் கௌரவ விருந்தினர் என தமக்கு படிப்பிலோ, பதவியிலோ அல்லது பொருளுதவியோ செய்வார் என நம்புபவர்களையெல்லாம் அழைப்பிதழில் உள்ளடக்கும் பரிதாபம் கடந்த இருதசாப்த வளர்ச்சி மட்டுமே. இது அண்மையில் ஒரு நிகழ்வு இரு பிரதம விருந்தினர்களை உள்ளடக்குமளவிற்கு இன்னொரு படி மேற்சென்றுள்ளதை செய்தி ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறன.

தொலையும் பண்பாட்டு அடையாளங்கள்
செழிப்பும், பொருளாதார வளர்ச்சியும், குழந்தை வளர்ப்பு தொடர்பான அதீத கவனமும் ஏற்படுத்தும் அதிக வாய்ப்பு வசதிகளின் காரணமாக போதைப் பொருட் பாவனை, குடி, கொலை, கொள்ளை, சிறுவர் விபச்சாரம் போன்ற வன்முறைக்குற்றங்களில் சிறுவர்கள் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் போக்கு ஒரு புறமிருக்க இதற்கு நேர் மாறாக வசதி வாய்ப்புக்கள் எதுவுமி;ன்றி வறுமை, பசி, பட்டினி, போசாக்கின்மை, கல்வி அறிவின்மை என்பவற்றின் காரணமாக குழந்தையிலேயே குடும்பப் பாரத்தை சுமக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஏழைக்குடும்ப சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தொலைக்காட்சிப் படங்கள் விளையாட்டுக்கள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளை பார்த்ததும் 'உலகமே இப்படித்தான், இதையே தான் ஒவ்வொருவரும் செய்கின்றனர் எனவே நாமும் செய்யலாம்' என்ற தோற்றப்பாட்டை சிறுவர்கள் பெறுவதும் வன்முறை இங்கு அதிகரிக்க காரணம் எனப்படுகிறது.
ஏனைய பல சமூகங்களுக்கு இல்லாத அளவு போட்டி மனப்பான்மையை தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் வியாபார சந்தையில் அதிக கேள்வியுள்ள பொருளாக காணப்படுவது கல்வி என்ற வியாபாரப் பண்டம். கல்வியின் விற்பனையாளர்கள் ஆசிரியர்கள். விளம்பரமின்றியே மிக அதிகளவில் விற்பனையாகும் பொருளும் கல்வியே. தனக்கென தனித்துவப் பண்புகளை தக்க வைத்துக்கொண்ட தமிழ்ச்சமூகத்தின் இன்றைய பண்பு மயப்படுதல். ஏனைய சமூகங்கள் தம்மை அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுத்த ஏதாவது ஒரு அடையாளத்தை, ஆகக் குறைந்தது தமது ஆடையணிகளிலாவது (அது சீக்கியர்களின் தலைப்பாகையாகவோ, முஸ்லிம்களின் தொப்பியாகவோ) பேணுவதாக இருக்க எமக்கென தனித்த அடையாளம் இன்றி உலகில் எதுவெல்லாம் புழக்கத்திற்கு வருகின்றதோ அவற்றை காட்சிப்படுத்தும் பொம்மைகளாகவே எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. கல்விச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் ஆரம்ப காலங்களில் நாம் வாத்தியார் என அழைக்pன்ற அன்றைய உபாத்தியாயர்களை பாடசாலைக்குள் மட்டுமன்றி பாடசாலைக்கு வெளியிலேயே சமூகத்தின் எந்தவொரு நிகழ்விலும் அதே கோலத்தில் இனங்காணக்கூடிய ஒரு வாய்ப்பும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று சீருடைகள், ஒழுக்க அம்சங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மாணவர்களிடம் மட்டும் திணிக்கப்படும் தன்மையே பெரும்பாலும் உண்டு. இதிலிருந்து தெரிவது என்ன ?.  மாணவ சமூகத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளோ ஒழுங்கு நடவடிக்கைகளோ பாடசாலையுடன் மட்டும் தான் என்ற ஆழமான உணர்வும் அதனை கழற்றி எறிந்து சுமையிலிருந்து விடுபடும்; தருணத்தை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற உணர்வும்  மிக அதிகளவில் உண்டு. சமூகத்தின் நேர்க்கணிய மாற்றத்தை கற்பதன் மூலமே சமூக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்கலாமேயன்றி எதிர்க்கணிய மாற்றங்களினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு மனிதனை சமூக இயல்பினராக்குதல் சாத்தியமற்றது.

அதிகரிக்கும் விலகல்களும் இடைவெளிகளும்;
பிள்ளைகளை தேடல் உணர்வு அதிகமாக இருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் போடும் கட்டளைகளில் பிரதானமானது மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகளில் பிள்ளைகளை சேர்க்கவேண்டாம் என ஆசிரியர்களுடன் சண்டை பிடிக்கும் பெற்றோர்கள், தனியார் கல்வி நிலையங்களில் மட்டுமன்றி அதற்கும் மேலாக தனிப்பட்ட வீட்டு ரியூசனில் அதிகம் செலவழிக்கும் பெற்றோர்கள் பள்ளி நிகழ்வுகளில் அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.
வீட்டுக்கும் வீட்டுக்கு வெளியேயான வாழ்க்கைக்குமிடையிலான விலகல்களும் இடைவெளிகளும் அதிகரித்துச் செல்லும் ஒரு சமூகமாக எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. பாடசாலையில் அறஞ்செய விரும்பு எனப் படிக்கும் குழந்தை வீட்டில் பிச்சைக்காரன் வந்ததும் படலையைச் சாத்தும் அப்பாவையோ அல்லது அம்மாவையோ பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் குழப்பமடைகின்றது. பாடசாலைக் கல்வியை ஊக்குவிப்பதைவிடுத்து தனியார் கல்வி நிலையங்களுக்கு வரத் தூண்டும் ஆசிரியர்கள், போதைவஸ்து பாவனைக்கு தண்டனை கொடுத்துவிட்டு வீட்டிலோ களியாட்ட நிகழ்விலோ அவற்றை நுகரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், வீட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் காரணங்காட்டி ஒருசிலரை ஒதுக்கும் கூட்டாளிக் குழுக்கள் அனைத்துமே இந்த இடைவெளிகளை மேலும் ஆழமாக்குகின்றன. இத்தகைய குழப்பங்கள் நடைமுறைமுறை வாழ்க்கைக்கும் பாடசாலைக் கல்விக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற ஆழமான உணர்வை சிறுவயதிலிருந்தே குழந்தையிடம் விதைத்துவிடுகின்றது.

