Sunday, July 31, 2005

புனிதங்களிலிருந்து...

புனிதங்களிலிருந்து...


சாணம் புனிதமானது
என்ற
தனது நம்பிக்கை ஒன்றைத் தவிர
அம்மாவுக்கு
அது பற்றி வேறெதுவும் தெரியாது.
தெரிந்து கொள்ளவும் அவள் விரும்புவதில்லை
புனிதமும் புது மண்ணும்
ஒன்றாகக் கலந்து மெழுகாத வரை
புனிதம்
ஒரு போதும்
மண்ணுடன் ஒட்டாது
என்ற உண்மையை
நான் தெரிந்து கொண்ட பின்னரும்
அம்மா மாறத் தயாராய் இல்லை
பொருக்காய் வெடித்துக் கிளம்பும் புனிதத்தின் மீது
புனிதத்தால்
மீண்டும் மீண்டும் பூசிக் கொண்டே இருப்பாள்
அம்மா மாறவே மாட்டாள்
ஆனால்---
என்னைப் போல்
என் பிள்ளைகளும்
அவர்களின் பிள்ளைகளும்
புனிதங்களிலிருந்து
புதிது புதிதாய்
கற்றுக் கொள்வர்

1 comment:

இளங்கோ-டிசே said...

நல்லாயிருக்கின்றது.