முடிவுரை
சவால்;களைப் பட்டியலிட்டுவிட்டு தீர்வை தராமல் விடுதல் எந்தவொரு பயனுமற்றது. தனக்கென தனித்தன்மையைக் கொண்ட சமூகங்களாக ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடையுமெனில் முரண்கள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்புண்டு. வெறும் அரசியல் பிரகடனமோ அல்லது நனவாக்க முடியாத கனவோ எதுவாக இருப்பினும் 'அயல் பாடசாலையை சிறந்த பாடசாலையாக்குதல் எண்ற கல்வியமைச்சரின் பிரகடனம் சமூக சிந்தையுள்ள மனிதனை உருவாக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களிற்கும் தெம்பு தரும் ஒரு செய்தியாகும். தாய்மைநிலையுடன் மிக தொலை தூர பணியிடத்திற்குச் செல்தலின் சிரமம், சக விளையாட்டுத் தோழரை விட்டு சமூக பொருளாதார கலாசார அம்சங்களில் வேறுபட்ட குழுக்களுடன் தன்னை இசைவாக்கம் செய்வதில் ஒரு மாணவனுக்கு இருக்கும் சிரமம். ஓய்வு நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்வதன் சிரமம் போன்றவை சொந்தப் பாடசாலையில் கற்பதன் மூலமோ வேலை பார்ப்பதன் மூலமோ குறையுமெனில் சமூக இயல்பினராக்குவதிலுள்ள சவால்களும் குறைவதற்கு இடமுண்டு. எமக்கு முந்திய தலைமுறையின் ஐக்கியப்பட்ட ஒழுக்க, பண்பாட்டு அம்சங்களும் இன்றை தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளும் இணையுமெனில் தனித்தன்மையும் சமூக சிந்தையுமுள்ள மேதைகளை இச்சமூகம் அதிகளவில் கொண்டு சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம்.

உசாத்துணைகள்
1.  Eshleman, Adam(2009).  Probing Question: Can babies learn in utero?. http://news.psu.edu/ story/ 141254/2009/02/23/research/probing-question-can-babies-learn-utero
2. சந்தானம்,எஸ். (1987). கல்வியின் சமூக தத்துவ அடிப்படைகள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.-
3. அமனஷ்வீலி,ச. (1987) குழந்தைகள் வாழ்க. மொழிபெயர்ப்பு. இரா.பாஸ்கரன். மொஸ்கோ: முன்னேற்றப்பதிப்பகம்.
4. சந்திரசேகரம்,சோ. (2006). முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம். அகவிழி. 2(22). யூன் 2006. ப13-15.
5. நவாஸ்தீன்,ப.மு.(2006). இடைநிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்கள். அகவிழி. 2(23). யூலை. 2006. ப12-17.

Sunday, November 08, 2015

முரண்களுக்குள் தொலையும் முழுமை



குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.


இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டியது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.



கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.



'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.



சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால்தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.



குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.



துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.



ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.



இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.



"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.



முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.







Saturday, September 13, 2014

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்



ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்

1.அறிமுகம்
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. நிகழ்வு வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.  
ஒரு சமூகத்தை அடையாளத்தை உறுதி செய்வது அந்த சமூகத்தின் எழுத்துருவப் பதிவேடுகள். இது வெளியிடப்பட்டதாகவோ வெளியிடப்படாததாகவோ இருக்கலாம். தனிமனிதனின் அடையாள அட்டை, தகுதிச் சான்றிதழ்கள், அவனது நாட்குறிப்பேடு, காணி உறுதி போன்றவை வெளியிடப்படாத ஆவணம். தனிமனிதனின் சிந்தனையிலிருந்து உருவாக்கம் பெற்று அது அச்சு வடிவம் பெறும்போது அது வெளியிடப்பட்ட ஆவணம். தனிமனிதன் போன்றே இந்த ஆவணங்கள் குடும்பம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, நாடு சார்ந்தவை எனப் பரந்;துபட்டதாகவும், தொடர் செயற்பாடு கொண்டதாகவும் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்;
இலங்கைத் தமிழர் என்ற சொற்பதம் உள்நாடு சார்ந்து இலங்கைத் தீவின் வட  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரையும் வெளிநாடு சார்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழரையும்  உள்ளடக்குகின்றது.   ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் 3000 ஆண்டு கால பழமையை கொண்டிருந்தபோதும் கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறே எமது கைக்கும் கிடைக்கும் வரலாறாக உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு ஈழத் தமிழ்ச் சமூகம் ஆவணப்படுத்தல் செயற்பாட்டில் மிகப்பலவீனமான சமூகம் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு. ஈழத்தமிழர் வாழ்வியலில் தனிநபரை விட சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தகவலைப் பதிந்து வைப்பதற்கு ஏற்ற நிரந்தர மற்றும் நீடித்துழைக்கக்கூடிய சாதனங்களின் இல்லாமை, வாய்மொழிப் பாரம்பரியத்தில் அதிகம் தங்கியிருக்கும் பண்பு போன்றவை ஆவணவாக்கச் செயற்பாடு சார்ந்து பலவீனமான சமூகம் என்ற கருத்துநிலைக்குள் ஈழத்தமிழ்ச்சமூகத்தை சுலபமாக தள்ளியிருப்பதும், கடந்த இரு நூற்றாண்டு கால வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அதன் ஆவணவாக்கச் செயற்பாட்டை அறிவதும் சாத்தியமாகிறது.

ஆவணவாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதொன்றல்ல. பதப்படுத்திய பனையோலைகள் மட்டுமே தாள்களின் கண்டுபிடிப்புக்கு முந்திய ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஒரேயொரு  பதிவு ஊடகமாக இருந்தவகையில் படியெடுத்தல் மூலமான ஆவணவாக்கச் செயற்பாடு பரவலாக இருந்திருக்கிறது என்பதையே நாவலர் மற்றும் சி.வை.தாவின் பதிப்புரைகளில் ஒரே விடயம் தொடர்பாக பல ஏட்டுப் பிரதிகள் பயன்பாட்டில் இருந்தமை புலப்படுத்துகின்றது. ஆரம்பகாலத்தில்  அரச குடும்பத்துடன் மட்டுமே  மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிந்தனைப் பதிவேடுகளின் பயன்பாடு, இலவசக் கல்வி, தாள்களின் அறிமுகம் மற்றும் அச்சின் கண்டுபிடிப்பு போன்றவற்றால்  பொதுசனமயப்படுத்தப்பட்ட காலமுதற்கொண்டு இன்றுவரை பல பண்புகளைக் கொண்டிருக்கிறது.

1.1 ஆவணவாக்கம்: வரைவிலக்கணம்
ஆவணவாக்கம் அல்லது ஆவணப்படுத்தல் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் கொண்டது. பொதுவான நோக்கில் தரவுகள் நிகழ்வுகள் தகவல்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பதிகின்ற ஒரு செயற்பாடே ஆவணவாக்கம் (னுழஉரஅநவெயவழைn) என்ற பெயர் கொண்டழைக்கப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் ஆவணங்களை பெறுதல் கையாளுதல், தொடர்புபடுத்தல் போன்ற செயல்முறைகள் உள்ளடங்கிய கற்கையாக இது பொருள் கொள்ளப்படுகின்றது. (ர்யசசழன 1987). நிகழ்நிலை நூலகத் தகவல் அறிவியல் அகராதி ஒன்று ஆவணவாக்கம் சார்ந்து பொதுநோக்கு, நூலகவியல், தகவல் அறிவியல், புலமை சார் வெளியீடுகள், தரவுச் செய்முறை மற்றும் ஆவணக்காப்பகம் என ஆறு வகையான வரைவிலக்கணங்களைத் தருகின்றது. பொதுவான நோக்கில் எந்தவொரு செய்முறை சார்ந்த முறையான எழுத்துவடிவ விளக்கம் ஆவணவாக்கம் என பொருள் கொள்ளப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் நிறுவன வளங்களை பாதுகாக்குமுகமாகவும் ஆய்வுக்கு உதவும் வகையிலும் விசேட ஆவணங்களை குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டம் சார்ந்த ஆவணங்களை முறைப்படி சேகரித்தல் ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை உள்ளடக்குகின்றது. தகவல் அறிவியல் சார்ந்து புலமைசார் வெளியீடு என்ற வகையில் ஆய்வு முயற்சிக்கு துணை போகின்ற தகவல்களை மேற்கோள் காட்டும் நடைமுறை ஆவணவாக்கம்; எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆவணக் காப்பகங்களில் உசாத்துணை நோக்கத்துக்காகவும் பாவனையாளருக்கான தேடுதல் கருவியாக உதவும் வகையிலும் பதிவேடுகளுக்கு விபரங்களைத் தயாரித்து ஒழுங்கமைக்கும் செயற்பாடாக கருதப்படுகின்றது. தரவுச் செய்முறையில் பொறிமுறை வாசிப்பு தரவுக் கோவைகளை உருவாக்குதல், செயற்படுத்தல், பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படுகின்ற விரிவான தகவல்களாக இது பொருள் கொள்ளப்படுகின்றது.(சுநவைண  2004).
ஆவணவாக்கம் என்ற பதம்  அது பயன்படுத்தப்படும் தகுதியினடிப்படையில் வௌ;வேறுபட்ட பொருள் கொண்டதென்று கூறும் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர் இரங்கநாதன்; நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக  விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரினநுண்ணினக் கருத்துப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப்பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (சுயபெயயெவாயn 1974). 

ஆய்வும் ஆவணவாக்கமும்
ஈழத்தமிழ் இலக்கிய உருவாக்கங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆய்வுக்கும் ஆவணவாக்கத்துக்கும் இடையிலான தனித்தன்மைகள், வேறுபாடு மற்றும் உறவுநிலைகளைத்  தெளிவாகப் புரிந்து கொள்ளாமையாகும். இதனால் ஆவணவாக்கப் பண்புகளை மிகுதியாகக் கொண்ட இலக்கியங்கள் ஆய்வு நூல் எனப் படைப்பாளரால் விதந்துரைக்கப்படுவது பொதுவான போக்காக உள்ளது. ஆய்வு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அறிவின் இருப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டு புதிய அறிவை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது. ஆவணவாக்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவை உள்ளது உள்ளபடியேயோ, சுருக்கியோ, விரித்தோ, குறை களைந்தோ, தொகுத்தோ மீள உருவாக்கப்படுவது. ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்பாகவோ, ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றின் தொடர்ச்சியாகவோ அன்றி அதன் இற்றைப்படுத்தலாகவோ அமையலாம். ஆவணவாக்கம் இன்றேல் ஆய்வு இல்லை. ஆய்வுக்கு மூலமே ஆவணவாக்கம். இதன்காரணமாகவே ஆவணவாக்கம் அறிவியல் துறையாக (னுழஉரஅநவெயவழைn ளுஉநைnஉந) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனி நிறுவனமாகவோ அல்லது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவோ இயங்கி தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ளுதல், செய்முறைப்படுத்துதல், பாதுகாத்தல், சுருக்கப்படுத்தல், சாராம்சம் தயாரித்தல், சொல்லடைவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் ஆவணவாக்க நிலையங்கள் என  அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட துறை சார்பாக வெளியாகின்ற அண்மைக்காலத் தகவல்களைச் சேகரித்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் சாதாரண நூல்விவரப்பட்டியல் முதற்கொண்டு  குறிப்பிட்ட துறை சார்பாக வெளியிடப்படுகின்ற அண்மைக்கால வெளியீடுகளை தேடிக் கண்டுபிடித்துச், சேகரித்து, ஒழுங்குபடுத்தி, அத்துறையின் வளர்ச்சிநிலை பற்றிய மதிப்பீட்டை புதிய ஆக்கமாக ஆய்வாளருக்கு வழங்கும் பொருட்படிநிலையறிக்கைகள் (ளுவயவந-ழக-வாந-யசவ-சுநிழசவ)  வரை இவற்றின் ஆவணவாக்கச் செயற்பாடுகள் பரந்து பட்டதாகவும் ஆழமானதாகவும் அமையும். ஆவணவாக்கத்தின் மிகச் சிறந்த பெறுபேறாக உருவாக்கப்படும் பொருட்படிநிலை அறிக்கைகள் ஆய்வுக்கான அத்திவாரமாக அறிவியல் சார்ந்த துறைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுத்தப்படுவதுடன் இதற்கான உருவாக்கச் செலவு ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை கூடிக் குறையும்.  துரதிருஷ்டவசமாக ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு சார்ந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை ஆவணவாக்கச் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தபட்டுவிடுகின்ற, ஆய்வுக்கான ஆரம்ப முயற்சிகளாக இருப்பதே கண்கூடு. 

1.2 ஆவணவாக்கம் - வகைகள்
பரந்த நோக்கில் ஆவணவாக்கத்தை மூலவகை ஆவணவாக்கம் (ளுழரசஉந னுழஉரஅநவெயவழைn) கருவி வகை ஆவணவாக்கம்; (வுழழட வலிந னழஉரஅநவெயவழைn) என இருபெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். மூல வகை ஆவணவாக்கத்தில் தரவு, நிகழ்வு மற்றும் தகவல்கள் கூடியவரை உள்ளது உள்ளபடியே பதியப்படுகின்றன. இது அன்றைய சுவடிப்படியெடுப்பு முதற்கொண்டு இன்றைய முழுப்பாட ஆவணப்படுத்தல் (குரடட வநஒவ னுழஉரஅநவெயவழைn) செயற்பாடுவரை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மூல ஆவணத்தை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு கருதி படியெடுத்தல், குறிப்பிட்ட ஒரு ஆவணம் பல பிரதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதித்து, ஒப்பு நோக்கி மூல ஆவணத்தை இனங்கண்டு பதிப்பித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களை அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த ஆவணங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து வெளியிடுதல், கள ஆய்வின் மூலம் வாய்மொழி வரலாறுகள் மற்றும் பாடல்களைப் பதிதல், பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் போன்றவை மூலவகை ஆவணவாக்கத்தில். கருவி வகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதல் என்பதாகும். இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விபரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு, சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும்.

ஆவணவாக்கத்தின் பண்புகளின் அடிப்படையில் பதிப்புசார் ஆவணவாக்கம் தொகுப்புசார் ஆவணவாக்கம் என்ற இருபெரும் பண்புகளாக வகைப்படுத்தலாம். பொதுவான நோக்கில் தொகுப்புப் பணி என்பது பரந்த பொருள் கொண்டது. குறிப்பிட்ட பொருள் சார்ந்த தரவுகள், தகவல்கள் நிகழ்வுகள் போன்றவற்றை பலதரப்பட்ட ஆவணம் சார்ந்த மற்றும் ஆவணம் சாராத தகவல் வளங்களிலிருந்து தேடிச் சேகரித்து பதிதலை இது குறிக்கின்றது. நூலகவியல் நோக்கில் தொகுப்புப் பணி என்பது படைப்புகளின் தொகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. இது தனித்த ஒரு படைப்பாளரின் பல ஆக்கங்களை தொகுத்தலாகவோ அல்லது பல படைப்பாளரின் ஆக்கங்களின் தொகுப்பாகவோ அமையக் கூடியது. மூல ஆவணத்தில் எந்தவொருமாற்றத்தையும் செய்யாது இது மேற்கொள்ளபடுவது. பரந்த நோக்கில் குறிப்பிட்ட கால வரையறையில் குறித்த துறை சார்நத அல்லது குறித்த படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற செயற்பாடும் தொகுப்புபணியாகவே பார்க்கப்;படுகின்றது. பதிப்புப் பணி என்பது தமிழ்ச் சூழலில்; பலதரப்பட்ட வகையில் பொருள் கொள்ளப்படுகின்றது. நூல் ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளியிடும் செயற்பாடு மற்றும் அச்சிடுதல் செயற்பாடு போன்றவையும் பதிப்புப் பணி என்றே பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு அச்சிடுதல் (pசiவெiபெ)இ பதிப்பித்தல் (நனவைiபெ)இ வெளியிடுதல் (Pரடிடiளாiபெ)இ மீள்பதிப்பு (சுநிசiவெ) ஆகிய நான்கு பதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பான தெளிவு அவசியமானது.  பதிப்பு வேறு. வெளியீடு வேறு. ஏற்கனவே உள்ள ஒன்றை திருத்தம் செய்தோ அன்றி செய்யாமலோ மீள வெளியிடுவது பதிப்புப் பணி. ஆக்கம் ஒன்றை அந்த ஆக்கத்தின் படைப்பாளரோ அல்லது வேறு தனிநபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்று வெளியிடுவது வெளியீட்டுப் பணி. வெளியிடுவதற்கான அச்சிடுதல் பணிகளை மேற்கொள்வது அச்சிடுதல் பணி. வெளியிட்ட பிரதிகள் போதாதபோது அதனை இற்றைப்படுத்தாமலோ, மீளாய்வு செய்யாமலோ அப்படியே மீள வெளியிடுவது மீள்பதிப்பு.  சமூகத்தில் குறிப்பிட்ட ஆக்கத்தின் ஆசிரியர் அறியப்படாதவிடத்து பாதுகாப்பு நோக்கங்கருதியும் பயன்பாடு கருதியும் அதனைப் மீளப்படியெடுத்தல், பருவ இதழ்களில் அல்லது மாநாட்டு வெளியீடுகளில் வெளியிடும்பொருட்டு பதிப்புக்குழு ஒன்றினூடாக ஆய்வுக் கட்டுரைகளை அதன் ஆசிரியரைக் கொண்டே திருத்துவித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட துறைசார்ந்த அல்லது குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களை தேடிச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வெளியிடுதல் போன்றவை பதிப்புப் பணிகளில் உள்ளடங்கும். பதிப்புப் பணியானது பலதரப்பட்ட பண்புகளையும் பல படிநிலைகளையும் கடந்து வந்திருக்கிறது. சுவடிகள் மற்றும் நூல்களிலிருந்து எழுதி எடுத்து பாதுகாத்தல், சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளாக தாள்களில் அல்லது சுவடிகளில் இருப்பவற்றை அப்படியே அச்சு வடிவத்துக்கு மாற்றுதல், பல சுவடிகளை ஒப்பு நோக்கி பாடவேறுபாடுகளை உள்ளடக்கி மீள வெளியிடுதல்இ ஒரு ஆக்கம் சார்ந்து எழுதப்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை தொகுத்து வெளியிடுதல், ஒரு ஆக்கத்தை பயன்படுத்துவதற்கான பல்வேடு தேடல் வழிமுறைகளை ஆக்கத்தின் முன்னே அல்லது பின்னே  உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பதிப்புப் பணியில் உள்ளடங்குகின்றன.

ஆவணத்தின் உருவமைப்பு சார்ந்து இது சுவடிகள், பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், இலத்திரனியல் வளங்கள் போன்ற நூலுருச் சாதனங்களை ஆவணப்படுத்தலை குறிக்கிறது. தொழிற்பாடு சார்ந்து நிகழ்வுகள் தரவுகளைப் பதிதல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இலக்கியங்களை பதிப்பித்தல், தொகுத்தல், சொல்லடைவுபடுத்தல், சாராம்சப்படுத்தல் போன்றன உள்ளடங்குகின்றன. ஆவணப்படுத்தலின் வியாபகத் தன்மை சார்ந்து தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற வகையில் இந்த ஆவணவாக்கச் செயற்பாடு நடைமுறையில் உண்டு.


2. ஆய்வின் நோக்கம், பிரச்சனை மற்றும் ஆய்வுமுறைமை
இந்த ஆய்வின் நோக்கம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணலும் முறைப்படி வகைப்படுத்தலுமாகும். இவ்வாய்வானது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கம் தொடர்பான பேணப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையிலான விரிவான இலக்கியமீளாய்வின் வழி பெறப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் செவ்வைபார்க்கப்பட்ட  தரவுகளைத் தேவைக்கேற்ப வரலாற்று, விவரண உத்திகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணவும் முறைப்படி வகைப்படுத்தவும் முனைந்து நிற்கிறது.

ஆய்வில் சரியான தகவல்களைச் சேகரித்து அவற்றை பரிசோதித்துப் புதிய நோக்குகளையும் வெளிப்படுத்தல்களையும் ஒப்பீடுகளையும் இனங்காணும் வகையில் ஆய்வு முறைமை அமைவது இன்றியமையாதது.     இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில் ஆய்வுமுறைமையானது. தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்று ரீதியான நிரற்படுத்தல்களையும்,  கோட்பாட்டு ரீதியான வகையீடுகளையும், எளிதில் விளக்கிக்கூறும் வகையில் தொடர்புபடுத்தி; விளக்கிக்கூறும் விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனித்து விவரண முறைமையினை மாத்திரம் பின்பற்றின் அது பண்புகளை வகைப்படுத்தத் தவறிவிடும் என்பதாலும், வரலாற்று ரீதியான பார்வை தகவற் சேகரிப்பு என்ற வட்டத்தினுள் ஆய்வை முடிவுறுத்;த முனையும் என்ற காரணத்தினாலும் ஆராய்ந்து பெறப்பட்ட ஒத்திசைவான முறைமைகள் பலவற்றை இணைத்து ஆய்வின் முழுமையான பரிமாணத்தை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு முறைமையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

4. இனங்காணப்பட்ட ஆவணவாக்கப்பண்புகள்
கீழே குறிப்பிடப்படுகின்ற ஆவணவாக்கப்பண்புகள் குறித்த ஆவணத்திற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பண்பு அல்ல. ஏனெனில் குறித்தவொரு ஆக்கம் கீழே குறிப்பிடப்படும் பண்புகளில் ஒன் றையோ அல்லது பலவற்றையோ கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது எனினும் அந்த ஆக்கத்தில் எந்தப் பண்பு மேலோங்கியிருக்கின்றதோ அந்தப் பண்பினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆக்கங்களில் ஆய்வுத்தன்மை அதிகமாக இருக்கக்கூடும் எனினும் பிரதான பண்பு ஆவணவாக்கமெனில் அதுவே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எழுந்த அத்தனை ஆக்கங்களையும் இங்கு பட்டியல்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தருவதும் கூடியவரையில் ஆரம்பகால இலக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக கையாள்வதும் இதன் நோக்கமாகும். அவை கிடைக்காத போது தற்போதைய ஆக்கங்களின் மாதிரிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி பண்பாடு மற்றும் பொருட்துறை சார்ந்தவை என பலதரப்படும். இவை தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்படுபவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் முன்னோடி என்ற பெருமை சைமன் காசிச்செட்டி அவர்களையே சாரும். இவரது 'தமிழ் புளுராக்' என்ற தமிழ்ப் புலவர் சரிதமும் சிலோன் கசற்றியரும் (1834) ஆய்வுடன் இணைந்த மிக முக்கியமான ஆவணவாக்கப் பணிகளாகும். சிலோன் கசற்றியர் நாடு சார்ந்த வகையில் இலங்கை பற்றிய புவியியல் ரீதியான தகவல் அனைத்தையும் அகர ஒழுங்கில் தொகுத்து தருகின்றது. இதற்கான தரவுகளை நொக்ஸ், கோர்டின், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களிலிருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும்  பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. (பூலோகசிங்கம் 1970). ஊர் சார்ந்த வகையில் ஆத்மஜோதி நா. முத்தையாவின் ஏழாலை(1977), எங்களுர் ஏழாலையூர்(1994) சீர் இணுவைத் திருவூர் (2004), புங்குடுதீவு மான்மியம் (2012) போன்றன புவியியல் அம்சங்களை மட்டுமன்றி ஊர் தொடர்பான தகவல்களை கூடுதலான வரையில் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கலாநிதி பாலசுந்தரத்தின் இடப்பெயராய்வு: காங்கேயன் வட்டாரம்(1988) வடமராட்சி தென்மராட்சி (1989) போன்றவை மற்றும் ஊர்ப் பெயர் தோன்றிய வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நாவலர் அச்சகத்தினால் 1902இல் வெளியிடப்பட்ட அபிதானகோசம் ஈழத்தின் முதலாவது கலைக்களஞ்சியம்  என்ற பெருமையைப் பெறுவது. வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.

வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் தனிநபர் சார்ந்ததாகவோ அன்றி குடும்ப வரலாறாகவோ அமையலாம். இதுதவிர தனிநபர் ஒருவரை மையப்படுத்திய விரிவான ஆவணவாக்கமாகவோ அல்லது பல நபர்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கமாகவோ இருக்கலாம். தமிழ் இலக்கியத் துறையில் தமிழ்ப்புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை ஒரே நூலில் உள்ளடக்கி வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமையைப் பெறும் சைமன் காசிச்செட்டி அவர்களின் 'தமிழ் புளுட்டாக்'(1859) என்னும் தமிழ்ப்புலவர் சரிதம் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் அவர்களின் ஆசிரியர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூலாகும். 197 தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூல் உருவாக்கத்திற்கான தகவல் சேகரிப்பானது ஒரு தசாப்பதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது என்பதை 1840ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சிலோன் மகசின் என்ற சஞ்சிகையில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தியிரண்டு அறிஞர்களின் செய்திகள் சான்றாக உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்(1886) முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம்(1916), கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1933) போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

முத்துக் குமாரசுவாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட குமாரசுவாமிப்புலவர் வரலாறு (1970), வைத்திலிங்கத்தின் சேர். பொன் இராமனாதனின் வரலாறு(1971), கனக செந்திநாதனின் கவின் கலைக்கு ஒரு கலாகேசரி (1974) போன்றவை மிக விரிவான வகையில்  தனிநபர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதற்குப் பின்னரான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்படும் மணி விழா மற்றும் வைர விழா சார்ந்தோ அன்றி அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா சார்ந்தோ வெளியிடப்படும் சிறப்பு மலர்களினூடாகவோ தனிநபர் வரலாறுகள்  எண்ணிறந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1901இல் வெளியிடப்பட்ட விநாசித்தம்பி அவர்களின் 'அயnயைஅpயவாயைச ளுயவொயவாiஅரசயi' என்ற ஆங்கில நூலானது குடும்ப வரலாறை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதே போன்று தமிழில் எழுதப்பட்ட குடும்ப வரலாற்று நூலாக காசிநாதனின் 'எமது உற்றார், உறவினர் முறை' (1963) அமைகிறது. சில்லாலை இன்னாசித்தம்பி வைத்திய நிலையத்தால் 1983இல் வெளியிடப்பட்ட காக்கும் கரங்கள் என்ற நூலானது இன்னாசித்தம்பி வைத்திய மரபின் பத்துப் பரம்பரையை இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது.

அனுபவங்களை ஆவணப்படுத்தும் பண்பு
தனிநபர் அனுபவங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள், சொற்பொழிவுகள், மற்றும் கடிதங்கள் வாயிலாகவோ அன்றி பயண இலக்கியங்களாகவோ ஆவணப்படுத்தப்படும் பண்பு பொதுவானதாகும்.  சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சுவாமி சச்சிதானந்தாவின் கைலாசம் கண்டேன் என்ற தலைப்பிலான  பயண அனுபவங்கள்; பின்  1960இல் கண்டி திவ்விய ஜீவன சங்கத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டவரலாற்றில் தனது நூறு நாள் சிறையனுபவங்களை 'தடுப்புக்காவலில் நாம்'(1961) என்ற தலைப்பில் புதுமைலோலனால் தனது மகள் அன்பரசிக்கு மடல்களாக வரையப்பட்டிருக்கிறது. 

மொழிசார் சொற்களை வரிசைப்படுத்தித் தரும் பண்பு
சொற்களின் தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கப் பணியில் நூல்களின் சொல்லடைவாக நூலில் கையாளப்படும் முக்கிய சொற்களையும் அதன் அமைவிட பக்கத்தையும் நூலின் இறுதியில் உள்ளடக்குதல், அருஞ்சொல் அகராதியாக துறை சார்ந்த அருஞ்சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் தருகின்ற வகையில் குறித்த நூலின் ஆரம்ப அல்லது இறுதிப்பகுதியிலோ அன்றி தனிநூலாகவோ உருவாக்கப்படல், மொழியின் சொல்வளத்தை அகர ஒழுங்கில் தரும் ஒரு மொழி, இரு மொழி மற்றும் பலமொழி அகராதி வடிவத்தில் தொகுக்கப்படல், குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அருஞ் சொற்களுக்கான விளக்கங்களைப் பட்டியலிடுகின்ற பொருள் அகராதியாக உருவாக்கப்படல் போன்ற பண்புகளை இனங்காண முடியும்.  

ஜி.யூ போப் அவர்களால் 1900 ம் ஆண்டு திருவாசகத்துக்குச் செய்யப்பட்ட ஆங்கில தமிழ்ச் சொல்லடைவு நூலின் பகுதியாக உருவாக்கப்படும் சொல்லடைவுப் பண்பைக் கொண்டது. தமிழ்மொழியின் சொல்வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல்முயற்சியாக 58,500 சொற்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதியானது (1842),  ஒரு மொழி அகராதிக்கான பண்பைக் கொண்டது.  சங்க இலக்கியங்களிலும், சங்க மருவிய இலக்கியங்களிலும் பிற்றைச் சான்றோர் இலக்கியங்களிலும் வருகின்ற அருஞ்சொற்களாகிய இலக்கியச் சொற்களை தொகுத்து உருவாக்கப்பட்ட குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச் சொல்லகராதி, சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தும் புதிய பண்பை உள்ளடக்கி  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான தமிழ்ச்சொல் அகராதி, ந.சி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி(1950) தமிழ்ப்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி (1953) காலக்குறிப்பு அகராதி 1960, திருக்குறள் அகராதி (1961) போன்றன ஒரு மொழி அகராதிப்பண்பு கொண்டவை.

நூல்விபரத்தரவுகளைத் திரட்டித்தரும் பண்பு
நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.

முறைப்படுத்தப்பட்ட வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. இது படைப்பாளர் நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது பொருள் சார் நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். பொருள் சார் நூல்விவரப்பட்டியலானது நாடு, மொழி, இனம், பொருட்துறை என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையையும் சைமன் காசிச்செட்டியே பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திகதி இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 82 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம் தத்துவம் பற்றிய பகுதியில் 153 நூல்களும் ஆக மொத்தம் 309 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை பதினான்கு பொருட்தலைப்புகளின் கீழ்  பட்டியல்படுத்துகின்ற தனிநாயகம் அடிகளின் 'சுநகநசநnஉந பரனைந வழ வுயஅடை ளுவரனநைள'(1966)இ 1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த நூல்களின் விவரங்களை பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி'(1971)இ இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) என்பன முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டவை. 

அப்புத்துரையின் 'காங்கேயன் கல்விவட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற நூல்விபரப்பட்டியலும், 'டியவவiஉயடழnயை' என்ற பெயரில் மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான செல்வராஜாவின் நூல்விவரப்பட்டியலும் பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.

இலண்டனிலிருந்து 2000ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' குறிப்புரைப் பண்பையும் உள்ளடக்கிய தொன்று.  இலங்கை எழுத்தாளர்களால்,  தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' விளக்க நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. 1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைச் செய்திகளின் பதிவு பேணும் பண்பு
பத்திரிகைச் செய்திகளை வெட்டிப் பொருத்துமான தலைப்புகளில் ஒழுங்குபடுத்தும் பணியானது ஆவணப்படுத்தலின் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை பத்திரிகைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இரண்டும் இனைந்த வகையில் ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் ஆவணவாக்கப்பணியாக கடந்த 45 ஆண்டுகளாக குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் பத்திரிகை துணுக்குச் சேகரிப்பைக் கொள்ள முடியும். இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை வாழ்க்கை வரலாறுகள், சமய வரலாறுகள், பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

இதேபோன்று சுனாமி: பத்திரிகை நறுக்குகள்; என்ற தலைப்பில் சங்கானையைச் சேர்ந்த கணேஷ் அவர்களால் பலதரப்பட்ட பத்திரிகைளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளை யு3 அளவுள்ள 338 தாள்களில் ஒட்டி 34 பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளும் குறிப்பிடப்படவேண்டியதொன்று..

இலங்கையில் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பத்திரிகைகளையும் மையப்படுத்தி 2005இல் பொது நூலகராக தனது பணியை வரித்துக் கொண்ட அனலைதீவு சௌந்தரராஜனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்ட பத்திரிகை நறுக்குகளை உருவாக்கும் பணியானது சுனாமி, வடக்கின் வசந்தம், தேச அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளின் உடுவில் மற்றும் சுன்னாகம் பொது நூலகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது பத்திரிகையில் வெளியாகின்ற கட்டுரைகளை மட்டும்;  வெட்டிப் பொருத்தமான தலைப்புகளின் கீழு; ஒழுங்குபடுத்திச் சேகரிக்கும் பண்பாக இனங்காணப்படுகின்றது. இந்தவகையில் இசை, நடனம், அரங்கு எனக் கலைத்துறையை மட்டும் முதன்மைப்படுத்தி கணிசமான பத்திரிகைத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கும் ஆசிரியர் குகதாசனின் பணியும்; குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தகவல்களைத் தொகுத்தளிக்கும் பண்பு
ஈழத்தமிழ்ச சமூகத்தின் அண்மைக்காலங்களில் அதிகம் இனங்காணப்படும் பண்பாக இது உள்ளது. சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆக்கங்களையோ தகவல்களையோ ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தும் பண்பு ஈழத் தமிழ் இலக்கியங்களின் முக்கிய போக்காக இனங்காணப்படுகிறது. இந்த வகையில் த.இராமநாதபிள்ளையின் இலக்கிய இலக்கண ஆய்வுரைகள்(1965), சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிப்புரைகளை தொகுத்து வெளிவந்த 'தாமோதரம்' (1971), ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தொகுப்பான  ந. சபாரத்தினத்தின் 'ஊரடங்கு வாழ்வு(1985), சற்றடே றிவியூ ஆங்கலப்பத்திரிகைகளின் தலையங்கம் உட்பட பல பதிவுகளை உள்ளடக்கிய சிவநாயகத்தின் ' Pநn யனெ வாந புரn'இ தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பாக தனபாலசிங்கத்தின் நோக்கு மற்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் போன்றவை, பத்தி எழுத்துகளின் தொகுப்பான யேசுராசாவின் தூவானம் போன்றவை இத்தகைய பண்பைக் கொண்டவை. இதே போன்று சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடு.

சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு ஈழத்து இலக்கியங்களில் மிக குறைவாக இனங்காணப்படினும் நாட்டார் பாடல்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவைச் சேர்ந்த த.கைலாயபிள்ளையின் கதிரையப்பபள்ளு(1927), முள்ளியவளையைச்சேர்ந்த சி.ச. அரியகுட்டிப்பிள்ளையின் அருவிச்சிந்து, கதிரையப்பபள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்ற தலைப்பிலான அருவி வெட்டுப்பாடல்கள் (ஆண்டு இல்லை) கீழ்கரவையம்பதி வ.கணபதிப்பிள்ளையின் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி(1934), முல்லைமணியின் கமுகஞ்சண்டை(1979); கல்விவெளியீட்டுத் திணைக்களத்தின் நாட்டார் பாடல்கள்(1976), யாழ்ப்பாணம் மு. இராமலிங்கத்தின் வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்(1961), தி. சதாசிவ ஜயரின் மட்டக்களப்பு வசந்தன் திரட்டு (1961), சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்(1960) குறிப்பிடத்தக்கவை.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அலங்காரரூபன் நாடகம்(1962), மூவிராசாக்கள் நாடகம்(1966), ஞானசவுந்தரி நாடகம்(1967) போன்றவை கூத்துச் சாந்த ஆவணப்படுத்தல் முயற்சியாகும்.
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் திருட்டாந்த சங்கிரம் (1843) பழமொழி சார்ந்து 1823 பழமொழிகளை தொகுப்பாகும். சச்சி மாஸ்ரரின் மக்கள் வாழ்வில் பழமொழி என்பது விளக்கக் கட்டுரைப் பாங்கைக் கொண்டது. சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல் சமூகத்தின் சட்டநெறிகளைத் தொகுத்துத் தரும் ஒரு தொகுப்பு ஆவணப் பண்பு கொண்டது.

உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் பண்பு
நூலகமொன்றின் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படும் உருநிலைச் சேகரிப்புகளில் கலைப்பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவை உள்ளடங்கும். இவை 1. கலை பிரயோக அறிவியல் சார்ந்தவை. (எ-டு விளையாட்டுப் பொருட்கள்) 2. மனிதப்பண்பியல் சார்ந்தவை (எ-டு இசைக்கருவிகள்)  3. அறிவியல் சார்ந்தவை (எ-டு மனித எலும்புத் தொகுதி) 4. சமூக அறிவியல் சார்ந்தவை (நாணயங்கள், தபால் தலைகள்) என நான்கு வகைப்படும். உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் தன்மையில் பொழுதுபோக்கு நோக்கம், பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகிய இரண்டும் முக்கியம் பெறுகின்றன. இந்த வகையில் அருள்சந்திரனின் 'யாழ்ப்பாணப் பெட்டகம்' கணிசமானளவு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கட்டிட அமைப்புகள், கலைகள், பண்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட உருநிலைச் சேகரிப்புகளை 32 பொருட்தலைப்புகளில் 3250 புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறது. தபால்தலைகள் மற்றும் நாணயங்களை அதன் உண்மை வடிவத்தில் ஆவணப்படுத்துவதாக  அனலைதீவு தர்சனின் பணி அமைகிறது. ஆயிரம் மூலிகைத் திட்டத்தினூடாக தமிழர்பிரதேசத்தில் காணப்படும் அரிய மூலிகைகளை ஓரிடத்தில் சேகரித்து பராமரிப்பது மட்டுமன்றி அது தொடர்பான விவரக்குறிப்புகளைப் பட்டியல்படுத்துவதாகவும் மூலிகை பாதுகாப்புச் சபையின் ஸ்தாபகர் வைத்தியர் சந்திரமோகனின் பணி அமைகிறது.

படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு
மூல ஆவணத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது அதனை பாதுகாப்பு நோக்கங்கருதி மீள வெளியிடும் இப்பணியானது எழுதிப் படியெடுத்தல், கையெழுத்துப் பிரதியை அச்சுக்கு மாற்றுதல், கையெழுத்துப் பிரதியை பரிசோதித்து அச்சுக்கு மாற்றுதல், அச்சுப்பிரதியை மீள அச்சிடுதல், அச்சிலுள்ளதை அதன் வடிவத்திலேயே ஆவணப்படுத்தல் போன்ற பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டது. எழுதிப் படியெடுக்கும் பணியானது அச்சின் கண்டுபிடிப்பிற்கு முன்னரான பொது வழக்கிலிருந்த ஆவணவாக்கச் செயற்பாடாகும். நாவலர் மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்ட 19ம் நூற்றாண்டுப் புலமையாளர்களின் பதிப்புப் பணிக்கு மூலமாக இருந்தது எழுத்துமூலத்திலிருந்த மூல ஆவணத்தின் பிரதிகளேயாகும்.  இது சுவடிகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை பல்வேறு பிரதிகளாக ஆக்கும் செயற்பாட்டைக் குறிக்கிறது. பஞ்சாட்சரசர்மாவின் 'அஷரபோதினி', விவிக்த பதாவலி போன்ற கிரியா பத்ததிகள் படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு கொண்டவை.(கோப்பாய் சிவம் 1980)

இதுதவிர அச்சிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதிகள் அனைத்தும் அழிந்தநிலையிலோ எடுக்கமுடியாத நிலையிலோ இருக்கும் அதேசமயம் மீள்பதிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் இல்லாத போது அச்சுப் பிரதியை மீண்டும் கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்திய முயற்சியொன்றும் இவ்வாய்வில் இனங்காணப்பட்டிருக்கிறது. குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச்சொல்லகராதியானது அவரது மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையால் 1965இல் நான்கு தொகுதிகளாக எழுதித் தொகுக்கப்பட்டு குமாரசுவாமிப்புலவர் நூலகத்தில் பேணப்படுகிறது.

அச்சுப்பதிப்பின் வழி பாதுகாக்கும் பண்பு
ஈழத்தமிழரின் பெரும்பாலான ஆரம்பகால இலக்கியங்கள் சுவடிகளில் பதியப்பட்டு பின்னர் கையெழுத்துப்பிரதிகளாக தாள்களில் பேணப்பட்டு அதன் பின்னர் அச்சு வடிவம் பெற்றவை. சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து அது தொடர்பான சுவடிகளை தேடிச் சேகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழாலை க.  பொன்னையா அவர்களின் பதிப்பில் உருவான பரராசசேகரத்தின் ஏழு தொகுதிகள்(1930-36), சொக்கநாதர்தன்வந்திரியம்(1933), செகராசசேகர வைத்தியம், அமிர்தசாகரம்(1927), பதார்த்தசூடாமணி(1927), வைத்தியசிந்தாமணி((1932),, வைத்திய புராணம்((1933), அங்காதிபாதம், வைத்தியதெளிவு(1930) போன்றவை சுவடிநிலையிலிருந்து நேரடியாக அச்சுப்பதிப்பாகவும் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் கவித்திரட்டு(1964) கையெழுத்துப் பிரதிநிலையிலிருந்து அச்சுப்பதிப்பாகவும் மாற்றம் பெற்றவை.

மீள்பதிப்பினூடாக தகவலைப் பரவலாக்கும் பண்பு
தமிழ்மண் பதிப்பகம், ஆசிய கல்விச் சேவை நிறுவனம் ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களை அழியவிடாது பாதுகாக்கும் நோக்குடன் மீpள்பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழ் இலக்கியம் சார்ந்து மீள்பதிப்புப் பணிகள் எண்ணிறந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இதற்கான எடுத்துக்காட்டுகளை இங்கு பட்டியலிடுவது தேவையற்றது எனினும் ஒருசில ஆரம்ப கால நூல்களின் மீள்பதிப்பு பணிகளை குறிப்பிடுவது பொருத்தமானது. மீள்பதிப்புப் பணிகளில் சுன்னாகம் குமாராமிப் புலவரால் பதிப்பிக்கப்பட்ட இதோபதேசம்(1886), சகுலமலைக்குறவஞ்சி நாடகம்(1895) இரண்டும்; குறிப்பிடத்தக்கவை (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை 1970). கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939), சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பாடபேத ஆய்வுடன் கூடிய குறை களையும் பண்பு
சுவடி வடிவில் கவனிப்பாரற்றுக் கிடந்த பழம்பெரும் இலக்கியங்களின் பிரதிகளை தேடிச் சேகரித்து பதிப்பிக்கும் பணியாகவே ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆரம்பகால ஆவணப்படுத்தல் முயற்சிகள் இனங்காணப்படுகின்றது. இத்தகைய பதிப்பு  முன்னோடிகளாக ஆறுமுகநாவலரையும் (நாவலர்) சி.வை.தாமோதரம்பிள்ளையையும் (சி.வை.தா) குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. பதிப்புத் துறையில் 19ம்  நூற்றாண்டின் மத்திய பகுதி நாவலர் காலம் எனப்படுகின்றது. 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே' சி.வை.தாவினால் புகழப்படுமளவிற்கு நாவலரின் பணி மகத்தானது. சிறந்த உரையாசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், பிரசங்கி என்பதற்கும் மேலாக அழிவுறும் நிலையிலிருந்த பெரும்பாலான சுவடி நூல்களை மீளத் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்த ஆவணவியலாளர் என்பது அனைத்திலும் மேலானது. நாவலரின் பதிப்பு முயற்சிகள் 1849இல் சௌந்தியலகரி மூலமும் எல்லப்பநாவலர் உரையும் என்ற நூலுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து நாவலர் சூடாமணிநிகண்டு (1849), நன்னூல் விருத்தியுரை மூலமும் உரையும்(1851), திருக்கோவையார் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்(1860), கொலை மறுத்தல் (1860), மறைகையந்தாதி(1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), உபமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்கமும் (1866) சேதுபுராணம்(1866), இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி (1866), அருட்பா(1866), சிதம்பரமும்மணிக்கோவை(1867), அருணகிரிநாதர் திருவகுப்பு (1867), பதினொராம்திருமுறை(1869), கோயிற்புராணம், நால்வர் நான்மணிமாலை, பெரிய கோயிற்புராணம், பெரியநாயகி கலித்துறை, முதலான எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பிழையறப் பதிப்பிக்கப்பட்டது ( கனகரத்தினம் 2007).

பதிப்புப் பணியில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா காலம் எனப்படுகின்றது. சி.வை.தாவின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழ் அன்னையின் இரு கண்கள் என்றும் இந்த இரண்டையும் பதித்துவியதே சி.வை.தாவுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது என்கிறார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. (கணபதிப்பிள்ளை) இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. பதிப்புப் பணியிலே நாவலரை தனது குருவாகக் கொண்ட சி.வை.தா நாவலரின் மறைவுக்குப் பின்னர் பதிப்புப் பணியையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பதிப்பு முயற்சிகள் 1853இல் தொடங்குகின்றன. நீதிநெறி விளக்கம் (1853), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- சேனாவரையம் (1868), வீரசோழியம் - பெருந்தேவனாருரை(1881), தணிகைப் புராணம், இறையனாரகப்பொருள்- நக்கீரருரை(1883), தொல்காப்பியப் பொருளதிகாரம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம், சூளாமணி(1889), தொல்காப்பியச் சொல்லதிகாரம்(1892) முதலான நூல்களைப் பதிப்பித்து வழங்கியதன் மூலம் சிறந்ததொரு ஆவணவியலாளராக இனங்காணப்படுகின்றார். குமாரசுவாமிப்புலவரின் யாப்பருங்கலக் காரிகை உரை(1900), ஆசாரக்கோவை(1900), நான்மணிக்கடிகை(1900), ஆத்திசூடி வெண்பா மற்றும் சிசேத்திர விளக்கம்(1901), உரிச்சொனிகண்டு, பழமொழி விளக்கம், திருவாதவூரர் புராணம்(1902) ஆகியனவும் இத்தகைய பண்பைக் கொண்டது. 

தொழினுட்பத் துணையுடன் எண்ணிமப்படுத்தும் பண்பு
ஈழத்தமிழர் இலக்கியங்களை எண்ணிமப்படுத்தும் பணியில் நூலக நிறுவனத்தின் பணி அளப்பரியது. இதனால் உருவாக்கப்பட்ட எண்ணிம நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள் உட்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆக்கங்களை முழுமையாக எண்ணிமப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை
மூலவகை ஆவணப்படுத்தலானது பொருட்துறைசார்ந்த புலமையில் முழுக்கமுழுக்க தங்கியிருக்கும் அதேசமயம் கருவிசார் ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை,  ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. 
உசாத்துணைகள்


1. Harrod, Leonard Montague. Harrod’s librarians’ glossary of terms used in librarianship, documentation and the book crafts and reference book. 6th ed. London: Gower.pp254.
2.    Ranganathan,S.R(1974). Physical bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house.. p21.
3.      Reitz, Joan.M. ( 2006). Online Dictionary for Library and Information Science. http://www.abc-clio.com/ ODLIS/ odlis b.aspx
4.      Selvarajah,S.J (1988). Batticaloania: a bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council. 81p
5.      Simon Casie Chitty (1949). The Tamil Plutarch. Colombo: General publishers.135p
6. Thani Nayagam, Xavier S.(1966).  A Reference guide to Tamil Studies: books.Kuala Lumpur:University of Malaya Press.122p.
7. Vali North Cultural society (2008). Yarlppanap pettakam kankardchi-01(The Exhibition on Treasure House of Jaffna-01) Yarl Thinakkural. 14th.Oct.2008. p3.

8.    அப்புத்துரை, சி.(1985). காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள். காங்கேசன் கல்விமலர். காங்கேசன்துறை: காங்கேசன்துறை கல்விவலய அதிபர்கள் சங்கம். பக் 209-223.
9.    கணேசையர், சி(1939). ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம். சென்னை தமிழ்மண் பதிப்பகம். 156ப.
10.    கனகரத்தினம், இரா,. கனகரத்தினம்இ பி(1996). உலகத் தமிழர் ஆவணக் காப்பகம். கண்டி: ஆசிரியர். 26ப.
11.    கோப்பாய் சிவம்(1980). கிரியா பத்ததிகள் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளின் விளக்கப் பட்டியல்.(வெளியிடப்படவில்லை). 
12.    சண்முகதாஸ்,மனோண்மணி (2007). சி.வை.தாமோதரம்பிள்ளை. கொழும்பு: குமரன். ப20.
13.    சதாசிவம்பிள்ளை,அ.(1886) பாவலர் சரித்திர தீபகம்.மானிப்பாய்: ஸ்றோங்அஸ்பரி இயந்திரசாலை.
14.    சந்திரகுமார், எம் (2009). பழைய வரலாறுகள் எதிர்கால ஆவணங்கள்: கணேசுடனான நேர்காணல். யாழ்தீபம்.   றறற.எசையமநளயசi.டம.
15.    நடராசா, எவ்.எக்ஸ்,சி(1970). ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு. கொழும்பு: அரசு வெளியீடு
16.    பூலோகசிங்கம், பொ (1970). தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம். 276ப.
17.    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,கு(1970). குமாரசுவாமிப்புலவர் வரலாறு. சுன்னாகம்: புலவரகம். ப.43
18.    ஜமீல்,எஸ்.எச்.எம் (1994). சுவடி ஆற்றுப்படை. 4 தொகுதிகள். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுக் கழகம். 



http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf